ரூ. 664 கோடி ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்
வாஷிங்டன்: ரூ 664 கோடி ராணுவத் தளவாடங்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை விடுத்துள்ள அறிக்கையில் இந்தோ பசிபிக் மற்றும் தெற்காசிய பகுதியில் அரசியல் ஸ்திரத்தன்மை, அமைதி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றில் இந்தியா தொடர்ந்து முக்கிய சக்தியாக இருக்கிறது.
இந்தியா கேட்டுக் கொண்டதற்கிணங்க ரூ 664 கோடி ராணுவத் தளவாட பொருட்களை வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அத்துடன் சி 130ஜே சூப்பர் ஹெர்குலஸ் ராணுவ போக்குவரத்து விமான சேவைக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் இந்தியா- அமெரிக்கா உறவுகள் வலுப்பெறும். இதனால் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை, தேசிய பாதுகாப்புக்கு உதவும். சி 130ஜே சூப்பர் ஹெர்குலஸ் விமானங்களுக்குத் தேவையான பழுது பார்க்கும் கருவிகள். சி.ஏ.டி மற்றும் பி.ஏ.டி., எனப்படும் சிறிய ரக வெடிபொருள் சாதனங்கள், விமானங்களுக்கு எச்சரிக்கை தரும் நவீன ரேடார்கள், 10 இலகுவான இரவு நேர பைனாகுலர்கள், ஜி.பி.எஸ்., ஆய்வக கருவிகள், எலக்ட்ரானிக் போர் பொருட்கள் உள்ளிட்டவை அளிக்கவுள்ளோம்.
இதன் மூலம் இந்திய விமான படையின் தேவைகள், கடற்படை போக்குவரத்து தேவைகள் உள்ளிட்டவை பூர்த்தி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்த தளவாட பொருட்களுக்கான முக்கிய ஒப்பந்ததாரர் ஜார்ஜியாவில் உள்ள லாக்ஹீட் மார்டின் நிறுவனம் ஆகும்.