கனமழையால் வெள்ளத்தில் மிதந்த ஸ்பெயின்.. நேரில் பார்க்க சென்ற அரசர் மீது சேற்றை வீசிய மக்கள்
வாஷிங்டன்: கனமழையால் ஸ்பெயின் நாட்டில் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட சென்ற அரசர் மீது மக்கள் சேற்றை வீசி கோபத்தை வெளிப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயினில் வெள்ள பாதிப்பால் இதுவரை 213 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்ப நாடுகளில் ஒன்றன ஸ்பெயினில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கனமழை கொட்டி தீர்த்தது. இடைவிடாது கொட்டி தீர்த்த மழையால் கிழக்கு ஸ்பெயினில் பல்வேறு இடங்களும் வெள்ளத்தில் மிதந்தன. வீடுகளை வெள்ளம் சூழ்ந்த நிலையில், கார்களும், பைக்குகளும் அடித்து செல்லப்பட்டன.

வெள்ள பாதிப்பால் இதுவரை 213 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கிழக்கு வலென்சியா பிராந்தியத்தில் தான் அதிக பாதிப்பு ஏற்பட்டது. வீடுகள், தெருக்கள் மற்றும் சாலைகளை மண் மற்றும் குப்பை மூடியுள்ள நிலையில், தன்னார்வலர்கள் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். பல பகுதிகளில் மின்சாரம் மற்றும் குடிநீர் விநியோகம் முடங்கியது. அத்தியாவசிய பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் அரசு நிர்வாகம் எந்த மீட்பு பணிகளையும் மேற்கொள்ளவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்த நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை காண அந்த நாட்டின் அரசர் பிலிப் மற்றும் ராணி லெட்டிசியா சென்றனர். வெள்ள பாதிப்பு கடுமையாக ஏற்பட்ட வேலன்சியா மாகாணத்தில் உள்ள பைபோரட்டா நகரில் பாதிப்புகளை பார்வையிட அரசரும் அவரது மனைவியும் சென்றனர்.
பாதுகாப்பு புடை சூழ அரசரும், அவரது மனைவியும் வருகை தந்த நிலையில், அவர்களது வருகைக்காக சாலைகளில் கிடந்த சேறுகள் மற்றும் தண்ணீர் தேங்கிய பகுதிகள் சீர் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஆத்திரம் அடைந்த மக்கள் அரசர் மற்றும் அவரது மனைவியை பார்த்து எதிர்ப்பு கோஷமிட்டனர். அப்போது அங்கிருந்த சிலர் அரசர் மீது சேற்றை வாரி வீசினர்.
இதனை சற்றும் எதிர்பாராத அரசர் பிலிப் அதிர்ச்சி அடைந்ததார். பாதுகாவலர்கள் குடைகளை விரித்து சேறு அரசர் மீது படாமல் பாதுகாத்தனர். கெட் அவுட், கெட் அவுட் என பொதுமக்கள் கோஷமிட்டனர். உடன் வந்த ஸ்பெயின் பிரதமரும் இதில் சிக்கிக்கொண்டார். முகத்தில் வீசப்பட்ட சேற்றை துடைத்துக்கொண்டே மக்களை நோக்கி அரசரும் ராணியும் சென்றனர். அப்போது திரும்பி போ.. திரும்பி போ என கோஷம் எழுப்பினர்.
எனினும், இதனை பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அரசர் ஆறுதல் கூறினார். சிலர் அரசரின் கைகளை பிடித்துக் கொண்டு தங்கள் வேதனையை வெளிப்படுத்தினர். பின்னர் அங்கிருந்து தமது பாதுகாவலர்களுடன் அரசர் கிளம்பி சென்றார். ஸ்பெயினின் அரசர் மீதே மக்கள் சேற்றை வாரியிறைத்த சம்பவம் சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications