ஆட்டை கடித்து, மாட்டை கடித்து! இப்போ கடைசியில் டிரம்ப் என்ன செய்கிறார் பாருங்க! கதறும் அமெரிக்கர்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபரான டிரம்ப் இத்தனை காலம் சட்டவிரோத குடியேறிகளை மட்டுமே நாடு கடத்தி வந்தார். ஆனால், இப்போது அவர் அமெரிக்கக் குடிமக்களையே வெளிநாடுகளுக்கு நாடுகடத்தி, அங்குள்ள சிறைகளில் அடைக்கப்போவதாக டிரம்ப் கூறியிருக்கிறார். இது அங்கு பெரும் விவாதத்தையே கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் பிரச்சாரத்தின்போதே சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை நாடுகடத்தவுள்ளதாகக் கூறி வந்தார். அவர் அதிபராகப் பதவியேற்ற உடனேயே நாடுகடத்தல் நடவடிக்கைகளையும் தீவிரம் காட்டினார். சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்தவர்களை மட்டும் டிரம்ப் நாடு கடத்தினார்.

டிரம்ப் திட்டம்
சட்டச் சிக்கல்களைத் தவிர்க்கச் சட்டவிரோத குடியேறிகளைக் கைது செய்து அவர்களை வெளிநாடுகளில் உள்ள சிறைகளுக்கு டிரம்ப் அனுப்பினார். பிறகு அங்கிருந்து நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அமெரிக்க அரசு எல் சால்வடார் அரசுடன் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருக்கிறது. இத்தனை காலம் சட்டவிரோத குடியேறிகளை மட்டுமே வெளிநாட்டிற்கு நாடுகடத்தி வந்த டிரம்ப், இப்போது அமெரிக்கர்களையும் கூட நாடுகடத்தத் திட்டமிட்டுள்ளார்.
எல் சால்வடார் சிறைகள்
இது தொடர்பாக டிரம்ப் நிர்வாகம் ஆராய்ந்து வருகிறதாம்.. இந்தத் திட்டத்தின் சட்டபூர்வ தன்மை மற்றும் அரசியலமைப்பில் இதற்குச் சாத்தியம் இருக்கிறதா என்பது குறித்து டிரம்ப் தரப்பு ஆராய்ந்து வருகிறது. எல் சால்வடார் அதிபர் நயீப் புகேலியிடம் டிரம்ப் இந்தத் திட்டம் குறித்து முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டு இருக்கிறார். இது தொடர்பாக எல் சால்வடார் அதிபர் நயீப் புகேல் கூறுகையில், "அமெரிக்க அதிபர் டிரம்ப் தனக்குக் கூடுதல் சிறைகள் தேவை என சொன்னார். அமெரிக்காவைச் சேர்ந்த குற்றவாளிகளை எல் சால்வடாரின் மெகா சிறைக்கு அனுப்பும் திட்டம் குறித்துக் குறிப்பிட்டார்" என்றார்.
டிரம்ப் சொல்வது என்ன
டிரம்ப்பும் கூட தன்னிடம் இது தொடர்பான திட்டம் இருப்பதாகவே கூறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், "அடுத்து உள்நாட்டுக் குற்றவாளிகள் தான்.. இன்னும் ஐந்து சிறைகள் தேவைப்படும். அதேநேரம் சட்டப்பூர்வமாக வழி இருந்தால் மட்டுமே இந்த நடவடிக்கையை எடுப்போம். நாம் எப்போதும் சட்டங்களுக்குக் கட்டுப்படுவோம். அதேநேரம் பெண்கள், குழந்தைகள், வயதானோருக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நிச்சயம் சிறையில் தள்ளுவோம். அவர்கள் முழுமையான அரக்கர்கள்" என்றார்.
அதீத வன்முறை நிறைந்த குற்றவாளிகளை மட்டும் நாடுகடத்துவதே டிரம்பின் திட்டம் என வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "நமது சமூகத்தில் இந்த மாதிரி ஒரு ஆள் இருக்கவே கூடாது என மக்கள் நினைப்போரை மட்டுமே நாடுகடத்த ஆலோசித்து வருகிறோம். அதுவும் சட்டப்பூர்வ அனுமதி இருந்தால் மட்டுமே நாடுகடத்துவோம்" என்றார்.
சட்டத்தில் இடமில்லை
இருப்பினும், டிரம்பின் இந்தத் திட்டத்தைப் பலரும் மிகக் கடுமையாகச் சாடியுள்ளனர். அமெரிக்கச் சட்டத்தில் இதற்கு இடமில்லை என்றும் இது அரசியலமைப்பு உறுதி செய்த அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளதாகச் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று குறிப்பிட்ட கேட்டோ இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டேவிட் பியர், அமெரிக்கச் சட்டத்தில் குடிமக்களை நாடு கடத்தவும் வெளிநாடுகளில் சிறையில் அடைக்கவும் அரசுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், "இங்குப் பிரச்சினை என்னவென்றால் டிரம்ப் நிர்வாகம் ஏற்கனவே 200க்கும் மேற்பட்டோரை ரவுடிகள் எனச் சொல்லி நாடுகடத்திவிட்டது. நீதிமன்றங்களுக்கு இந்த விஷயத்தில் தலையிட வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அவர் அமெரிக்கக் குடிமக்களையும் கூட இதேபோல நாடுகடத்துவாரோ என்ற அச்சம் இருக்கிறது" என்றார்.
எல் சால்வடார் ஆதரிப்பது ஏன்
அதேநேரம் எல் சால்வடாரின் அதிபர் புக்கேல், அமெரிக்கக் கைதிகளை அனுப்பினாலும் அவர்களையும் சிறையில் வைத்திருக்க ரெடியாக இருப்பதாகக் குறிப்பிட்டார். அமெரிக்க அரசு எவ்வளவு கைதிகளை அனுப்புகிறதோ.. அவ்வளவு கைதிகளுக்கான பராமரிப்பு தொகை எல் சால்வடாருக்கு கிடைக்கும். இதன் காரணமாகவே அதிபர் புக்கேல் இதற்கு விருப்பம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications