டிரம்ப் போரை ஆரம்பித்துவிட்டார்.. இதில் பாதிக்கப்படப் போவது அமெரிக்க மக்கள்தான்.. பாவம்! கனடா தடாலடி
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் திடீரென இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு 25% வரியை விதிக்கப்போவதாக நேற்று அறிவித்தார். இது சர்வதேச அளவில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இதற்கு கடும் பதிலடி கொடுத்துள்ள கனடா பிரதமர் கார்னி, டிரம்ப் உலக வர்த்தக போரை ஆரம்பித்துவிட்டதாகவும் இதில் அதிகம் பாதிக்கப்படப்போவது அமெரிக்க மக்கள் தான் என்றும் கூறியிருக்கிறார்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் திடீர் திடீரென ஒவ்வொரு உத்தரவுகளை அறிவித்து வருகிறார். அப்படி தான் நேற்றைய தினம் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் கார்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்தார். வாகனங்கள் மட்டுமின்றி உதிரிப் பாகங்கள் உட்பட எல்லா பொருட்களுக்கும் 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார். மேலும், இந்த வரி நிரந்தரமாக இருக்கும் என்றும் டிரம்ப் சொன்னது பரபரப்பைக் கிளப்பியது.

கனடா பிரதமர் கார்னி
இதற்குக் கனடா பிரதமர் மார்க் கார்னி கடுமையாகப் பதிலடி கொடுத்துள்ளார். இது கனடா மீதான மிகவும் நேரடி தாக்குதல் என்று குறிப்பிட்டும் பிரதமர் மார்க் கார்னி, "நாங்கள் எங்கள் தொழிலாளர்களைப் பாதுகாப்போம்.. எங்கள் நிறுவனங்களைப் பாதுகாப்போம்.. எங்கள் நாட்டைப் பாதுகாப்போம்" என்றார்.
அதேநேரம் அமெரிக்காவுக்குப் பதிலடியாக கார்னி வரிகளை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுபோல எந்தவொரு அறிவிப்பையும் அவர் வெளியிடவில்லை. இது தொடர்பான கேள்விக்கு, "நாங்கள் பதிலடி கொடுக்க தயாராகவே இருக்கிறோம். ஆனால், அதற்கு முன்பு டொனால்ட் டிரம்பின் உத்தரவின் விவரங்களை முழுமையாக செக் செய்ய வேண்டும்" என்றார்.
அவசர கூட்டம்
கனடாவில் இப்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார்னி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருந்தார். ஆனால், டிமர்ப்பின் வரி அறிவிப்பு வந்தவுடன் அவர் தேர்தல் பிரச்சாரத்தைப் பாதியில் ரத்து செய்துவிட்டு தலைநகருக்குப் புறப்பட்டார். டிரம்பின் வரி அறிவிப்பு குறித்தும் அமெரிக்க- கனடா உறவுகள் குறித்தும் அமைச்சரவைக் குழுவின் சிறப்புக் கூட்டத்தை நடத்தினார்.
கடும் பாதிப்பு
கனடா பிரதமர் இந்தளவுக்குப் பதறக் காரணம் இருக்கவே செய்கிறது. ஏனென்றால் டிரம்பின் இந்த உத்தரவால் அதிகம் பாதிக்கப்படப்போவது கனடா தான். அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 4ல் ஒரு கார் (சுமார் 25%) கனடா நாட்டில் இருந்தே இறக்குமதி செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது. டிரம்பின் இந்த உத்தரவால் பாதிக்கப்படும் ஆட்டோமொபைல் துறையில் பணிபுரியும் கனடா நாட்டு மக்களைப் பாதுகாக்க 2 பில்லியன் டாலர் (கனடிய டாலர்) மதிப்பிலான திட்டத்தை கார்னி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக போரை ஆரம்பித்துவிட்டார்
டிரம்பை தொடர்ந்து விமர்சித்துப் பேசிய பிரதமர் கார்னி, "அதிபர் டிரம்ப் சர்வதேச வர்த்தகப் போரை ஆரம்பித்துள்ளார். டிரம்பின் முடிவுகள் வெளிநாட்டினரை மட்டுமில்லை.. அமெரிக்கர்களையும் பாதிக்கின்றன. குறிப்பாக அமெரிக்கர்கள் தான் மோசமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.. அவரது நடவடிக்கை அமெரிக்க மக்களையும் மற்றும் தொழிலாளர்களைப் பாதிக்கிறது. அமெரிக்க மக்கள் நம்பிக்கையற்று இருப்பது சர்வேக்களில் தெளிவாகத் தெரிகிறது.

டிரம்ப் கனடாவை உடைக்க பார்க்கிறார். அதன் பிறகு கனடாவைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியும் என்பதால் அவர் இதுபோல செய்கிறார். ஆனால், அது ஒருபோதும் நடக்காது. நடக்கவும் விட மாட்டோம்.. கனடாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு மாறிவிட்டது உண்மைதான். ஆனால், அதை நாங்கள் மாற்றவில்லை" என்றார்.
அமெரிக்கா கனடா உறவு
அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையே பல காலமாகவே நல்லுறவு இருந்து வந்தது. டிரம்பின் குடியரசு கட்சியைச் சேர்ந்த பல தலைவர்கள் இதற்கு முன்பு அதிபரான போதும் கனடா உடனான நல்லுறவு தொடர்ந்தது. ஆனால், டிரம்ப் 2வது முறையாக ஆட்சியை அமைத்த வந்த ஒரே மாதத்தில் கனடா அமெரிக்கா உறவு மிக மோசமான அளவுக்குப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications