ஈரானை மீண்டும் மிரட்டிய டிரம்ப்.. அடுத்த தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா? கடும் வார்னிங்
வாஷிங்டன்: ‛‛ஈரானால் விரைவில் அணுஆயுதம் தயாரிக்க முடியாது. அணுசக்தி தளங்களில் இருந்து அணுசக்தி பொருட்களை சரியான நேரத்தில் ஈரானால் எடுத்து செல்ல முடியவில்லை. எனவே ஈரான் மீண்டும் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை எடுத்தால் அடுத்த தாக்குதல் நடத்தப்படும்'' என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடும் வார்னிங் செய்துள்ளார்.
இஸ்ரேல் - ஈரான் இடையே நடந்த போர் நேற்று முடிவுக்கு வந்தது. ஈரான் மீது இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவும் தாக்குதல் நடத்தியது. ஈரான் அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை தடுக்கும் வகையில் இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டது.

ஈரானும் பதிலடி கொடுத்தது. இஸ்ரேல் மீது ஏவுகணைகளை ஈரான் ஏவி தாக்கியது. அதேபோல் கத்தாரில் உள்ள அமெரிக்காவுக்கு சொந்தமான விமானப்படை தளம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.
இப்படி பதற்றம் அதிகரித்த நிலையில் நேற்று போர் முடிவுக்கு வந்தது. இஸ்ரேல் - ஈரான் ஆகியவை போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டன. அமெரிக்கா சார்பில் இருநாடுகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டது. தற்போது இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்து அமைதி திரும்பி உள்ளது. இருப்பினும் பதற்றம் என்பது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ‛‛ஈரானால் விரைவில் அணுஆயுதத்தை தயாரிக்க முடியாது. அணுசக்தி நிலையங்களில் இருந்து ஈரானால் சரியான நேரத்துக்கு பொருட்களை மாற்று இடத்துக்கு கொண்டு செல்ல முடியவில்லை. ஈரானுக்கு இருந்த ஒரு வாய்ப்பு யுரேனியத்தை மட்டுமே செறிவூட்டுவது மட்டுமே. தற்போது அதுவும் அழிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது துல்லியமாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலால் ஈரானின் அணுசக்தி திட்டங்கள் 10 ஆண்டுகள் பின்நோக்கி சென்றுள்ளன. இதனால் ஈரான் மீண்டும் அணுசக்தி திட்டத்தை கட்டியெழுப்பாது. ஈரான் அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்பினால் புதிய தாக்குதல்கள் நடத்தப்படும். இதனால் ஈரான் தனது யுரேனியத்தை மேற்கொண்டு செறிவூட்டல் செய்யப்படாது'' என்றார்.
முன்னதாக கடந்த 22ம் தேதி அதிகாலையில் அமெரிக்கா திடீரென்று ஈரான் மீது திடீரென்று தாக்குதல் நடத்தியது. ஈரானின் மூன்று அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா குண்டு வீசியும், ஏவுகணைகளை ஏவியும் தாக்குதல் நடத்தியது. ஈரானில் உள்ள ஃபோர்டோ, நடான்ஸ், இஸ்ஃபஹான் உள்ளிட்ட அணுசக்தி நிலையங்களை குறிவைத்து அமெரிக்கா ‛அட்டாக்' செய்தது.
இந்த 3 இடங்களிலும் உள்ள அணுசக்தி நிலையங்களில் தான் அணுஆயுதம் தயாரிக்க தேவையான யுரேனியம் ஈரானால் செறிவூட்டப்பட்டு வந்தது. அணுஆயுதம் தயாரிக்க யுரேனியம் 90 சதவீதம் தூய்மையாக இருக்க வேண்டும். ஈரான் யுரேனியத்தை 83 சதவீத அளவுக்கு தூய்மைப்படுத்திய நிலையில் விரைவில் அணுஆயுதம் தயாரிக்க இருந்தது. ஆனால் அதற்குள் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அந்த அணுசக்தி நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியது.
இருப்பினும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் 400 கிலோகிராமை ஈரான் தாக்குதலுக்கு முன்பாகவே எடுத்து சென்றதாக தகவல்கள் வெளியாகின. இந்த யுரேனியத்தை வைத்து 10 அணுகுண்டுகள் தயாரிக்கலாம். இது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு பெரும் பிரச்சனையாக பார்க்கப்பட்டது. ஆனால் டொனால்ட் டிரம்ப் அந்த செய்தியை மறுத்தார். ஈரான் 400 கிலோகிராம் யுரேனியத்தை தனியாக எடுத்து சென்றதாக கூறப்படும் தகவல் பொய் என்று டிரம்ப் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications