ட்விட்டரில் இனி இஷ்டத்துக்கு விளையாடலாம்! எலான் மஸ்க் சொன்ன ஹேப்பி நியூஸ்! ஆனாலும் ஒரு ஆப்பு இருக்கே
வாஷிங்டன் : ட்விட்டரில் பதிவிடும் போது எழுத்துக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காமல் வந்த எலான் மஸ்க் தற்போது ட்விட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதே நேரத்தில் ஒரு ஷாக் தகவலும் காத்திருக்கிறது.
புலி வருது புலி வருது கதையாக நீண்ட காலமாக ட்விட்டர் பயனாளர்களையும் உலக அளவிலான அரசியல், பொருளாதார பார்வையாளர்களையும் பதட்டத்தில் வைத்திருந்த ட்விட்டர் டீல் முடிந்திருக்கிறது.
ட்விட்டர் நிறுவனம் மக்களின் கருத்துக்கு மதிப்பளிப்பது இல்லை எனவும் அதனை வாங்கப் போவதாகவும் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களின் தலைவரும் உலக அளவில் மிக பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் கூறி இருந்தார்.
'எந்திரன்' பாணியில் மனித மூளைக்குள் சிப்.. எலான் மஸ்க்கின் பலே திட்டம்.. என்னெல்லாம் நடக்கப்போகுதோ?
எலான் மஸ்க்
இதனால் ட்விட்டரில் கருத்து சுதந்திரத்திற்கு வாய்ப்பு கிடைக்கும் எனவும், எலான் மஸ்க் ட்விட்டரை வாங்குவது மிகப் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என பலரும் கூறி வந்தனர். ஆனால் இப்போது அப்போது என டீல் முடியாமல் இழுபறியாகவே இருந்தது. இதை அடுத்து நீதிமன்ற வழக்கு வரை சென்ற நிலையில் தற்போது ஒருவழியாக ட்விட்டரை வாங்கி இருக்கிறார் எலான் மஸ்க்.
அடுத்தடுத்து அதிரடி
ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றிய கையோடு எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் தொடர்பாக பல்வேறு மாற்றங்களை கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறார். அந்நிறுவனம் கைக்கு வந்த உடனேயே ட்விட்டரின் தலைமை செயல் அதிகாரி பாரக் அகர்வால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல், சட்ட அதிகாரி விஜயா கட்டே ஆகியோரை அதிரடியாக பணி நீக்கம் செய்தார்.
நேரடி கட்டுப்பாடு
அதோடு ஒட்டுமொத்தமாக நிர்வாக குழுவையும் நீக்கிவிட்டு எலான் மஸ்க்கே நேரடியாக நிர்வாகம் செய்ய திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஊழியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலர் பணி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பணியில் இருக்கும் மென்பொறியாளர்கள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறியதோடு, ப்ளு டிக் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்கும் ஷாக் தகவல்களையும் கொடுத்தார்.
எழுத்து எண்ணிக்கை
இந்நிலையில் மீண்டும் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார் எலான் மஸ்க். இது ஒருவகையில் ட்விட்டர் பயனர்களுக்கு சந்தோஷமான விஷயம் என்று தான் சொல்ல வேண்டும். ட்விட்டர் பதிவுகளை பொருத்தவரை தற்போது 280 எழுத்துக்களில் மட்டுமே பதிவு செய்ய முடியும். இந்த எண்ணிக்கை மைக்ரோ ப்ளாகிங் தளமாக ட்விட்டர் ஆரம்பித்த போது 140ஆக இருந்த நிலையில் 2017ல் தான் 280 ஆக உயர்த்தப்பட்டது. எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு இதில் மாற்றம் கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. பல்வேறு அதிரடிகளை அடுத்தடுத்து காட்டி வந்தாலும் எழுத்துக்களின் எண்ணிக்கையை உயர்த்துவது குறித்து எந்த விதமான கருத்தையும் தெரிவிக்காமல் வந்த எலான் மஸ்க் தற்போது ட்விட்டர் பயனாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
ப்ளூ டிக் கட்டணம்
அதன்படி ட்விட்டரில் போஸ்ட் கேரக்டர் எண்ணிக்கையை பயனாளர்களின் வசதிக்காக 280ல் இருந்து 4000 ஆக உயர்த்த உள்ளதாக எலான்மஸ் அறிவித்திருப்பது பயனாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அலன் ஒபேர் என்ற ட்விட்டர் பயனர் தனது பதிவில் ட்விட்டர் எழுத்து வரம்பை 4000 ஆக நீட்டிக்கப் போகிறதா என்று கேட்டபோது, எலான் மஸ்க் விரைவாக "ஆம்" என்று பதிலளித்தார். இதனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் கெட்ட செய்தியாக ட்விட்டரில் ப்ளூ டிக் பயனர்களுக்கு கட்டணம் வசூலிக்கும் நடைமுறையும் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.