என்ன சொல்றீங்க..பூமியின் உட்புறம் வேகமாக குளிர்கிறதா? இன்ப அதிர்ச்சி தந்த புதிய ஆய்வு- ஏன் முக்கியம்
வாஷிங்டன்: புவி வெப்ப மயமாதல் என்பது உலகின் முக்கிய பிரச்சினையாக மாறி வரும் சூழலில், இது குறித்து புதிய ஆய்வு முடிவுகள் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
புவி வெப்ப மயமாதல் தான் உலக நாடுகள் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளது. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை நாம் அனைவரும் எதிர்கொண்டு வருகிறோம்.
இதனால் பருவம் தவறிப் பெய்யும் மழை, திடீரென அதிகரிக்கும் வெப்பம் ஆகியவற்றால் மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகள் உள்ளிட்ட அனைவரும் பல விதமான சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறோம்.
உங்களால் எங்களுக்கு வேலை கிடக்கலை.. ஆத்திரத்தில் வடமாநில இளைஞரை கத்தியால் வெட்டிய 4 பேர் கைது
புவி வெப்ப மயமாதல்
கடந்த ஆண்டு கூட அமெரிக்கா, கனடா நாடுகளில் கடந்த ஜூலை மாதம் வெப்ப அலை வீசியது. அப்போது வெப்பம் ஒரு கட்டத்தில் 120 டிகிரி பாரான்ஹீட்டையும் தாண்டியது. இதான் அப்போது சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அதேபோல சீனா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட மிக மோசமான வெள்ளத்திலும் ஏகப்பட்ட பேர் உயிரிழந்தனர். இதுபோன்ற சம்பவங்கள் நாம் எவ்வளவு ஆபத்தான சூழலை நோக்கிச் செல்கிறோம் என்பதைக் காட்டும் வகையில் உள்ளது.
உலக நாடுகள்
இது தொடர்பாகக் கடந்த ஆண்டு கிளாஸ்கோவில் ஐநா பருவநிலை மாற்ற மாநாடும் கூட நடந்தது. ஆனால், இதுபோன்ற மாநாடுகளில் உலக தலைவர்கள் அளிக்கும் வாக்குறுதிகளை அவர்கள் பின்பற்றுவது இல்லை என்பதைப் பருவநிலை ஆர்வலர்களின் முக்கிய குற்றச்சாட்டாக உள்ளது. இந்தச் சூழலில் புவியின் வெப்பம் குறித்து வெளியாகியுள்ள புதிய ஆய்வு முடிவு அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தரும் வகையில் அமைந்துள்ளது.
வேகமாகக் குளிர்கிறது
அதாவது பூமியின் உட்புறம் எதிர்பார்த்ததை விட வேகமாக குளிர்ச்சியடைந்து வருவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். புதன் மற்றும் செவ்வாய் கிரகங்களின் உட்புறம் இதேபோல குளிர்ச்சி அடைந்த நிலையில் இப்போது பூமியிலும் அதேபோல ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். கார்னகி இன்ஸ்டிடியூஷன் ஃபார் சயின்ஸின் பேராசிரியர் மோட்டோஹிகோ முரகாமி நடத்திய இந்த ஆய்விலேயே இது கண்டறியப்பட்டுள்ளது.
எப்படி
இந்த ஆய்வில் பூமியின் மையத்தில் இருந்து மேற்புறத்திற்கு வரும் வெப்ப ஓட்டம் முன்பு நினைத்ததை விட வேகமாக உள்ளதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். வெப்ப ஓட்டம் வேகமாக இருப்பது பூமியின் குளிர்ச்சி அதிகரிப்பதையே காட்டுகிறது. இதனால் பூமியில் உள்ள டெக்டோனிக்ஸ் தகடுகளின் வேகமும் குறைகிறது. இதுவும் வெப்ப நிலை குறைய ஒரு காரணமாகக் கண்டறியப்படுகிறது.
ஏன் முக்கியம்
இவை அனைத்தும் சேர்ந்து நமது பூமியை குளிர்விக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக முரகாமி கூறுகையில், "எங்கள் முடிவுகள் பூமியின் இயக்கவியலின் பரிணாம வளர்ச்சியைப் பற்றிய புதிய தகவலைத் தரக்கூடும். மற்ற பாறைக் கோள்களான புதன் மற்றும் செவ்வாய் போலவே பூமியும் வேகமாகக் குளிர்வாக மாறி வருகிறது. இதனால் நமது பூமி குளிர்ச்சியடைய வாய்ப்புள்ளது. ஆனால் இது எவ்வளவு சீக்கிரம் நமது புவியை குளிர்விக்கும் என நமக்கு தெரியாது" என்று அவர் தெரிவித்தார்.