அமெரிக்கா இஸ் பேக்... ஏமன் போருக்கு ஆதரவு வாபஸ்... மாஸ் காட்டும் அதிபர் பைடன்
வாஷிங்டன்: அமெரிக்கா மீண்டு வந்துள்ளதாகத் தெரிவித்த அதிபர் பைடன், தனது கூட்டணி நாடுகளுடனான உறவை அமெரிக்கா புதுப்பித்துக்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்ற பைடன், கடந்த மாதம் 20ஆம் தேதி அந்நாட்டின் 46ஆவது அதிபரானார். அவருடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராகப் பதவியேற்றார்.
அமெரிக்க அதிபராகப் பதவியேற்றது முதலே பல அதிரடி உத்தரவுகளை பைடன் பிறப்பித்து வருகிறார். இஸ்லாமிய நாடுகளிலிருந்து வருபவர்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம், மெக்சிகோ சுவர் கட்டுமானம் நிறுத்தம் என டிரம்பின் உத்தரவுகளை எல்லாம் ரத்து செய்து வருகிறார்.
இணைந்து செயல்படுவோம்
இந்நிலையில் அதிபரான பின் தனது அதிகாரிகளுடன் உரையாற்றிய பைடன், "நாங்கள் எங்கள் கூட்டணி நாடுகளுடனான உறவை சரி செய்து, உலக நாடுகளுடன் மீண்டும் இணைந்து செயல்படுவோம், நேற்றைய சவால்களை எதிர்கொள்ள அல்ல, ஆனால் இன்று மற்றும் நாளைய சவால்களை எதிர்கொள்ள. அமெரிக்காவை எதிர்த்துப் போராடுவதற்கான சீனாவும் ரஷ்யாவும் நமது ஜனநாயகத்தை சேதப்படுத்தவும் சீர்குலைக்கவும் முயல்கின்றன. இதை அமெரிக்க தலைமை சரியாக எதிர்கொள்ள வேண்டும்" என்றார்.
பல பிரச்னைகள் உள்ளன
தொடர்ந்து பேசிய அவர் கொரோனா, பருவநிலை மாற்றம், அணு ஆயுதங்கள் என இந்த நவீன உலகில் நாம் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறோம் என்றும் மற்ற நாடுகளுடன் இணைந்து பணியாற்றினால் மட்டுமே பிரச்னைகளை சரி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். அமெரிக்காவால் தனியாக ஏதுவும் செய்ய முடியாது என்று குறிப்பிட்ட பைடன், சுதந்திரத்தைப் பாதுகாத்தல், வாய்ப்பை வென்றெடுப்பது, உலகளாவிய உரிமைகளை நிலைநிறுத்துதல், சட்டத்தின் ஆட்சியை மதித்தல், கண்ணியத்துடன் நடந்துகொள்வது என இவைதான் அமெரிக்காவின் விவரிக்க முடியாத வலிமை என்றும் பேசினார்.
அமெரிக்கா இஸ் பேக்
மேலும், பைடன் பேசுகையில், "நான் உலக நாடுகளுக்கு ஒன்றை மட்டும் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அமெரிக்கா இஸ் பேக். நாங்கள் எங்கள் கூட்டணி நாடுகளுடனான உறவை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள இருக்கிறோம். கொரோனா, பருவநிலை மாற்றம் ஆகியவற்றை உலக நாடுகளுடன் இணைந்து எதிர்கொள்ள இருக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்பட்ட நமது நீண்ட கால நட்பு நாடுகளான கனடா, மெக்சிகோ, ஜெர்மனி, பிரான்ஸ், நாட்டோ, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் பேசினேன். இந்த கூட்டணி நாடுகள்தான் நமது மிகப் பெரிய சொத்து" என்றும் அவர் தெரிவித்தார்.
உத்தரவுகள்
தொடர்ந்து பருவ நிலை மாற்றம் குறித்துப் பேசிய அவர், "நான் அதிபரான முதல் நாளே பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்துடன் அமெரிக்க இணையும் என்று அறிவித்ததேன். பருவநிலை மாற்றம் என்பது முக்கிய பிரச்னை. அதேபோல கொரோனா போன்ற பெருந்தொற்றுகளையும் நாம் உலக நாடுகளுடன் இணைந்தே எதிர்கொள்ள வேண்டும். இதனால் உலக சுகாதார அமைப்புடனும் இந்திய இணைந்து செயல்படும் என அறிவித்தேன்.
போர் நிறுத்தம்
ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் போருக்கு அமெரிக்க அளித்து வரும் ஆதரவையும் ஆயுத விற்பனையையும் நிறுத்தவுள்ளோம் என்றும் அவர் கூறினார். அதே நேரத்தில், சவூதி அரேபியா ஏவுகணைத் தாக்குதல்கள், யுஏவி தாக்குதல்கள் ஆகிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது என்றும் சவூதி அரேபியாவின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் மக்களைப் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து ஆதரவளிக்க உதவப் போகிறோம் என்றும் அவர் தெரிவித்தார். அதேபோல ஜெர்மனியிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கைகளும் நிறுத்தப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்