டிரம்பின் 2.0 வெடி.. இனி இந்த 41 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா வர முடியாது? இந்தியாவுக்கு சிக்கல்?
வாஷிங்டன்: டிரம்ப் இப்போது பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களும் அமெரிக்காவுக்கு வருவதைக் கட்டுப்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்த நாடுகளின் விசா செயல்முறையில் குழப்பம் இருக்கிறதாம்.. இதனால் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வரக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது. இந்த லிஸ்டில் எந்த நாடுகள் உள்ளன! இதற்கான காரணம் என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
அமெரிக்க அதிபரான டிரம்ப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். குறிப்பாகச் சட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்கிறேன் என அவர் எடுத்த நடவடிக்கை அனைவருக்கும் நினைவில் இருக்கும். சட்டவிரோத குடியேற்றம் மட்டுமின்றி வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதையும் கூட கட்டுப்படுத்த டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

டிரம்ப் போடும் பிளான்
அதன் ஒரு பகுதியாகத் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் பல்வேறு நாடுகளை அமெரிக்க அரசு ரெடி செய்து வருகிறதாம். இந்த நாட்டை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வரத் தடை விதிக்க அல்லது கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்க டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா சமயத்தில் டிரம்ப் இதுபோல தான் சீனாவைச் சேர்ந்தவர்கள் வர மொத்தமாக தடை விதித்திருந்தார். இப்போது தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் சுமார் 41 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு டிரம்ப் தடை விதிக்க போகிறார்.
பரிசீலனை லிஸ்டில் 41 நாடுகள் இருக்கும் நிலையில், இறுதி பட்டியலில் ஓரிரு நாடுகள் சேர்க்கப்படும்.. அல்லது நீக்கப்படும் என்ற போதிலும் இந்த விவகாரத்தில் நிச்சயம் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தீவிரம் காட்டி வருகிறது. இன்னும் சில நாட்களில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
மொத்தமாக தடை
ஆப்கானிஸ்தான், கியூபா, ஈரான், லிபியா, வட கொரியா, சோமாலியா, சூடான், சிரியா, வெனிசுலா, ஏமன் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் வருவதை மொத்தமாகத் தடை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள் விசா கோரி விண்ணப்பித்தாலும் அவை நிராகரிக்கப்படும்.
சுற்றுலா, மாணவர் விசா தடை
எரிட்ரியா, ஹைட்டி, லாவோஸ், மியான்மர், தெற்கு சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்களுக்குச் சுற்றுலா, மாணவர் விசா தடை விதிக்க பரிசீலனை செய்யப்படுகிறது. அதாவது இந்த நாட்டை சேர்ந்த மாணவர்களால் அமெரிக்காவில் வந்து படிக்க மாணவர் விசா பெற முடியாது. மேலும், அமெரிக்காவில் சுற்றிப் பார்க்க வருவோருக்கான சுற்றுலா விசாவும் கிடைக்காது.
பரிசீலனை லிஸ்டில் உள்ள நாடுகள்
பாகிஸ்தான், பூட்டான், அங்கோலா, ஆண்டிகுவா மற்றும் பார்புடா, பெலாரஸ், பெனின், புர்கினா பாசோ, காபோ வெர்டே, கம்போடியா, கேமரூன், சாட், காங்கோ ஜனநாயக குடியரசு, டொமினிகா, எக்குவடோரியல் கினியா, காம்பியா, லைபீரியா, மலாவி, மவுரித்தேனியா, காங்கோ குடியரசு, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, சாவ் டோம் மற்றும் பிரின்சிப், சியரா லியோன், கிழக்கு திமோர், துர்க்மெனிஸ்தான், வனுவாட்டு ஆகிய நாடுகள் பரிசீலனை லிஸ்டில் உள்ளன.
அதாவது இந்த நாடுகளின் விசா நடைமுறையில் குறைபாடுகள் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது. அந்தச் சிக்கல்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் சரி செய்ய வேண்டும். அப்படி நிவர்த்தி செய்யவில்லை என்றால் இந்த நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் மாணவர் மற்றும் சுற்றுலா விசா கிடைக்காது.












Click it and Unblock the Notifications