அமெரிக்காவில் தாண்டவம் ஆடும் டெல்டா கொரோனா.. 83% வைரஸ் பாதிப்பு.. கட்டுப்படுத்த இது மட்டுமே ஒரே வழி!
வாஷிங்டன்: இந்தியாவில் முதலில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா, இப்போது அமெரிக்காவில் தனது ஆட்டத்தைத் தொடங்கியுள்ளது. அங்கு தற்போது உறுதி செய்யப்படும் பாதிப்புகளில் சுமார் 83% டெல்டா கொரோனாவால் ஏற்படுகிறது.
கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்திலும் கொரோனா ருத்திர தாண்டவமே ஆடியது என்று சொல்லலாம்.
இதுவரை அனைத்து நிலைகளிலும் கொரோனா வைரஸ் நம்மைவிட ஒருபடி முன்னால் தான் இருந்துள்ளது.

ஆல்பா முதல் டெல்டா வரை
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரிட்டனில் முதலில் கண்டறியப்பட்ட ஆல்பா வகை கொரோனா மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தத் தொடங்கியது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசை விட மோசமான பாதிப்புகளை இது ஏற்படுத்தியிருந்தது. அது மெல்லக் கட்டுக்குள் வந்த போது, இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா கொரோனா தனது ஆட்டத்தைத் தொடங்கியது. இதுவரை கண்டறியப்பட்ட கொரோனா வகைகளிலேயே டெல்டா கொரோனா தான் வேகமாகப் பரவுவதாக உலக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

83% டெல்டா கொரோனா
தற்போது இந்தியாவில் டெல்டா கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தாலும், அமெரிக்காவில் டெல்டா கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்குள்ள நியூயார்க் நகரத்தில் உறுதி செய்யப்படும் கேஸ்களில் சுமார் 70% பேருக்கு டெல்டா கொரோனா வைரசே ஏற்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அமெரிக்காவில் சுமார் 83% பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என அமெரிக்காவின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையமான சிடிசி தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களுக்கு மத்தியில் தான் வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. கொரோனா வேக்சின் போட்டவர்களுக்கு டெல்டா கொரோனா ஏற்பட்டாலும்கூட, பெரும்பாலும் அது தீவிர கொரோனா பாதிப்பாக மாறுவதில்லை. இதனால் தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் உயிரிழப்புகளைக் கணிசமாகக் குறைக்க முடிவதாக அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர் விவேக் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

அதிபர் பைடன்
அமெரிக்காவின் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் சுமார் 40%, தடுப்பூசி பணிகள் மந்தமாக நடைபெறும் மாகாணங்களில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க அதிபர் பைடன் குறிப்பிட்டுள்ளார். டெல்டா கொரோனாவுக்கு எதிராக ஒற்றை டோஸ் தடுப்பூசியின் செயல்திறன் குறைவாக இருந்தாலும்கூட, இரண்டு டோஸ் எடுத்துக் கொள்ளும்போது செயல்திறன் அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். அமெரிக்கர்கள் விரைவாகத் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என அதிபர் பைடன் அழைப்பு விடுத்துள்ளார்.

என்ன காரணம்
டெல்டா வகை பாதிப்பு அமெரிக்காவில் மீண்டும் அதிகரிக்க, கூடுதலாக அறிவிக்கப்பட்ட தளர்வுகளும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. மேலும், அந்நாட்டின் தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையம் மாஸ்க் அணிவது தேவையில்லை என முன்கூட்டியே அறிவித்ததும் கொரோனா அதிகரிக்கக் காரணம் என அந்நாட்டுச் சுகாதார வல்லுநர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். டெல்டா கொரோனா வேகமாகப் பரவினாலும், அது மோசமான பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை.

தொடர்ந்து உருமாறும் கொரோனா
ஆனால் இது எத்தனை காலம் தொடரும் என யாருக்கும் தெரியாது. ஏனென்றால், தடுப்பூசிகளைக் குறைவாகச் செலுத்திய நாடுகளில் வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இதன் மூலம் புதிய உருமாறிய கொரோனா வகைகள் தோன்ற வாய்ப்புள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் தான் இந்தியாவில் டெல்டா பிளஸ் என்ற புதிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இது தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வகைகளின் கலவையாக உள்ளது. இப்படி கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் வேக்சின் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications