ஷாக்.. அமெரிக்காவில் விழுந்தடித்து அரிசி வாங்கும் இந்தியர்கள்! எந்த அரிசி வகை ஏற்றுமதிக்கு தடை?
வாஷிங்டன்: அரிசி ஏற்றுமதிக்கு இந்திய அரசு திடீரென தடை விதித்து இருப்பதால் வெளிநாடுகளில் இந்திய அரசிகள் விலை உயரும் என்று அஞ்சி, அமெரிக்காவில் இந்தியர்கள் மூட்டை மூட்டையாக அரிசிகளை வாங்கி குவித்தனர்.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக தக்காளி, வெங்காயம் போன்ற காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதேபோல் மற்ற உணவு பொருட்களின் விலையும் உயரும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது. எல் நினோ பருவ கால மாற்றத்தின் காரணமாக சீரற்ற வானிலை நிலவி வருகிறது.

இதனால் அரிசி, காய்கறி உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. இதனாலேயே காய்கறிகளின் விலை உயர்ந்து இருப்பதாக கூறப்படுகிறது. மறுபக்கம் உக்ரைன் துறைமுகங்கள் மீது ரஷிய படைகள் நடத்திய தாக்குதலால் உலகளவில் சரக்கு போக்குவரத்தில் குழப்பம் ஏற்பட்டு கோதுமலை விலை 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தது.
இந்தியாவின் பிரதான உணவாக இருக்கும் அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக அஞ்சப்படுகிறது. இந்த நிலையில் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தீடீரென தடை விதித்து உள்ளது. அதன்படி பாசுமதி அரிசியை தவிர்த்து வேறு எந்த அரிசி வகையும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படாது என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த திடீர் தடை உடனடியாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசின் வர்த்தகத் துறையின் கிளை அமைப்பான வெளிநாட்டு வர்த்தகத்திற்கான இயக்கம் தெரிவித்து உள்ளது. உலக அளவில் அரிசி ஏற்றுமதியில் இந்தியா 40% பங்கு வகிக்கும் நிலையில் இந்த தடை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். உலகளவில் 300 கோடிக்கும் அதிகமானோருக்கு பிரதான உணவாக இருந்து வருவது அரிசிதான்.
இதில் 90% உற்பத்தி ஆசியாவில்தான் நடக்கிறது. பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் வறட்சியால் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக தெரிவிக்கிறார்கள். இந்த தடையின் காரணமாக சர்வதேச அளவில் அரிசியின் விலை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதனால் வணிகர்கள் லாபமடைந்தாலும் அங்கு வாழும் இந்தியர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொள்ளப்போகிறார்கள்.
ஏற்றுமதி சந்தையில் அரிசி விலையில் மெட்ரிக் டன்னுக்கு குறைந்தபட்சம் ரூ.4,100 வரை கூடுதல் லாபம் கிடைக்கும் என்றும், இது ரூ.8000 வரை அதிகரிக்கலாம் என சிங்கப்பூரை சேர்ந்த சர்வதேச வர்த்தக நிறுவன வர்த்தகர் தெரிவித்து இருக்கிறார். கடந்த 10 நாட்களில் மட்டும் அரிசி விலை இந்தியாவில் 20 சதவீதம் அதிகரித்து உள்ளது.

ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட காரணமாக வெளிநாட்டுகளில் அரிசி வாங்க இந்தியர்கள் அலைமோதுகிறார்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சூப்பர் மார்க்கெட் வாயிலில் அரிசி வாங்க நீண்ட வரிசை காத்திருக்கும் வீடியோவை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டு உள்ளன. மூட்டை மூட்டையாக அவர்கள் அரிசி வாங்கிச் செல்வது அந்த வீடியோவில் இடம்பிடித்து உள்ளது.












Click it and Unblock the Notifications