உலக நாடுகளுக்கு வெடியை வீசிய டிரம்ப்.. வரி விதிக்க போவதாக அறிவிப்பு! எந்த நாட்டுக்கு எவ்வளவு வரி?
வாஷிங்டன்: அமெரிக்காவின் புதிய அதிபராகப் பதவியேற்ற டிரம்ப் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிப்பது குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக இதுபோன்ற இறக்குமதிக்கான கட்டண வசூலிப்பிற்கு எனத் தனியாக ஒரு அமைப்பையே நிறுவப் போவதாகவும் டிரம்ப் அறிவித்தார்.
அமெரிக்காவின் 47ஆவது அதிபரா டொன்லாட் டிரம்ப் திங்கள்கிழமை பதவியேற்றார். அமெரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

அதிபர் டிரம்ப்:
உள்ளூர் நேரப்படி சரியாக நண்பகல் 12 மணிக்கு அதிபராகப் பதவியேற்ற டிரம்ப், அதன் பிறகு நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போதும் அதிரடியாகப் பேசும் டிரம்ப் இந்த முறை அமைதியாக நிதாமானாகவே பேசினார். என்ன தான் பேச்சின் ஸ்டைல் மாறி இருந்தாலும் கூட, அதில் இருந்த கருத்துகள் அதிரடியாகவே இருந்தது.
அமெரிக்காவின் பொற்காலம் தொடங்கிவிட்டதாகத் தனது பேச்சைத் தொடங்கிய அதிபர் டிரம்ப், இனி வரும் நாட்களில் ஒவ்வொரு நாளும் அமெரிக்கா முன்னெப்போதும் இல்லாத வகையில் வலிமையான ஒரு நாடாக மாறும் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். மேலும், அரசியல் எதிரிகளை ஒழித்துக்கட்ட நீதித்துறையை ஆயுதமாகப் பயன்படுத்துவதும் தடுத்து நிறுத்தப்படும் என்றும் அவர் பேசியிருந்தார்.
வரி விதிக்கப் போகிறேன்:
டிரம்ப் தேர்தலுக்கு முன்பிருந்தே அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விதிக்கப் போவதாகப் பேசிய வந்த நிலையில், அது தொடர்பாகவும் அவரது பேச்சில் பல மேஜர் பாயிண்டுகள் இடம்பெற்று இருந்தது. இது தொடர்பாக அவர் பேசுகையில், "அமெரிக்கத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களைப் பாதுகாக்க நமக்கு ஏற்ப ஒரு வர்த்தக சிஸ்டம் தொடங்கப்படும்.
எங்கள் மக்களின் நலனைப் பாதுகாக்க வெளிநாடுகளுக்கு வரி விதிப்போம். வெளிநாடுகளில் இருந்து வரி மற்றும் கட்டணங்கள் வசூலிக்கத் தனியாக ஒரு வருவாய் அமைப்பை நிறுவவுள்ளோம். அது அமெரிக்க அரசுக்கு நிச்சயம் மிகப் பெரிய ஒரு வருவாயை அளிக்கும். இதை எல்லாம் வைத்துக் கொண்டு அமெரிக்காவை மீண்டும் ஒரு உற்பத்தி தேசமாக மாற்றுவேன்.
அமெரிக்கா:
உலகில் வேறு எந்தவொரு உற்பத்தி நாட்டிலும் இல்லாத ஒன்று எங்களிடம் உள்ளது. அதாவது பூமியில் உள்ள எந்த நாட்டிலும் இல்லாத மிகப்பெரிய அளவு எண்ணெய் மற்றும் எரிவாயு எங்களிடம் உள்ளது. உற்பத்தியை அதிகரிக்கக் கவனம் செலுத்தவுள்ள நாங்கள், எங்கள் இயற்கை வளங்களையும் பயன்படுத்தப் போகிறோம்... மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு விலைகளைக் குறைப்போம், கையிருப்புகளை அதிகரிப்போம், அமெரிக்க எரிசக்தியை உலகெங்கும் ஏற்றுமதி செய்வோம்.
அமெரிக்கா இப்போது பணவீக்கத்தால் திண்டாடி வருகிறது. விலைவாசி உயர்வு அமெரிக்கர்களை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. அரசு தேவையற்ற செலவுகளைச் செய்தது மற்றும் எரிசக்தி விலைகள் உயர்வு ஆகியவையே இதற்குக் காரணம் ஆகும். இதனால் எரிசக்தி விலையைக் கட்டுப்படுத்த அவசரநிலையையும் அறிவிப்பேன். இதற்காக எமர்ஜென்சியையும் அறிவிக்கப் போகிறேன்" என்றார்.
எவ்வளவு வரி இருக்கும்:
முன்னதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரி விதிப்பு தொடர்பாக டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "நான் அதிபரான உடன் சில முக்கிய நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கப் போகிறேன். முதலில் அமெரிக்காவுக்குச் சட்டவிரோதமாக மக்கள் வருவதைத் தடுக்க தவறிய மெக்சிகோ மற்றும் கனடா இறக்குமதிகளுக்கு 25%ஐ விதிக்கப் போகிறேன். போலியான பொருட்களைத் தடுக்க தவறியதற்காகச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்குக் கூடுதலாக 10 சதவீத வரியைப் போகிறேன்" எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பாலினம்:
மேலும், பாலினம் தொடர்பாகவும் டிரம்ப் தனது கொள்கையை அறிவித்தார். அதாவது திருநங்கைகளை ஒரு பாலினமாக அங்கீகரிக்கப் போவதில்லை என்ற நிலைப்பாட்டை எடுத்துள்ள டிரம்ப், ஆண் மற்றும் பெண் என்ற இரு பாலினங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதே அமெரிக்க அரசின் அதிகாரப்பூர்வ கொள்கையாக இருக்கும் என அறிவித்தார். மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தாததால் ராணுவத்திலிருந்து நீக்கப்பட்டவர்கள் முழு ஊதியத்துடன் மீண்டும் பணியில் சேர்க்கப்படுவார்கள் என்றும் டிரம்ப் அறிவித்தார்.












Click it and Unblock the Notifications