அமெரிக்கா வேண்டாம்.. டிரம்ப் சர்ச்சைகளால் மொத்தமாக இந்தியாவுக்கு வரும் சர்வதேச நிறுவனங்கள்! சூப்பர்ல
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹெச்-1பி விசா மீதான நடவடிக்கை அங்குள்ள பல்வேறு டெக் நிறுவனங்களையும் கடுமையாகப் பாதிக்கும் சூழலை உருவாக்கியுள்ளது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் முக்கிய பணிகளை இந்தியாவுக்கு மாற்றவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.. அப்படி மாற்றினால் அது அமெரிக்காவுக்குப் பேரிழப்பாகவே இருக்கும்.
உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் இப்போது 1,700 GCC, அதாவது குளோபல் கேபாசிட்டி சென்டர்கள் உள்ளன. உலகெங்கும் இதுபோல 3200 மையங்கள் உள்ள சூழலில், அதில் சரிபாதிக்கு மேல், அதாவது 1700 மையங்கள் இந்தியாவில் உள்ளது. இது உலகளவில் உள்ள மொத்த GCC-களில் பாதி அளவாகும்.

திட்டத்தை மாற்றும் அமெரிக்க நிறுவனங்கள்
இதற்கிடையே அதிகரித்து வரும் ஏஐ பயன்பாடு, விசா கட்டுப்பாடுகள் போன்ற காரணங்களால் அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் வியூகங்களை மாற்றி அமைத்து வருகின்றன.. இதனால் சர்வதேச திறன்களுடன் இருக்கும் இந்தியா GCC-கள், உறுதியான மையங்களாக உருவெடுத்துள்ளன.
இது தொடர்பாகத் தொழில் வல்லுநர் ரோஹன் லோபோ கூறுகையில், "GCC-கள் இந்தச் சூழ்நிலைக்கு மிகவும் பொருத்தமானவை. அவை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு மிகச் சரியாக இருக்கிறது. இப்போது நிலவும் சூழலைக் கருத்தில் கொண்டு பல அமெரிக்க நிறுவனங்கள் தங்கள் பணியாளர் தேவைகளை மறுபரிசீலனை செய்ய ஆரம்பித்துவிட்டன. இதனால் வரும் காலங்களில் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்பார்க்கலாம்" என்றார்.
டிரம்ப் ரூல்ஸ்
இந்த மாதம் தொடக்கத்தில் தான் அமெரிக்க அதிபர் டிரம்ப், புதிய ஹெச்-1பி விசா விண்ணப்பக் கட்டணத்தை $2,000-$5,000 என்பதில் இருந்து $100,000 ஆக உயர்த்தினார். இதனால் திறமையான வெளிநாட்டு ஊழியர்களை நம்பி செயல்படும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது. கட்டணத்தை உயர்த்தியது மட்டுமின்றி ஹெச்-1பி மற்றும் எல்-1 பணி விசா விதிகளைக் கடுமையாக்கும் மசோதாவும் கொண்டு வரப்பட்டது. இதுபோன்ற நடவடிக்கைகள் வெளிநாட்டினர் அதிகளவில் வேலைக்கு வைத்திருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு அழுத்தத்தை அதிகரிக்கவே செய்யும்.
நிலைமை மோசமாகும்
டிரம்பின் விசா கட்டுப்பாடுகளுக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை விதிக்கவில்லை என்றால் நிலைமை மோசமாகும். அதுபோன்ற சூழல்களில் AI, சைபர் பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் வேலைகள் இந்திய GCC-களுக்கு கைமாறலாம் எனத் தொழில் வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பொதுவாக இதுபோன்ற வேலைகளை அமெரிக்காவில் இருந்து தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. உலகின் எந்தவொரு பகுதியில் இருந்து வேண்டுமானாலும் வேலையைச் செய்யலாம். கொரோனா காலத்தில் முக்கிய தொழில்நுட்பப் பணிகளை எங்கிருந்து வேண்டுமானாலும் செய்ய முடியும் என்பது நிரூபணம் ஆனதாக சிடிஎஸ் இந்தியாவின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராம்குமார் ராமமூர்த்தி கூறினார். இதனால் நிறுவனங்களை இந்திய GCCகளுக்கு மாற்றுவதே சரியாக இருக்கும்.
அமெரிக்க நிறுவனங்கள்
ஏனென்றால் அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் ஆல்பாபெட் (கூகிளின் தாய் நிறுவனம்) போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், வால் ஸ்ட்ரீட் வங்கியான ஜேபிமோர்கன் சேஸ் மற்றும் வால்மார்ட் ஆகியவை தான் ஹெச்-1பி விசாக்களை அதிகம் ஸ்பான்சர் செய்கின்றன. இந்த நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்தியாவில் GCCகள் பெரியளவில் உள்ளன. எனவே, வேலையை அவுட்சோர்ஸ் செய்வதற்குப் பதிலாக இதுபோல செய்வது சரியாக இருக்கும் என அவர்கள் கருதுகிறார்கள்.
மேலும், இந்த நிறுவனங்களால் எளிதாக இந்தியாவுக்குத் தங்கள் வேலைகளை இந்தியாவுக்கு மாற்ற முடியும் என்பதில் சந்தேகம் இல்லை. அமெரிக்க நிறுவனங்கள் இது தொடர்பாக வெளிப்படையாக எந்தவொரு கருத்தும் கூறவில்லை. இருப்பினும், ஓரிரு நிறுவனங்கள் மட்டும் இது குறித்து யோசித்து வருவதாகக் கூறின. இருப்பினும், டிரம்ப் வரி தொடர்ந்தால் வேலைகள் அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்குக் கைமாறவே வாய்ப்புகள் அதிகம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications