அதிபராக இருக்க தகுதியற்றவர் டிரம்ப்.. அவரை மீண்டும் தேர்ந்தெடுக்காதீர்கள்.. மிச்செல் ஒபாமா விளாசல்
வாஷிங்டன்: நமது நாட்டுக்கு டொனால்ட் ட்ரம்ப் ஒரு தவறான அதிபர் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதிபருக்கான தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடக்கவிருக்கும் நிலையில் மிச்செல் மிகக் கடுமையாக தாக்கி விமர்சித்துப் பேசியுள்ளார்.

அமெரிக்கா அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் அதிபருக்கான களத்தில் மீண்டும் டொனால்ட் ட்ரம்ப் நிற்கிறார். இவரை எதிர்த்து ஜனநாயகக் கட்சி சார்பில் அதிபர் தேர்வுக்கு ஜோ பைடனும், துணை அதிபர் தேர்வுக்கு கமலா ஹாரிஸும் போட்டியிடுகின்றனர். டொனால்ட் ட்ரம்ப்புக்கு முன்பு ஜனநாயக கட்சி சார்பில் இரண்டு முறை அதிபராக இருந்தவர் பராக் ஒபாமா. இவரது மனைவி மிச்செல் ஒபாமா.
ஜனநாயகக் கட்சி சார்பில் நடைபெற்ற வீடியோ கான்பரன்சிங் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றியுள்ளார் மிச்செல். அதில் கலந்து கொண்ட அவரது 19 நிமிட வீடியோ பேச்சு வைரலாகியுள்ளது. அதில் அவர் அதிபர் டிரம்ப்பை சரமாரியாக விமர்சித்துள்ளார். அதில் அதிபர் தேர்தல் நாம் என்ற உண்மையை உலகிற்கு உணர்த்தும் என்று தெரிவித்துள்ளார்.
'நமது நாட்டின் தவறான அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அவரது வேலையை அவர் நன்றாக செய்வார் என்று எதிர்பார்த்து அவருக்கு போதிய கால அவகாசத்தை நாம் வழங்கி விட்டோம். இனியும் தர முடியாது. அவர் இந்தப் பதவிக்கு பொருத்தமானவர் இல்லை என்பதை நிரூபித்து விட்டார். நாம் யார் வேண்டும் என்று எதிர்பார்த்தோமோ அவராக அவரால் செயல்பட முடியவில்லை.
வாக்காளர்கள் பைடனுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க வேண்டும். உங்களது தபால் வாக்குகளை வீணடித்து விடாதீர்கள். சரியாக பயன்படுத்துங்கள். நாட்டில் ஊழலை ஒழிக்க பைடன்தான் சரியான தேர்வாக இருப்பார். நம்முடைய வாழ்க்கையை முடிவு செய்யக்கூடியது இந்த தேர்தல். நமது வாழ்க்கை இந்த தேர்தலை சார்ந்து இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு நாட்டில் 150,000 பேர் உயிரிழந்து உள்ளனர். பொருளாதாரம் பெரிய அளவில் அடி வாங்கி இருக்கிறது. மில்லியன் கணக்கில் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். அதிபர் பதவிக்கு தகுதியற்றவர் ட்ரம்ப். இந்தப் பதவியில் இருப்பவர்களுக்கு தெளிவான முடிவு, சிந்தனை வேண்டும். அது அவருக்கு இல்லை. அடிப்படை தேவைகளுக்கு மக்கள் திண்டாடி வருகின்றனர்.
நாட்டில் இனவெறி அதிகரித்துள்ளது. போலீசாரின் பிடியில் ஜார்ஜ் ஃபிளாய்டு உயிரிழந்தார். இதை எதிர்த்து நாடு தழுவிய போராட்டம் நடந்தது. இந்த சம்பவத்தை நேரடியாக குழந்தைகளும் பார்த்தனர். வெளிப்படையாக எரிச்சலூட்டும் சம்பவமாக இது அமைந்து இருந்தது. நாட்டில் அமைதியாக போராட்டம் நடத்திக் கொண்டு இருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது.
வெறுப்புக்கு எதிராக எவ்வாறு உயிர் வாழ்வது. மக்கள் அச்சத்தில் உள்ளனர். கடவுளுக்கு கீழே நாம் அனைவரும் ஒரு தேசமாக இருக்கிறோம். நாம் ஜீவித்து உயிர் வாழ வேண்டும். நமது வேறுபாட்டுக்கும் இடையே நாம் ஒருங்கிணைந்து வாழ வேண்டும்.
நீங்கள் அனைவரும் ஜோ பைடனுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். உண்மையை பேசுபவர். அறிவியல் மீது நமபிக்கை கொண்டு இருப்பவர். நமது காயங்களுக்கு மருந்தாக இவர் செயல்படுவார்'' என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications