சீட்டுகளை கலைத்து போட்ட டிரம்ப்..உலக அரசியலே மாறிப்போச்சு.. சைட் கேப்பில் சீனா செய்யும் காரியம்!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகள் உலக அரசியலையே புரட்டிப்போட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக அவர் எடுக்கும் நடவடிக்கைகள் பல மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவும் பாகிஸ்தானும் நெருக்கம் காட்டி வரும் நிலையில், அதைச் சீனா உற்றுக் கவனித்து வருகிறது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் உலக அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார். அவரது நடவடிக்கைகளால் புவிசார் அரசியல் தலைகீழாக மாறி வருகிறது என்றே சொல்லலாம். மோதலை நிறுத்தவே எல்லாவற்றையும் செய்வதாக டிரம்ப் சொன்னாலும் கூட அவருடைய நடவடிக்கைகள் புவிசார் அரசியலைப் புரட்டிப்போடுவதாகவே இருக்கிறது.

பாகிஸ்தான் உடன் நெருக்கம்
இந்தியா மீது வரி விதித்த டிரம்ப், பாகிஸ்தான் மீது எந்தவொரு வரியும் விதிக்கவில்லை. டிரம்ப் நடவடிக்கைகளால் ஏற்பட்ட சில பல மாற்றங்களை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும். முதலில் பாகிஸ்தான் அமெரிக்கா இடையேயான உறவு நெருக்கமடைந்து வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே பாகிஸ்தானுக்கு எதிரான நிலைப்பாட்டில் தான் அமெரிக்கா இருந்தது. இதனால் சீனா பாகிஸ்தான் இடையே உறவு நெருக்கமானது. சீனாவிடம் இருந்து அதிகளவில் நிதியுதவி, ராணுவ உதவிகளை பாகிஸ்தான் பெற்று வந்தது.
இந்தச் சூழலில் தான் பாகிஸ்தான் அமெரிக்கா இடையேயான உறவு மீண்டும் மேம்பட்டிருக்கிறது. அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே வெளிப்படையாக மோதல் இல்லை என்றாலும் கூட இரு நாடுகளுமே கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் நேர் எதிரான நிலைப்பாட்டையே எடுத்துள்ளன. அப்படியிருக்கும்போது தனது முக்கியமான நட்பு நாடுகளில் ஒன்றான பாகிஸ்தான் இப்போது அமெரிக்கா பக்கம் செல்வதை சீனா உற்றுக் கவனித்து வருகிறது.
சீனா சொல்வது என்ன
இது தொடர்பாகக் கேள்விக்குச் சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் சில முக்கிய கருத்துகளைக் கூறியிருக்கிறார். சீனாவும் பாகிஸ்தானும் சிறந்த நண்பர்கள் என்றும், எல்லா காலத்திலும் தங்களுக்குள் ஒரு கூட்டணி இருக்கும் என மாவ் நிங் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், "பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையேயான உறவு என்பது இரு நாடுகளுக்கும் சம்பந்தப்பட்ட ஒரு தனிப்பட்ட விவகாரம் . மேலும், சீனா- பாகிஸ்தான் இருதரப்பு உறவு எந்த ஒரு மூன்றாவது நாட்டினாலும் பாதிக்கப்படாது. அதேபோல சீனா பாகிஸ்தான் உறவும் எந்தவொரு நாட்டிற்கும் எதிரானது இல்லை" என்றார்.
இதுதான் முக்கியம்
அதேநேரம் மாவ் நிங் அத்தோடு நிற்கவில்லை. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுமே சீனாவிற்கு முக்கியமான அண்டை நாடுகள் என்றும் இரு நாடுகளுடனும் நட்பு ரீதியான ஒத்துழைப்பை மேம்படுத்தச் சீனா ஆர்வமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதைத் தான் முக்கியமாக நாம் பார்க்க வேண்டும்.
இந்தியா சீனா இடையே கல்வான் மோதலுக்குப் பிறகு பதற்றம் அதிகரித்திருந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நிலைமை மெல்ல சீராகி வருகிறது. இரு நாடுகளும் நேரடி விமானச் சேவையைத் தொடங்கவுள்ளன. மேலும், நேரடி வர்த்தகத்தையும் சீக்கிரம் தொடங்க முடிவெடுத்துள்ளன. மேலும், சீன வெளியுறவுத்துறை அமைச்சரும் கூட இந்தியா வந்துள்ளார். பிரதமர் மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரை சந்தித்துப் பேசினார்.
இந்தியா சீனா
அமெரிக்கா பாகிஸ்தான் நெருக்கம் காட்டி வரும் சூழலில், இந்தப் பக்கம் இந்தியா சீனா உறவு சீராகி வருகிறது. டிரம்ப் இந்தியாவுக்கு எதிராக வரிகளை விதிக்கும் சூழலில் சீனாவுக்கு நெருக்கமாக இந்தியா செல்வது கவனிக்க வைப்பதாக இருக்கிறது. டிரம்பின் இந்தியா மீது வரி விதித்ததையும் கூட சீனா கடுமையாக விமர்சித்திருந்தது.
இப்படி டிரம்ப் கலைத்துப் போடும் ஆட்டத்தால் புவிசார் அரசியல் அப்படியே தலைகீழாக மாறியிருக்கிறது. அதேநேரம் இது தற்காலிகமானது. இல்லை இதே நிலை நீடிக்குமா என்பதை நாம் மேலும் சில காலம் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications