எலான் மஸ்க்கிற்கு ட்விஸ்ட் தந்த டொனால்டு டிரம்ப்..வெள்ளை மாளிகை தந்த அதிரடி விளக்கம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் DOGE துறைக்கும் எலான் மஸ்க்குக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று அமெரிக்காவின் அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துளளது. அமெரிக்காவின் அரசாங்கத்தின் DOGE துறை என்பது அதிபரின் நிர்வாக அலுவலகத்தின் ஓர் அங்கமாக இருக்கிறது. அத்துறை சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் எலான் மஸ்க்கிற்கு இல்லை. அவர், அதிபரின் மூத்த ஆலோசகராக மட்டுமே பணியாற்றுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் புதிதாக அதிபரான டிரம் கீழ் செயல்படும் DOGE அமைப்பின் முக்கிய நிர்வாகியாக ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ்தாளம் உள்ளிட்ட நிறுவனங்கின் தலைவரும், உலகின் நம்பர் ஒன் செல்வந்தருமான எலான் மஸ்க் உள்ளார். எலான் மஸ்க் முக்கிய நிர்வாகியாக உள்ள DOGE அமைப்பு அரசு நிர்வாகத்தை மேம்படுத்துதல் மற்றும் வீண் செலவினங்களை கட்டுப்படுத்துதல் ஆகிய பணிகளை செய்து வருகிறது. அரசு துறையில் அதிகப்படியாக உள்ளவர்கள் பணிநீக்கம், அனாவசிய நிதி செலவுகள் ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவருகிறது அந்த அமைப்பு.

எலான் மஸ்க் தான் இப்படி முடிவுகளை எடுப்பதாக அந்நாட்டில் மக்கள் கொதித்து போயிருக்கிறார்கள். இதனால் அமெரிக்காவில் அதிபர் டொனால்டு ட்ரம்பின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட தொடங்கி உள்ளார்கள். மேலும் எலான் மஸ்கிற்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டி அவர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.. இது ஒருபுறம் எனில் அமெரிக்க நீதிமன்றத்திலும் எலான் மஸ்க் அதிகாரம் தொடர்பாக கேள்விகள் எழுப்பி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் பதில் அளித்துள்ள வெள்ளை மாளிகை, அமெரிக்காவின் DOGE துறைக்கும் எலான் மஸ்க்குக்கும் எந்த தொடர்புமில்லை என குறிப்பிட்டுள்ளது. வெள்ளை மாளிகை சார்பில் நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், 'அமெரிக்காவின் DOGE துறைக்கும் எலான் மஸ்க்குக்கும் எந்த தொடர்புமில்லை. அமெரிக்காவின் அரசாங்க செயல்திறன் துறை (DOGE) என்பது அதிபரின் நிர்வாக அலுவலகத்தின் ஓர் அங்கமாக உள்ளது. அத்துறை சார்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எதுவும் எலான் மஸ்க்கிற்கு கிடையாது. அவர், அதிபரின் மூத்த ஆலோசகராக மட்டுமே பணியாற்றுகிறார்' எனன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக எலான் மஸ்க் ஆலோசகராக உள்ள அமெரிக்க அரசின் அரசாங்க செயல்திறன் ( DOGE) துறை செலவினங்களை குறைப்பதாக கூறி பல்வேறு நாடுகளுக்கு வழங்கப்படும் நிதி உதவிகளை நிறுத்தி இருக்கிறது. இந்தியாவுக்கு வழங்கப்படும் நிதி உதவியை எலான் மஸ்கின் அரசாங்க செயல்திறன் துறை நிறுத்தி இருந்தது. அந்த துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க வரி செலுத்துவோரின் டாலர்கள் வெளிநாடுகளின் பல திட்டங்களுக்கு வீணாக செலவிடப்படுகிறது. ஆகவே அந்த நிதிகள்அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன.
அதன்படி இந்தியாவில் ஓட்டு சதவீதத்தை அதிகரிப்பதற்காக அந்த நாட்டுக்கு வழங்கப்பட்டு வரும் 21 மில்லியன் டாலர் (சுமார் ரூ.182 கோடி) நிதி உதவி நிறுத்தப்படுகிறது. இதேபோல் வங்காளதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட வழங்கி வந்த 21 மில்லியன் டாலர் (ரூ.182 கோடி), நேபாளத்திற்கு நிதி கூட்டாட்சிக்கு வழங்கப்பட்டு வந்த 20 மில்லியன் டாலர் (ரூ.173 கோடி) மற்றும் பல்லுயிர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டு வந்த 19 மில்லியன் டாலர் (ரூ.164 கோடி), ஆசியாவில், கற்றல் மேம்பாட்டை அதிகரிக்க வழங்கப்படும் 47 மில்லியன் டாலர் (ரூ.407 கோடி) ஆகிய நிதி உதவிகளும் நிறுத்தப்படுகிறது என்று அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications