உலகம் முழுவதும் களைகட்டிய கிறிஸ்துமஸ்! தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை! போப் அழைப்பு
வாஷிங்டன்: இயேசு கிறிஸ்து பிறந்த நாள் கிறிஸ்துமஸ் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. போப் லியோ வத்திக்கான் ஊழியர்களுக்கு அளித்த தனது பாரம்பரிய கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், இந்த ஆண்டு கிறிஸ்துமஸில் இயேசுவின் பிறப்பிலிருந்து எளிமையையும் பணிவையும் கற்றுக்கொள்ளுமாறு அவர்களை அழைத்தார். இது திருச்சபையின் அடிப்படைக் குணமாக மாற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
வாட்டிகனில் ஆறாம் பவுல் கேட்போர் அரங்கில் நடைபெற்ற வருடாந்திர கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பரிமாற்ற நிகழ்வில், ரோமன் குரியா, வாட்டிக்கன் நகர அரச நிர்வாகம், மற்றும் ரோமின் விக்காரியேட் ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை போப் சந்தித்தார்.

தமக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்கும், ஊழியர்களின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளுக்கும் போப் லியோ உளமார்ந்த நன்றி தெரிவித்தார். வாட்டிகனை அலுவலகங்கள் மற்றும் சேவைகளின் ஒரு பெரிய மொசைக் என தான் கருதுவதாகவும் விளக்கினார். கடவுளின் கருணையுடன், படிப்படியாக, பல்வேறு பணி இடங்களுக்குச் சென்று உங்களை நேரில் சந்திக்கவும் என்னால் முடியும் என்று நம்புகிறேன். உங்கள் அன்புக்குரியவர்களுக்கு, குறிப்பாக வீட்டில் உள்ள வயோதிகர்களுக்கும், நோயாளிகளுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கவும். போப் அவர்களுக்காக ஜெபிக்கிறார் என்று அவர்களிடம் கூறுங்கள்" என்று போப் அன்புடன் கேட்டுக்கொண்டார்.
தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ்
தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளில் நட்சத்திரங்களை கட்டி, கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து கிறிஸ்துமஸை வரவேற்றனர். தேவாலயங்களில் அமைக்கப்பட்டிருந்த குடில்கள் பெரிதும் கவனம் பெற்றிருந்தன. வேளாங்கண்ணி மற்றும் கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி சென்னை விமான நிலையம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. சென்னை பெசன்ட் நகரில் கிறிஸ்துமஸ் விழாவில் இந்துக்களும் பரவலாக பங்கேற்றிருக்கின்றனர். "எல்லா மதத்தையும் ஏத்துக்கிட்டு நாம ஜாலியா இருக்கோம். இதான் தமிழ்நாடு" என்று கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்ற இந்துக்கள் பேசியது கவனம் பெற்றிருக்கிறது. ஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டவர்கள் கூட கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று சிறப்பித்திருக்கின்றனர்.












Click it and Unblock the Notifications