இதுவரை இல்லாத வகையில் ஜோ பிடனின் டீமில் 25 அமெரிக்கா வாழ் இந்தியர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடனின் (ஜோ பைடன்) பல்வேறு நிர்வாக குழுக்களில் இதுவரை இல்லாத வகையில் 25 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இடம்பெற்றிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக அடுத்த மாதம் ஜோ பிடன் பதவியேற்க உள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் பதவியேற்கிறார். கமலா ஹாரீஸின் தாயார் தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர்.
அமெரிக்க அதிபராக பொறுப்பேற்கும் ஜோ பிடன் பல்வேறு நிர்வாகக் குழுக்களை நியமித்து வருகிறார். இந்த குழுக்களில் இதுவரை 25 அமெரிக்கா வாழ் இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் 15 பேர் கொள்கை முடிவு எடுக்கும் பொறுப்புகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
இவர்களில் செலின் கவுண்டர், நீரா டாண்டன், விவேக் மூர்த்தி, ரோஹினி கோசோக்லு, பரத் ராமமூர்த்தி, வேதாந்த் படே, வினய் ரெட்டி, கவுதம் ராகவன் ஆகியோர் முக்கியமானவர்கள். விவேக் மூர்த்தி, நீரா டாண்டென் ஆகியோர் ஒபாமா அதிபராக இருந்த போதும் முக்கிய பதவிகளில் இருந்தவர்கள்தான்.
செலின் கவுண்டர், அதுல் கவாண்டே, பரத் ராமமூர்த்தி ஆகியோர் தமிழ்நாட்டுடன் தொடர்புடையவர்கள். தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் நிக்கி ஹாலே, சீமா வர்மா என ஒருசில அமெரிக்கா வாழ் இந்தியர்கள்தான் நிர்வாகப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications