வெறும் 10 அடி தான் கேப்.. அமெரிக்க போர் விமானத்திற்கு அருகில் வந்த சீன ஜெட் விமானம்.. பெரும் பதற்றம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் ராணுவப் படை விமானத்திற்கு மிக அருகில் சீன விமானம் பறந்து சென்ற ஷாக் சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் இப்போது வெளியாகியுள்ளது.
பொதுவாக நாம் ஹாலிவுட் படங்களில் சாகச காட்சிகளைப் பார்த்திருப்போம். அதில் இரண்டு நவீன ஃபைட்டர் ஜெட்கள் மிகவும் அருகருகே பறந்து செல்வது போன்ற காட்சிகள் இருக்கும். படங்களில் இந்த காட்சிகளை கிராபிக்ஸ் மூலம் உருவாக்குவார்கள்.

அதனால் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. அதேநேரம் நிஜ வாழ்க்கையில் இதுபோல நடந்தால் அது நிச்சயம் பேராபத்தில் தான் முடியும். அதுபோன்ற ஒரு ஷாக் சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.
தென் சீன கடல்: தென் சீன கடல் பகுதியில் சர்வதேச வான்வெளியில் அமெரிக்க விமான படையின் B-52 குண்டுவீச்சு விமானம் வழக்கமான பணிகளில் ஈடுபட்டுள்ளது. அப்போது சீன J-11 போர் விமானம் பாதுகாப்பற்ற முறையில் மிக அருகில் வந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மிகவும் நெருக்கமாக அதாவது 10 அடி தொலைவில் சீன விமானம் வந்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், இது தொடர்பான வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான அறிக்கையில் சீனாவின் செயல்பாடுகளை unsafe என்று அமெரிக்கா குறிப்பிட்டு இருக்கிறது. பொதுவாக மிகவும் தீவிரமான நிகழ்வுகளில் மட்டுமே இந்த unsafe என்ற வார்த்தை பயன்படுத்தப்படும்.
அமெரிக்கா ராணுவம்: இது தொடர்பாக அமெரிக்க ராணுவத்தின் இந்தோ-பசிபிக் பிரிவு கூறுகையில், "சீனப் போர் விமானியின் நடவடிக்கைகள் மோசமானதாக இருந்தது. அதீத வேகத்தில் அவர் அமெரிக்கா விமானத்திற்கு மிக அருகே 10 மீட்டர் தொலைவில் பறந்து இரண்டு விமானங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தினார். சர்வதேச வான் பாதுகாப்பு விதிகள் புறந்தள்ளும் வகையில் வெளிச்சம் குறைவாக இருந்த நேரத்தில் இரவில் இந்தச் சம்பவத்தை நடத்தியுள்ளனர்.
சர்வதேச ராணுவ விமானம் மற்றொரு விமானத்தை அணுகும் போது, உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். விபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு மிக அருகே வந்துள்ளோம் என்பதைக் கூட இந்த விமானி அறியாமல் இருந்தது தான் எங்களுக்குக் கவலையை ஏற்படுத்துகிறது" என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக சுமார் 38 விநாடிகள் ஓடும் வீடியோவையும் அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
முதல்முறை இல்லை: அதில் சீனாவுக்குச் சொந்தமான ஜி11 விமானம் எவ்வளவு அருகில் வருகிறது என்பது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்காவின் செயல்பாடுகளைத் தடுக்கும் வகையில் கடந்த 2021 முதலே சீன விமானிகள் இதுபோன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இதேபோல நடந்த இடைமறிப்ப தொடர்பான வீடியோக்களை கடந்த வாரம் பென்டகன் வெளியிட்டது. அதை அமெரிக்க ராணுவ அதிகாரிகள் பாதுகாப்பற்ற நடத்தை என்றே குறிப்பிட்டுள்ளனர். சர்வதேச எல்லையில் வந்தாலும் ஒட்டுமொத்த தென் சீன கடல் பகுதியையும் சீனா தனக்குச் சொந்தம் என உரிமை கொண்டாடுகிறது. இதன் காரணமாகவே இதுபோன்ற பாதுகாப்பற்ற செயல்களில் சீனா ஈடுபட்டு வருவதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாகச் சீனா இதுவரை எந்தவொரு பதிலையும் அளிக்கவில்லை.. இருப்பினும், அந்நாட்டின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், தென் சீனக் கடல் பிரச்சினைகளில் அமெரிக்கா தலையிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது குறித்து மட்டும் நீண்ட கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது.












Click it and Unblock the Notifications