கண் சிவந்த டிரம்ப்.. சோமாலியாவில் இறங்கிய அமெரிக்க ராணுவம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் அதிரடி ஆப்ரேஷன்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பெயரில் அந்நாட்டு ராணுவம் சோமாலியாவில் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குப் பதுங்கியிருந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் நடத்திய தாக்குதலில் பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்துள்ளார். டிரம்ப் அதிபர் பதவிக்கு வந்த பிறகு வெளிநாட்டு மண்ணில் அமெரிக்க ராணுவம் நடத்திய முதல் தாக்குதல் இதுவாகும்,
அமெரிக்க அதிபராகக் கடந்த ஜனவரி 20ம் தேதி பதவியேற்ற டிரம்ப் தொடர்ச்சியாகப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இப்போது சர்வதேச பயங்கரவாதம் தொடர்பாக முக்கிய உத்தரவை அவர் பிறப்பித்திருக்கிறார்.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள்
இதற்கிடையே கிழக்கு ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் உள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவின் பெயரில் நடந்த இந்த வான்வழித் தாக்குதல்களில் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தள பக்கத்தில், "சோமாலியாவில் உள்ள மூத்த ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதி மற்றும் அவரால் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் இணைந்த பிற பயங்கரவாதிகள் மீது துல்லியமான ராணுவ விமானத் தாக்குதல்கள் நடத்த இன்று காலை நான் உத்தரவிட்டேன். குகைகளில் பதுங்கியிருந்த இந்த கொலையாளிகள், அமெரிக்காவையும் நேச நாடுகளையும் அச்சுறுத்தினர் அமெரிக்கா நடத்திய இந்த தாக்குதல்கள் அவர்கள் வசிக்கும் குகைகளை அழித்தன.. பொதுமக்களுக்குத் தீங்கு விளைவிக்காமல் பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
டிரம்ப் உத்தரவு:
இந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதியைப் பல ஆண்டுகளாகவே அமெரிக்க ராணுவம் குறிவைத்து இருந்தது. ஆனால், இதற்கு முன்பு அதிபராக இருந்த பைடன் விரைவாகத் தேவையான உத்தரவைப் பிறப்பிக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர். அந்த உத்தரவை நான் பிறப்பித்தேன். ஐஎஸ்ஐஎஸ் மற்றும் அமெரிக்கர்களைத் தாக்க நினைக்கும் அனைவருக்கும் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.. நீங்கள் எங்கே இருந்தாலும் நாங்கள் கண்டுபிடிப்போம்.. உங்களை அழிப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.
வெளிநாட்டு மண்ணில் அமெரிக்க ராணுவம் இதுபோல தாக்குதலை நடத்துவது இது முதல்முறை இல்லை.. கடந்த காலங்களில் பல முறை அமெரிக்க ராணுவம் இதுபோல வெளிநாட்டு மண்ணில் தாக்குதல் நடத்தியிருக்கிறது. ஆனால், டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பொறுப்பேற்ற பிறகு வெளிநாட்டில் அமெரிக்க ராணுவம் நடத்தியுள்ள முதல் தாக்குதல் இதுவாகும்.
ஒருங்கிணைந்த தாக்குதல்:
டிரம்ப் உத்தரவைத் தொடர்ந்து அமெரிக்க ராணுவத்தின் ஆப்பிரிக்கா கமேண்ட் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. சோமாலியா அரசின் ஒருங்கிணைப்புடனே இந்தத் தாக்குதல் நடந்ததாகச் சொல்லப்படுகிறது.
அமெரிக்க ராணுவம் நடத்திய இந்தத் தாக்குதலில் யார் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை டிரம்ப் பகிரவில்லை. பல தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மட்டும் பென்டகன் அறிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் பென்டகன் கூறியுள்ளது. அதேநேரம் கொல்லப்பட்ட முக்கிய தீவிரவாதி யார்! இதில் மொத்தம் எத்தனை தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த தகவல்களை டிரம்ப் தரப்போ அல்லது பென்டகன் தரப்போ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே சோமாலியா நாட்டில் பல்வேறு தாக்குதல்களை ஐஎஸ்ஐஎஸ்-சோமாலியா அமைப்பு தொடர்ந்து நடத்தி வந்தது. சோமாலியாவில் பல நூறு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications