பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் அமெரிக்காவில் கலக்கிய முதல்வர்.. சிகாகோ தமிழர் கலை விழாவில் பங்கேற்பு
வாஷிங்டன்: முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், சிகாகோவில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்ற தமிழர் கலை விழாவில் பங்கேற்றுள்ளார். அப்போது பட்டு வேட்டி, பட்டு சட்டையுடன் கலந்துகொண்ட ஸ்டாலின், அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது என்று பேசினார்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்காவில் முதல்வர் மு.க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த மாதம் 28-ஆம் தேதி அமெரிக்கா சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு பல்வேறு நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்து வருகிறார்.

சான் பிரான்சிஸ்கோவில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதைத்தொடர்ந்து தற்போது சிகாகோ நகரில் முக்கிய நிறுவனங்களின் அலுவலர்களை சந்தித்து வருகிறார் தமிழக முதல்வர் ஸ்டாலின். இந்த நிலையில் சிகாகோவில் பிரமாண்டமாக நடைபெற்ற தமிழர் கலை விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பங்கேற்றுள்ளார். இந்த நிகழ்ச்சியில், அமெரிக்க வாழ் தமிழர்கள் பங்கேற்றனர்.
இதில் பட்டு வேட்டி, சட்டை அணிந்து முதல்வர் முக ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய முதல்வர் முக ஸ்டாலின், "சிறப்பான கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். அமெரிக்க வாழ் தமிழர்களின் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே இருந்தால் போதும் என்று தோன்றுகிறது.
தமிழ்நாட்டில் நான் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எப்படி இருக்குமோ அது போலல்லாமல் அதைவிட மிக சிறப்பாக இந்நிகழ்ச்சி இருக்கிறது. அமெரிக்க வாழ் தமிழர்களுடன் இருப்பது தமிழ் மண்ணில் இருக்க கூடிய உணர்வை தருகிறது. தனித்தனி தாய் வயிற்றில் பிறந்தாலும் நாம் அனைவரும் உடன்பிறப்புகள். நம் எல்லோருக்கும் பாசத்தை ஊட்டிய ஒரு தாய்தான் தமிழ்த்தாய். தமிழே தமிழே என்று அழைக்கும் சுகம் எதிலும் இல்லை" இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications