இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி விதிக்க போகிறதா அமெரிக்கா? டிரம்ப் கொடுத்த ரியாக்ஷனை பாருங்க
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் இறக்குமதியை தொடர்ந்தால் இந்தியா, சீனா மீது மிகப்பெரிய அளவில் வரி விதிக்கப்படும் என்று சூசகமாக டிரம்ப் கூறியுள்ளார். அமெரிக்கா செனட் உறுப்பினர் லிண்ட்சே கிரகாம் 500 சதவீத வரி விதிக்கும் மசோதவை முன்மொழிந்துள்ள நிலையில், இந்தியா இந்த விவகாரத்தை உன்னிப்பாக கவனித்து வருகிறது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றதில் இருந்தே பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தினம் தினம் அமெரிக்காவில் ஏதேனும் அதிரடிக்கும் பஞ்சம் இல்லாத வகையில், டிரம்பின் நடவடிக்கைகள் இருந்து வருகின்றன. அமெரிக்கா மட்டும் இன்றி சர்வதேச அளவிலும் டிரம்பின் அறிவிப்புகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

90 நாட்களுக்கு நிறுத்திவைப்பு
தேர்தல் பிரசாரத்தின் போதே அமெரிக்க நலனுக்கே முன்னுரிமை அளிப்பேன் எனவும் அமெரிக்காவுக்கு எந்த அளவுக்கு வரி விதிக்கப்படுகிறதோ அதே அளவுக்கு பரஸ்பர வரியை விதிப்பேன் என பேசி வந்த டிரம்ப், ஆட்சிக்கு வந்ததும் வரி விதிப்பையும் அமல்படுத்தினார். இந்தியா உள்பட 100-க்கும் அதிகமான நாடுகளுக்கு பரஸ்பர வரியை விதித்தார். இந்தியாவுக்கு 26 சதவீதம் வரை வரி விதிக்கப்பட்டது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 90 நாட்களுக்கு வரி விதிப்பு முறை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கால அவகாசத்துக்குள் வரி விதிக்கப்பட்ட நாடுகள் அமெரிக்காவுடன் பேசி ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள முன் வர வேண்டும். இல்லையென்றால் மீண்டும் கூடுதல் வரி செயல்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார். இதையடுத்து பல நாடுகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தன.
முதல் கட்டமாக வரி விதிப்பு
இந்தியா உள்ளிட்ட நாடுகளுடன் பரஸ்பர வரி விதிப்பு விவகாரம் தொடர்பாக இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் மேற்கொண்டது. இந்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்ட உள்ளதாக தெரிகிறது. எனினும், பல நாடுகளுடன் ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதையடுத்து முதற்கட்டமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக 14 நாடுகளுக்கு கூடுதல் வரியை டொனால்ட் டிரம்ப் விதித்தார்.
அதன்படி வடகொரியா, ஜப்பான், மலேசியா, துனிசியா, 25 சதவீத வரி மற்றும் மியான்மர், லாஸ் நாடுகளுக்கு 40 சதவீத வரி, தென்ஆப்பிரிக்காவிற்கு 30 சதவீத வரி, இந்தோனேஷியாவிற்கு 32 சதவீத வரி, வங்கதேசம், செர்பியாவிற்கு 35 சதவீதம், போஸ்னியா மற்றும் ஹெர்ஜிஜோவினாவிற்கு 30 சதவீதம், கம்போடியா, தாய்லாந்துக்கு 36 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த புதிய வரி ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
இந்தியாவுக்கு 500 சதவீதம் வரி
இது ஒருபக்கம் இருக்க ரஷ்யாவின் பொருளாதாரத்தின் மீது தாக்குதல் தொடுக்கும் விதமாக அந்த நாட்டிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடுகள் மீது 500 சதவீதம் வரி விதிக்கும் மசோதா அமெரிக்கா நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டுள்ளது. டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இந்த மசோதாவை கொண்டு வந்தார்.
இந்தியா 45 சதவீத எரிபொருள் தேவையை ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்தே சமாளிக்கிறது. அதேபோல, சீனாவும் ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்கிறது. இதனால், மேற்கூறிய மசோதா நிறைவேறினால் இந்தியா, சீனா ஆகிய நாடுகள் 500 சதவீத வரி விதிப்பை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.
டொனால்டு டிரம்ப் ரியாக்சன்
இந்த நிலையில் இது பற்றி இன்று டிரம்ப் கூறுகையில், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்தால் பெரிய அளவில் வரி விதிக்கப்படும் என்று சூசகமாக கூறினார். ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகள் மீது பெரிய அளவில் வரி விதிக்க திட்டமிட்டுள்ளீர்களா? என்று செய்தியாளர்கள் கேட்ட போது, அது முற்றிலும் என்னுடைய விருப்பத்திற்கு உட்பட்டது. அதை ரத்து செய்வதும் முற்றிலும் எனது விருப்பம். நான் அதை மிகவும் தீவிரமாகப் கவனிக்கிறேன்" என்றார்.












Click it and Unblock the Notifications