மீண்டும் அமெரிக்க அதிபரானாலும்... டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும்... டிவிட்டர் அதிரடி
வாஷிங்டன்: மீண்டும் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும்கூட டிரம்பால் ட்விட்டரில் கணக்கை தொடங்க முடியாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்தாண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். கடந்த 25 ஆண்டுகளில் தேர்தலில் தோற்ற முதல் அமெரிக்க அதிபர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்தார்.
இருப்பினும், அவர் பதவியில் இருந்தவரை தனது தோல்வியை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது முதல் தேர்தல் அதிகாரிகளை மிரட்டுவது வரை பல முயற்சிகளை எடுத்தார்.
அமெரிக்க வன்முறை
இருப்பினும், எதிலும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை. இதையடுத்து, கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்ச்சியை எதிர்த்து டிரம்ப் ஆதரவாளர்கள் பேரணியை நடத்தினர். அதில் பேசிய டிரம்ப் கடைசி வரை போராட வேண்டும் என வன்முறையை தூண்டும் வகையில் பேசினார். இதையடுத்து அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் திடீரென்று வன்முறை ஏற்பட்டது. இதில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கணக்கு முடக்கம்
அப்போது பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் தகவல்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்தார். வன்முறையை தூண்ட இதுவும் முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து தொடர்ந்து வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்டு வருவதால் டிரம்பின் ட்விட்டர் கணக்கைத் தற்காலிகமாக முடக்குவதாக அந்நிறுவனம் முதலில் அறிவித்திருந்தது. அதன் பின், டிரம்பின் ட்விட்டர் கணக்கை நிரந்தமாக முடக்குவதாக அறிவிக்கப்பட்டது. டிரம்புடன் அவரது ஆதரவாளர்கள் சிலரது ட்விட்டர் கணக்குகளும் முடக்கப்பட்டன.
ட்விட்டர் விளக்கம்
டிரம்பிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை சில மாதங்களில் ட்விட்டர் தளம் நீக்கவுள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், இது குறித்து சிஎன்பிசி செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ள ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி நெட் செகல், "பொதுமக்களிடையே யாரும் வன்முறையை தூண்டுவதில்லை என்பதை உறுதி செய்யும் விதமாகவே எங்கள் கொள்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதிபரானாலும் பயன்படுத்த முடியாது
எங்கள் சேவைகளைப் பயன்படுத்த ஒரு நபருக்கு, அது யாராக இருந்தாலும், தடை விதிக்கப்பட்டால் மீண்டும் அந்த நபரால் எப்போதும் எங்கள் சேவையைப் பயன்படுத்த முடியாது. அவர் மீண்டும் அதிபர் உட்பட அரசின் எந்தப் பொறுப்பை வகித்தாலும் கூட எங்களின் சேவையைப் பயன்படுத்த முடியாது. வன்முறை ஏற்படுவதைத் தடுக்கவே இந்த கொள்கையை நாங்கள் வகுத்துள்ளோம்" என்றார்