வெனிசுலாவின் அடிமடியில் கைவைத்த டிரம்ப்.. வெளியான அதிரடி உத்தரவு
வாஷிங்டன்: வெனிசுலா நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ அமெரிக்காவால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். இனி வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அரசுக்கு, அமெரிக்காவிற்கு 50 மில்லியன் பீப்பாய் எண்ணெய் கொடுக்க வேண்டும் என்று டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது வெனிசுலாவில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்திருப்பது அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கும் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.

அமெரிக்கா - வெனிசுலா பதற்றம்
இதற்கு வெனிசுலா, "நிகோலஸ் மதுரோவுக்கு துணை நிற்போம். இடைக்கால அதிபர் தலைமையில் ஒன்றிணைந்து அமெரிக்கா நடவடிக்கையை தவிடு பொடியாக்குவோம்." என்று கூறியிருந்தனர். ஆனால் டிரம்போ, "நாங்கள் சொல்வதை டெல்சி ரோட்ரிக்ஸ் கேட்க வேண்டும். அப்படி கேட்கவில்லை என்றால், அதற்கு அவர் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டும். தேவைப்பட்டால் வெனிசுலா மீது புதிய ராணுவ தாக்குதல் நடத்தி டெல்சி மீது நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பகிரங்கரமாக மிரட்டினார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு ஐநா சபை மற்றும் சீனா, ரஷ்யா, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் உள்ள எதிர்க்கட்சிகளும் கூட இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளன. எண்ணெய் வளம் மிகுந்த வெனிசுலா மீது குறிவைக்கப்பட்டதன் பின்னணியில் உள்நோக்கம் இருப்பதாக சந்தேகம் எழுப்பி வந்தனர்.
டிரம்ப் அறிவிப்பு
இதனிடையே வெனிசுலாவை நிர்வகிப்போம் என்று சொன்ன அமெரிக்கா அதில் இருந்து பின்வாங்கியது. வெனிசுலாவை அமெரிக்கா நிர்வாகம் செய்யாது. தேவைப்பட்டால் அவர்களை வழிநடத்துவோம் என்றும் கூறியிருந்தனர். ஆனால் திடீர் திருப்பமாக வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை குறிவைத்து நேரடியாக வெளியிட்டிருக்கும் அறிவிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வெனிசுலா இடைக்கால அரசு அமெரிக்காவிற்கு, 30 முதல் 50 மில்லியன் பீப்பாய்கள் உயர்தர அனுமதிக்கப்பட்ட எண்ணெயை வழங்குவார்கள் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறேன். இந்த எண்ணெய் சந்தை விலையில் விற்பனை செய்யப்படும். அந்தப் பணம் வெனிசுலா மற்றும் அமெரிக்க மக்களுக்கு பயனளிக்க உறுதி செய்யப்படும்.
எண்ணெய் வளம் டார்கெட்
அமெரிக்க அதிபராக இந்த பணத்தை என்னால் கட்டுப்படுத்த முடியும். வெனிசுலா நாட்டின் எரிசக்தி துறை செயலாளர் கிறிஸ் ரைட் இந்த திட்டத்தை உடனே நிறைவேற்ற கேட்டு கொண்டுள்ளேன். இந்த எண்ணெய் வெனிசுலா சேமிப்பு கப்பல்கள் மூலம் எடுத்து வரப்பட்டு, அமெரிக்கா கப்பல்துறைக்கு நேரடியாக இறக்கப்படும்" என்று கூறியுள்ளார். அவரின் இந்த அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications