"ஆண் குழந்தையும் 50 லட்சமும் வேண்டும்!" கணவர் செய்த கொடூர செயல்! இந்திய பெண் அமெரிக்காவில் தற்கொலை
வாஷிங்டன்: அமெரிக்காவில் 30 வயதான இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்த நிலையில், அதற்கு முன்பு அவர் பதிவிட்ட வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியார்கள் மத்தியில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. இந்தியாவில் இருந்தாலும் சரி வெளிநாட்டில் இருந்தாலும் சரி இந்த கொடுமை தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
அப்படித்தான் அமெரிக்காவின் நியூயார்க்கில் வாழ்ந்த பெண் ஒருவருக்கு அவரது கணவரும் குடும்பத்தினரும் தொடர்ந்து டார்ச்சர் கொடுத்துள்ளனர். இதில் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை
அமெரிக்காவின் நியூயார்க்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 30 வயதான பெண் ஒருவர் தன்னை கணவரும் அவரது குடும்பத்தினரும் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டி உள்ளார். தற்கொலை செய்யும் முன்பு, மனதை உடைக்கும் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அந்த பெண் மந்தீப் கவுர் என்று அடையாளம் காணப்பட்டு உள்ளது. கணவரின் குடும்பத்தினர் தனக்குச் செய்த கொடூரங்களைப் பட்டியலிட்ட அவர், தன்னை தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கு அவர்கள் தள்ளியதாகத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோ அந்த பெண் உயிரிழக்கும் முன்பு எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மந்தீப் கவுர்
அந்த வீடியோவில் மந்தீப் கவுர், "என் மரணத்திற்கு எனது கணவர் மற்றும் மாமியாரும் தான் காரணம். அவர்கள் என்னை வாழ விடவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக எனது கணவர் என்னை அடித்து துன்புறுத்தினார். என்றாவது ஒரு நாள் மாறுவார் என்ற நம்பிக்கையில் நானும் எட்டு ஆண்டுகளாகக் காத்திருந்தேன். ஆனால், அந்த நாள் வரவே இல்லை. கடந்த 8 ஆண்டுகளாக என்னை அடித்து துன்புறுத்தினர். நான் என்னால் முடிந்தவரை முயன்றேன். இந்த சித்திரவதையை என்னால் இனி மேலும் பொறுத்துக்கொள்ள முடியாது. அவர்கள் டார்ச்சரை புறக்கணித்துவிட்டுத் தான் நான் இங்கு நியூயார்க் வந்தேன். ஆனால், இங்கும் தினமும் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்தினார்" என்றார்.

புகார்
ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமைகளை மந்தீப் கவுர் தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். மந்தீப் கவுர் தந்தை இது தொடர்பாக போலீசிலும் புகார் அளித்துள்ளார். போலீசில் வழக்குப் பதிவு செய்த கொஞ்ச நாளிலேயே, மன்தீப்பிடம் வந்து வழக்கை வாபஸ் செய்யும்படி அவரது கணவர் கெஞ்சி உள்ளார். கணவருக்காக வழக்கை வாபஸ் பெற்றாலும் கூட, அவரது குடும்பத்தினர் தன்னை நிம்மதியாக வாழ விடவில்லை என்று கவுர் தெரிவித்துள்ளார்.

நீதி வேண்டும்
மன்தீப் கவுர் மேலும் அந்த வீடியோவில், "நான் என் குழந்தைகளை விட்டு உலகத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன். எனக்குச் செய்த கொடூரத்திற்கு எல்லாம் அவர்கள் கடவுளிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்" என்றார். இந்த வீடியோ இணையத்தில் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. மன்தீப் கவுருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று இணையத்தில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

மகன் வேண்டும்
இது தொடர்பாக மன்தீப்பின் சகோதரி குல்தீப் கவுர் கூறுகையில்,"என் சகோதரிக்குப் பிப்ரவரி 2015இல் திருமணம் நடந்தது. உடனே அவர்கள் நியூயார்க்கிற்குச் சென்றனர். அவர் அவளைச் சித்திரவதை செய்யத் தொடங்கினார். அவர்களுக்கு மகன் வேண்டுமாம். மேலும், நாங்கள் வரதட்சணையாக ரூ. 50 லட்சம் தர வேண்டும் என்று அடித்து டார்ச்சர் செய்துள்ளனர்" என்றார்.

விசாரணை
இது தொடர்பாக உத்தரப் பிரதேசம் பிஜ்னோரின் நஜிபாபாத் போலீஸ் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. நியூயார்க் போலீசாரும் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும், மன்தீப்பின் உடலை நாட்டிற்கு எடுத்து வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்தவொரு பிரச்சினைக்கும் தற்கொலை செய்து கொள்வது தீர்வு இல்லை. தற்கொலை தொடர்பான எண்ணங்கள் எழுந்தால் கீழ்க்கண்ட எண்களைத் தொடர்பு கொள்ளலாம்
மாநிலத்தின் சுகாதார உதவி எண் 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண் 044-24640050
ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.












Click it and Unblock the Notifications