டிரம்பின் அடுத்த வெடி! இந்த 2 நாட்டினர் அமெரிக்காவில் கால் வைக்க முடியாது! லிஸ்டில் இந்தியா இருக்கா?
வாஷிங்டன்: குடியேற்றத்தை கட்டுப்படுத்த போகிறேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் இஷ்டத்திற்கு ஏகப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். இது சர்வதேச அளவில் மிக பெரியளவில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே இரு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அமெரிக்காவுக்குள் நுழைய மொத்தமாகத் தடை விதிப்பது குறித்து டிரம்ப் ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் தொடர்ச்சியாகப் பல உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவரது உத்தரவுகள் தொடர்ச்சியாகச் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது. இருப்பினும், அதை எல்லாம் அவர் கண்டுகொள்வதாக இல்லை. மீண்டும் அமெரிக்காவை ஒரு சிறந்த நாடாக மாற்றப் போவதாகச் சொல்லி டிரம்ப் ஏகப்பட்ட உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக டிரம்ப் ஒரு மிக முக்கிய உத்தரவைப் பிறப்பிக்கப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இரு நாடுகளுக்குத் தடை
கொரோனா காலகட்டத்தில் அவர் சீனாவில் இருந்து வருவோருக்குப் பயண தடை விதித்தது அனைவருக்கும் நினைவு இருக்கும். கொரோனா பரவலை நிறுத்த டிரம்ப் இதுபோன்ற உத்தரவைப் பிறப்பித்திருந்தார். இதற்கிடையே இப்போது மீண்டும் அதேபோல ஒரு பயண தடையைத் தான் டிரம்ப் பிறப்பிக்கப் போகிறாராம். புதிய உத்தரவின் கீழ் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முடியாது. அடுத்த வாரமே கூட இந்த உத்தரவை டிரம்ப் அறிவிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
லிஸ்டில் உள்ள நாடுகள்
சில நாடுகளில் விமான பயணிகளின் பாதுகாப்பு மற்றும் சோதனை முறையாக இருக்காது. இதன் காரணமாகவே டிரம்ப் இந்தத் தடை விதிக்க உள்ளதாகப் பெயர் வெளியிட விரும்பாத வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது இந்த லிஸ்டில் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் இருப்பதாகக் குறிப்பிடும் அந்த அதிகாரிகள், வேறு சில நாடுகளும் கூட இதில் கடைசி நிமிடத்தில் சேர்க்கப்பட வாய்ப்பு உள்ளதாகச் சொல்லி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆதிக்கத்தால் பல ஆயிரம் பேர் அங்கிருந்து அகதிகள் அல்லது சிறப்புக் குடியேற்ற விசாக்கள் (SIVs) மூலம் அமெரிக்காவில் குடியேற இருந்தனர். ஆனால், டிரம்பின் இந்த உத்தரவால் அது முடியாமல் போகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
பின்னணி என்ன?
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற உடனேயே தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை அடையாளம் காணும் வகையில் அமெரிக்காவிற்குள் நுழைய முயலும் வெளிநாட்டினரை மறுபரிசீலனை செய்யக் கட்டாயப்படுத்தும் உத்தரவைப் பிறப்பித்தார். அதன்படி போதுமான பரிசோதனை இல்லாததால் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை விதிக்கலாம் என்பது குறித்த லிஸ்ட்டை மார்ச் 21ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க டிரம்ப் உத்தரவிட்டிருந்தார்.
லிஸ்டில் இந்தியா இருக்கா?
அதன் அடிப்படையில் அமெரிக்காவின் பல்வேறு துறைகளும் எந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை விதிக்கலாம் என்ற லிஸ்டை அளித்தன. அதன் அடிப்படையிலேயே முதற்கட்டமாகப் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்களுக்கு மொத்தமாகத் தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் சில நாடுகளுக்குக் கூடுதல் கட்டுப்பாடுகளும் விதிக்கப்படலாம் எனத் தெரிகிறது. அதேநேரம் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலைப் பகிர அமெரிக்க அதிகாரிகள் மறுத்துவிட்டனர்.
ஏற்கனவே டிரம்ப் தனது இஷ்டத்திற்கு உலக நாடுகள் மீது வரிகளை விதித்து வருகிறார். இதனால் வர்த்தக போர் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் இதுபோல பயண தடையையும் டிரம்ப் அறிவித்தால் அது நிலைமை மேலும் சிக்கலாக்கும் என்றே தெரிகிறது.












Click it and Unblock the Notifications