ஏப்.6 ல் பூமிக்கு அருகே வருகிறது! 150 அடி அகலம்! விமானம் சைஸ் கொண்ட பெரிய விண்கல்.. என்ன பாதிப்பு?
வாஷிங்டன்: ஏப்ரல் 6 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் பூமிக்கு அருகேமிக அருகில் ஒரு விண்கல் வருவது குறித்து நாசா விளக்கம் அளித்துள்ளது.
பூமியை நெருங்கும் விண்கற்கள் குறித்து அவ்வப்போது எச்சரிக்கைகளை விண்வெளி ஆய்வு மையங்கள் வெளியிட்டுதான் வருகின்றன. நாம் வாழும் இந்த பூமி இடம் பெற்றுள்ள சூரிய மண்டலத்தில் ஏராளமான சிறிய கோள்கள், விண்கற்கள், வால் நட்சத்திரங்கள் சுற்றி வருகின்றன.
அவை பூமி மீதோ அல்லது வேறு கிரகங்களின் மீதோ மோதுவதும் அல்லது அவற்றின் சுற்று வட்டப்பாதைக்குள் நுழைவதும் வழக்கமாக உள்ளது. அவை பூமி மீது மோதுவது பேரழிவை ஏற்படுத்தக் கூடும் என கருதப்படுகிறது.

சூரியன்
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு சூரியனின் உள்ளிருந்து வெளியேறிய கிரகங்களின் மிச்ச மீதிதான் இந்த விண்கற்கள் என சொல்லப்படுகின்றன. இவை விண்வெளியில் சுதந்திரமாக சுற்றித் திரியும். ஒரு கிரகத்தின் புவி ஈர்ப்பு பாதைக்கு அருகே இவை வரும் போது புவி ஈர்ப்பு விசையால் அவை அந்த கிரகத்திற்குள் ஈர்க்கப்பட வாய்ப்புள்ளது.

ஏரோநாட்டிக்கல்
அண்மையில் நேஷனல் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஸ்பேஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகம், வருங்காலத்தில் பூமியை நோக்கி வரும் விண்கற்கள் பற்றித் தெரிவித்துள்ளது. 5 விண்கற்கள் பூமியை நெருங்கும் என்றும் அவற்றில் இரண்டு பூமிக்கு மிக நெருக்கமாக வரக் கூடியவை என்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கூறியுள்ளது.

டேஷ்போர்டு
Nasa's Asteriod watch dashboard இந்த விண்கற்கள் மற்றும் வால்மீன்களை தொடர்ந்து கண்காணித்து வருகின்றன. அதன்படி ஒவ்வொரு விண்கற்களும் வால் நட்சத்திரங்களும் பூமியை நெருங்கும் தேதி, விண்கல்லின் உத்தேச விட்டம், பூமியிலிருந்து எவ்வளவு தூரத்திற்கு அருகே வருகிறது போன்ற விவரங்களை இந்த டேஷ்போர்டு வெளியிடுகிறது.

ஏப்ரல் 6
2023 FZ3 என்ற விண்கல் ஏப்ரல் 6 ஆம் தேதி பூமியை கடந்து செல்லும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த விண்கல் மிகவும் பெரியது. அதாவது ஒரு விமானத்தின் அளவு இந்த விண்கல் இருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். 150 அடி அகலம் கொண்ட இந்த விண்கல் பூமியை நோக்கி 67 ஆயிரம் கி.மீ. வேகத்தில் நகர்கிறது. பூமிக்கு மிக அருகில் வரும் இது 4.19 லட்சம் கி.மீ. தொலைவில் கடக்கும் என நாசா கணித்துள்ளது. எனினும் இந்த விண்கல் பூமிக்கு எந்த வித அபாயத்தையும் ஏற்படுத்தாது. வெவ்வேறு அளவுகளில் சுமார் 30 ஆயிரம் விண்கற்கள் பூமிக்கு அருகே உள்ள பொருட்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன. அவை எதுவும் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பூமியை அச்சுறுத்தாது என கூறப்படுகிறது.

சூரிய குடும்பம்
நமது சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது. அப்போது முதலே விண்கற்கள் விண்வெளியில் எஞ்சியிருக்கின்றன என நாசா விளக்கம் அளித்துள்ளது. அண்மையில் ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுள்ள விண்கல் ஒன்றையும் நாசா கண்டறிந்துள்ளது. அது 23 ஆண்டுகளுக்கு பிறகு அதாவது 2046 ஆம் ஆண்டு காதலர் தினத்தன்று பூமியுடன் மோத சிறிய வாய்ப்பு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதன் பெயர் 2023 DW ஆகும். ஆனால் இது நிச்சயமாக பூமியுடன் மோதாது என்றும் சில ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications