புதினை எச்சரித்த டிரம்ப்.. ரஷ்யா மீது கடும் பொருளாதார தடை.. ஆக்ஷனுக்கு ரெடியான அமெரிக்கா? பரபரப்பு
வாஷிங்டன்: உக்ரைன் மீதான போர் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யாவின் பக்கம் சாய்ந்தார். உக்ரைனை கைவிட்டார். இப்படியான சூழலில் தான் திடீரென்று டொனால்ட் டிரம்ப் கடும் கோபமாகி ரஷ்யாவுக்கு அதிக வரி, கடும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று கொந்தளித்துள்ளார்.
உக்ரைன் மீது 3 ஆண்டுகளாக ரஷ்யா போர் புரிந்து வருகிறது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதொடர்பாக தொலைபேசியில் புதினுடன், டிரம்ப் பேசினார். அதன்பிறகு அமெரிக்கா மற்றும் ரஷ்யா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவுதியில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்தது. உக்ரைன் மீதான போர் நடவடிக்கையால் ரஷ்யா மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்தது. இந்த பொருளாதார தடைகளை நீக்கி இருநாடுகள் இடையே வர்த்தக உறவை மேம்படுத்தவும் அந்த மீட்டிங்கில் பேசப்பட்டது.
அதேபோல் டொனால்ட் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை அழைத்து வெள்ளை மாளிகையில் வைத்து பேசினார். அப்போது இருதரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து பாதியில் விளாடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குழுவை டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் இருந்து விரட்டினார். அதன்பிறகு உக்ரைனுக்கான அமெரிக்க உதவியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து உக்ரைன்
அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா தலைமையில் போர் நிறுத்தத்துக்கு உடன்படுவதாக கூறியுள்ளார். விரைவில் டிரம்ப் - ஜெலன்ஸ்கி ஆகியோர் சந்தித்து பேச உள்ளனர். இருப்பினும் கூட டிரம்ப் நினைத்தபடி உக்ரைன் - ரஷ்யா போரை உடனடியாக முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை. இருதரப்புக்கும் இடையே
இழுபறி என்பது நீடித்து வருகிறது. இப்படியான சூழலில் தான் டொனால்ட் டிரம்ப் கடும் கோபமடைந்து ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ரஷ்யா - அமெரிக்கா இடையேயான உறவு என்பது உக்ரைன் போரால் மோசமான நிலைக்கு சென்றது. இப்போது கடந்த சில வாரங்களாக இருநாடுகள் இடையேயான உறவு மேம்பட்ட நிலையில் டொனால்ட் டிரம்பின் இந்த எச்சரிக்கை என்பது ரஷ்யாவை கோபப்படுத்தும் வகையில் உள்ளது.
இதுதொடர்பாக டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் வலைதளத்தில் ‛‛உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் புதிதாக பொருளாதார தடைகள், அதிக வரிகள் ரஷ்யாவுக்கு விதிக்கப்படும். உக்ரைனும், ரஷியாவும் இறுதி தீர்வுக்கு வரவில்லையெனில், இந்த தடைகள் உடனடியாக நடைமுறைக்கு வரும். இதனால் உடனடியாக உக்ரைனும், ரஷ்யாவும் போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும்'' என்று எச்சரித்துள்ளார்.
இந்த பதிவுக்கு பிறகு டொனால்ட் டிரம்பிடம் போர் நிறுத்தம் தொடர்பாக கேட்டபோது, ‛‛போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனை விட ரஷ்யாவிடம் பேசுவது தான் எளிதாக இருக்கும்'' என்றும் கூறியுள்ளார். இதன்மூலம் ரஷ்யா பேச்சுவார்த்தைக்கு வந்தால் எளிதாக போரை நிறுத்த முடியும் என்று டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications