எலான் மஸ்க் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பயங்கர மோதல்! கைகட்டி வேடிக்கை பார்த்த டிரம்ப்.. பின்னணி
வாஷிங்டன்: அமெரிக்கா அமைச்சரவை கூட்டம் அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் நடந்தது. இதில் எலான் மஸ்க் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி விமர்சனங்களை முன்வைத்த நிலையில் ‛யாரு பெருசுனு அடிச்சி காட்டுங்க' என்ற வகையில் அதிபர் டொனால்ட் டிரம்ப் கைகளை கட்டி வேடிக்கை பார்த்துள்ளார். இதனால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்றவர்கள் அதிர்ந்து போயினர். இருவருக்கும் அப்படி என்ன பிரச்சனை நடந்தது? வாங்க பார்க்கலாம்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். கடந்த ஜனவரி 20ம் தேதி அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று டிரம்ப் செயல்பட்டு வருகிறார். இவரது அமைச்சரவையில் மார்கோ ரூபியோ என்பவர் வெளியுறவுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருகிறார். அதேபோல் அமெரிக்காவின் செயல்திறன் துறையின் (DOGE) தலைவராக உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் செயல்பட்டு வருகிறார்.

அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்புக்கு, எலான் மஸ்க் கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி கொடுத்தார். தேர்தல் பிரசாரங்களுக்கு உதவி செய்தார். இந்த நன்றியை மறக்காத டொனால்ட் டிரம்ப், செயல்திறன் துறை என்று தனியே உருவாக்கி அதன் தலைவராக எலான் மஸ்க்கை நியமித்தார்.
எலான் மஸ்க் தலைவராக உள்ள செயல்திறன் துறையின் முக்கிய பணி என்பது அமெரிக்காவின் பொருளாதாரம், நிதி மேலாண்மையை மேற்கொள்வதாகும். அமெரிக்கா எங்கெல்லாம் தேவையில்லாமல் நிதி செலவு செய்கிறதோ, அதனை அறிந்து நடவடிக்கை எடுக்க டொனால்ட் டிரம்பிடம் பரிந்துரைப்பது தான். அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்காவின் USIAD மூலம் வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் பல ஆயிரம் கோடி நிதி நிறுத்தப்பட்டது. மேலும் அந்த அமைப்பு கலைக்கப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் எலான் மஸ்க் தான். அவரது பரிந்துரையில் தான் டொனால்ட் டிரம்ப் அந்த நிதியை நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையில் அமைச்சரவை கூட்டம் என்பது நடந்தது. இந்த கூட்டத்தில் அவரது அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள அமைச்சர்கள் பங்கேற்றனர். எலான் மஸ்க் அமைச்சராக இல்லை. இருப்பினும் நிர்வாக ரீதியான செயல்பாட்டில் அவரது துறையின் தலைவராக இருப்பதால் அவரும் பங்கேற்றார். இந்த அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு விவகாரங்கள் பற்றி டொனால்ட் டிரம்ப் தனது அமைச்சரவை சகாக்களுடன் விவாதித்தனர்.
இந்த வேளையில் திடீரென்று எலான் மஸ்க் மற்றும் அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. அதாவது எலான் மஸ்க், வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மீது ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். இதுதொடர்பாக எலான் மஸ்க், ‛‛வெளியுறவுத்துறையில் பணி நீக்கம் செய்யக்கோரி பரிந்துரை செய்தேன். ஆனால் நீங்கள் யாரையும் பணி நீக்கம் செய்யவில்லை. எனது தலைமையிலான துறையில் உள்ள ஒரு ஊழியரை மட்டுமே வேலையை விட்டு அனுப்பி உள்ளீர்கள்'' என்று கூறினார். இதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, ‛‛வெளியுறவுத்துறையில் பணியாற்றி வந்த 1,500 பேர் விருப்ப ஓய்வு பெற ஒப்புக்கொண்டனர். இதனால் அவர்களை பணி நீக்கம் செய்ய முடியாது. ஒருவேளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் அவர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும். அதன்பிறகு தான் பணி நீக்கம் செய்ய வேண்டும். அப்படி செய்யலாமா?'' என்று கிண்டல் தொனியில் பதிலளித்தார்.
இதனால் டென்ஷனான எலான் மஸ்க் பதிலுக்கு மார்கோ ரூபியோவை கிண்டல் செய்யும் வகையில், ‛‛நீங்கள் தொலைக்காட்சிகளில் நன்றாக பேசுகிறீர்கள்'' என்று கூறினார். அதாவது தொலைக்காட்சியில் மட்டும் சிறப்பாக செயல்படுவது போன்ற தோற்றத்தை வைத்துள்ளீர்கள். ஆனால் உண்மையில் உங்களின் செயல்பாடு மந்தமாக இருக்கிறது என்ற தொனியில் அந்த வார்த்தையை கூறினார். இதனை மார்கோ ரூபியோவும் புரிந்து கொண்டார்.
இதனால் எலான் மஸ்க் மற்றும் மார்கோ ரூபியோ இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டனர். டிரம்ப் முன்னிலையில் இருவரும் மாறி மாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தனர். ஆனால் டொனால்ட் டிரம்ப் ஒன்றுமே செய்யாமல் கைகளை கட்டியபடி இருவரும் மோதிக்கொள்வதை அமைதியாக வேடிக்கை பார்த்தார். சிறிது நேரத்துக்கு பிறகு டொனால்ட் டிரம்ப் தலையிட்டார். மார்கோ ரூபியோவை பாராட்டினார். ‛‛உண்மையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். ஊடக விவாதங்களை நன்றாக கையாள்கிறீர்கள்'' என்று பாராட்டு தெரிவித்தார்.
அதன்பிறகு எலான் மஸ்க்கை நோக்கி, ‛‛DOGE துறையின் பணி என்பது பரிந்துரை செய்வது தான். அதில் இறுதி முடிவு எடுப்பது அரசு அல்லது துறை சார்ந்த தலைவர்களின் முடிவு தான்'' என்று கூறினார். அதன்பிறகு இந்த மோதல் முடிவுக்கு வந்தது. இது எலான் மஸ்க்கிற்கு கொஞ்சம் சங்கடமான சூழ்நிலையை ஏற்படுத்தியது. அதன்பிறகு அவர் அமைதியானார். இந்த சம்பவத்தால் அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற மற்ற அமைச்சர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதோடு மார்கோ ரூபியோ - எலான் மஸ்க் இடையேயான இந்த மோதலால் அமைச்சரவை கூட்டம் நடந்த அரங்கத்தில் பரபரப்பான சூழல் நிலவியது என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications