அமெரிக்காவில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விமானங்கள்.. தரையிறங்கும் போது விபரீதம்.. 3 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவில் தரையிறங்கும் போது இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலியாகினர்.
Recommended Video
அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியாவின் வாட்சன்வில்லே நகரில் விமான நிலையம் உள்ளது.
இந்த விமான நிலையத்தில் பிற்பகல் சுமார் 3 மணியளவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
மினி பார், 5 வீடுகள், குவியலாக பணம்! மிரள வைத்த போபால் அரசு ஊழியர்! திகைத்த போலீசார்.. பரபர வீடியோ
நேருக்கு நேர் மோதல்
விபத்துக்குள்ளான இரு விமானங்களும் வாட்சன்வில்லே நகரில் உள்ள விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இரண்டு விமானங்களும் ஒரே நேரத்தில் தரையிறங்க முயன்ற போது தான் இந்த விபத்து அரங்கேறியுள்ளது. விமானங்கள் மோதியதும் அதன் பாகங்கள் சிதறி ஓடின. சில பாகங்கள் தீப்பிடித்து எரிந்தன.
3 பேர் பலி
இந்த விபத்து குறித்து அமெரிக்காவின் மத்திய விமான நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ''இரண்டு என்ஜின்கள் கொண்ட செஸ்னா 340 என்ற விமானமும், ஒரு என்ஜின் கொண்ட 152 ரக விமானமும் திடீரென தரையிறங்க முயற்சிக்கும் போது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது'' என்றார். விமானங்கள் மோதிய இந்த பயங்கர விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 பேர் பலியாகினர். மேலும் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் கூறப்படுகிறது.
இணையத்தில் பரவும் புகைப்படங்கள்
இந்த விமான விபத்து தொடர்பாக அமெரிக்க அதிகாரிகள் கூறுகையில், ''விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், விபத்துக்கான காரணம் குறித்தும் விரிவான விசாரணை நடப்பதாகவும் தெரிவித்துள்ளனர். விமானங்கள் விபத்துக்குள்ளாகி, அதன் சேத பாகங்கள் சிதறிக்கிடக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறிப்பாக விமான நிலையத்தின் புல்வெளியில் விமானங்களின் சேதம் அடைந்த பாகங்கள் கரும்புகையுடன் புகைந்து கொண்டிருந்த காட்சிகள் மற்றும் அருகில் உள்ள தெரு ஒன்றில் பாகங்கள் கிடக்கும் காட்சிகள் என பல படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன.
பரபரப்பு
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனினும் இந்த விபத்து தொடர்பான முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை. முன்னதாக கடந்த வியாழக்கிழமை அன்று கலிபோர்னியாவில் இதேபோன்ற ஒரு விமான விபத்து நடைபெற்றது. விமானம் சாலையில் தரையிறங்கி விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு விமானிகள் காயம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.