எதிர்ப்புக்கு பணிந்த டிரம்ப்? காசாவை கைப்பற்றும் முடிவில் பின்வாங்கிய அமெரிக்கா? பெரிய ட்விஸ்ட்
வாஷிங்டன்: பாலஸ்தீனத்தின் காசா இனி எங்களுக்கு தான் சொந்தம். காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கிடையே தான் காசாவை கைப்பற்றும் முயற்சியை விட்டுவிட்டு எதிர்ப்புக்கு டொனால்ட் டிரம்ப் பணிந்து விட்டாரா? என்ற பெரிய கேள்வி எழுந்துள்ளது. இதற்கு அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சொன்ன விளக்கம் தான் காரணமாகும்.
அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றது முதல் அதிரடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இது மொத்த உலக நாடுகளையும் அலற வைத்துள்ளார். அந்த வகையில் தான் சமீபத்தில் காசா மக்களை அதிர வைத்தார் டொனால்ட் டிரம்ப்.

காசாவில் கடந்த 15 மாதமாக இஸ்ரேல் போர் தொடுத்து வருகிறது. இந்த போரை காசாவில் செயல்படும் ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கடந்த மாதம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டது.
இதையடுத்து கடந்த 4ம் தேதி அமெரிக்கா வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் டொனால்ட் டிரம்ப் சந்தித்து பேசினர். இதன்மூலம் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு அவரை சந்தித்த முதல் தலைவர் என்ற பெயரை பெஞ்சமின் நெதன்யாகு பெற்றார். அதன்பிறகு இருவரும் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது டொனால்ட் டிரம்ப் கூறியதாவது:
காசா முனையில் நரகத்தின் படுகுழியில் பாலஸ்தீன் மக்கள் வசிக்கின்றனர். அவர்களை மீண்டும் மீண்டும் அதே காசாவில் வசிக்க சொல்வது சரியல்ல. 100 ஆண்டாக நடக்கும் அதே சண்டை மீண்டும் நடக்கும். மக்கள் கொத்து கொத்தாக இறப்பார்கள். மீண்டும் வாழ்க்கையை துவங்குவார்கள். பிறகு பரிதாபமாக இறப்பார்கள்.
இதனால் காசாவை அமெரிக்கா கைப்பற்றப்போகிறது. அது இனி அமெரிக்காவுக்கு தான் சொந்தம்.போர் பூமியில் குவிந்து கிடக்கும் குண்டுகள், வெடிமருந்துகள் உட்பட எல்லாவிதமான ஆயுதங்களையும் அப்புறப்படுத்துவோம். கட்டட கழிவுகளை அகற்றி காசாவை சமப்படுத்துவோம். வீட்டு வசதிகள் ஏற்படுத்தி பொருளாதார வளர்ச்சியை கொண்டு வருவோம். வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம்.
அதற்கு முன்பு பாதிக்கப்பட்ட பாலஸ்தீனியர்கள் காசாவை காலி செய்ய வேண்டும். அவர்களை பக்கத்து நாடுகள் கனிவுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். இனியாவது அவர்கள் நிம்மதியாக வாழட்டும். காசாவில் இருந்து மக்கள் முற்றிலும் வெளியேறிய பிறகு எங்கள் வேலையை நாங்கள் தொடங்குவோம். பின்னர் காசா ஒரு சர்வதேச நகரமாக விளங்கும். அனைத்து நாட்டு மக்களும் அங்கு வாழ முடியும். மத்திய கிழக்கின் அற்புதமான இடமாக காசா முனை மாறி விடும்'' என்றார்.
இதனை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வரவேற்றார். ஆனால் காசாவில் வசிக்கும் மக்கள், காசாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் சவுதி அரேபியா உள்பட பிற இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். டொனால்ட் டிரம்பின் இந்த முடிவு என்பது ஏற்கவே முடியாதது. சொந்த நாட்டு மக்களை எப்படி வெளியேற்ற முடியும். அதோடு காசாவில் வசிக்கும் மக்களின் இத்தகைய கட்டாய வெளியேற்றம் என்பது இஸ்ரேலுக்கு சாதகமாக அமையும் என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனால் காசா விவகாரம் தற்போது உலகளவில் பேசும் பொருளாகி உள்ளது. இதற்கிடையே தான் டொனால்ட் டிரம்ப் கூறிய கருத்துக்கு நேர்எதிராக அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் தான் எதிர்ப்புக்கு பணிந்து காசாவை கைப்பற்றும் முடிவில் இருந்து அமெரிக்கா பின்வாங்கி உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ‛‛அதிபரின் (டொனால்ட் டிரம்ப்) இந்த யோசனை என்பது காசாவில் இருக்கும் கட்டட கழிவுகளை அகற்றவும், மீண்டும் காசா நகரை கட்டி எழுப்பவும் உதவும். இது காசாவுக்கான சலுகையாக தான் அறிவிக்கப்பட்டது. பணிகள் நடக்கும்போது மக்கள் எங்காவது ஒரு இடத்தில் நன்றாக வாழ வேண்டும். இது காசாவுக்கு விரோதமான முடிவு அல்ல'' என்றார்.
அதேபோல் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் கூறுகையில், ‛‛காசா மக்களை இடமாற்றம் செய்வது என்பது இந்த பணிக்காக மட்டும் தான். காசா மக்கள் இடமாற்றம் செய்வது என்பது ஒரு தற்காலிக முடிவு தான். நிரந்தர முடிவு இல்லை. இதனை தான் அதிபர் உறுதியாக கூறியுள்ளார்'' கிடையாது.
காசாவை அமெரிக்கா கைப்பற்றும் என்று டொனால்ட் டிரம்ப் கூறினார். ஆனால் இப்போது அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் கரோலின் லிவிட் ஆகியோரின் கருத்துகள் டிரம்பின் கூற்றுக்கு எதிராக உள்ளன. இதனால் காசாவை கைப்பற்றும் முடிவில் இருந்து அமெரிக்கா பின்வாங்குகிறதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் டொனால்ட் டிரம்பை பொறுத்தவரை காசாவை கைப்பற்றுவதில் உறுதியாக உள்ளார். இல்லாவிட்டால் அவர் பத்திரிகையாளர்களிடம் அதுபோன்ற கருத்தை தெரிவித்து இருக்க மாட்டார் என்கின்றனர் விபரம் அறிந்த சர்வதேச அரசியல் நோக்கர்கள்.












Click it and Unblock the Notifications