பெரிய பிளான்.. இந்தியாவுக்கு வராமல் திடீரென சீனாவுக்கு விசிட் அடிக்கும் எலான் மஸ்க்.. என்னாச்சு
வாஷிங்டன்: உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் இந்த மாதத்தில் இந்தியா வருவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அவரது இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில், இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், எலான் மஸ்க் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவர் எலான் மஸ்க். இவரது டெஸ்லா நிறுவனம் சா்வதேச அளவில் மின்சார வாகனத் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மேலும் பிரபல சமூக வலைத்தளமான ட்விட்டரையும் பல லட்சம் கோடிகள் கொடுத்து சொந்தமாக்கினார். இது போக விண்வெளி ஆய்வு நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் போன்ற நிறுவனங்களில் தலைவராகவும் எலான் மஸ்க் உள்ளார்.

இவர் கடந்த வாரம் இந்தியாவுக்கு வர திட்டமிட்டு இருந்தார். இந்தியாவில் டெஸ்லா நிறுவனத்தின் முதலீடு மற்றும் ஸ்டார் லிங் உள்ளிட்டவைகள் குறித்த அறிவிப்பை எலான் மஸ்க் வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எலான் மஸ்கின் இந்த பயணம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென அவரது இந்திய பயணம் திடீரென தள்ளிவைக்கப்பட்டது.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் வெளியிட்டு இருந்த பதிவில் “டெஸ்லா நிறுவனம் தொடர்பான முக்கிய சந்திப்பு இருப்பதால் துரதிர்ஷ்டவசமாக இந்தியாவுக்கு தற்போது வர முடியவில்லை. எனினும் இந்த ஆண்டின் இறுதியில் இந்தியாவுக்கு வருவதை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்” என்று கூறியிருந்தார்.
டெஸ்லா நிறுவனம் தொடர்பாக பல்வேறு பணிகள் இருப்பதாக இந்திய பயணத்தை தள்ளிவைத்த எலான் மஸ்க்.. மறுவாரமே சீனாவுக்கு பயணம் மெற்கொண்டுள்ளார். மின்சார வாகன சந்தையில் உலகின் இரண்டாவது பெரிய நாடாக சீனா உள்ளது. எனவே, எலான் மஸ்கின் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. தனது சீன பயணத்தில் சீன அதிகாரிகளை சந்தித்து தானியங்கி கார்களுக்கான (FSD) மென்பொருளை சீனாவில் அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
அதேபோல், தானியங்கி கார்களுக்கான தொழில் நுட்பம் தொடர்பாக சேகரித்த டேட்டாக்களை பகிர்ந்து கொள்வதற்கு ஒப்புதல் பெறுவது தொடர்பாகவும் எலான் மஸ்க் ஆலோசிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. முன்னதாக எக்ஸ் தளத்தில் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த எலான் மஸ்க், சீனாவில் வாடிக்கையாளர்களுக்கு தானியங்கி கார்களை விரைவில் டெஸ்லா கிடைக்க செய்யும் என்றும் கூறியிருந்தார்.
இந்த சூழலில்தான் எலான் மஸ்க் திடீர் பயணமாக சீனாவுக்கு புறப்பட்டுள்ளார். எலான் மஸ்க்கின் இந்த சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் பிரதமர் மோடியின் அமெரிக்க பயணத்தின்போது எலான் மஸ்க் அவரை நேரில் சந்தித்து பேசினார். அப்போது அவர் தனது டெஸ்லா நிறுவனம் விரைவில் இந்திய சந்தையில் நுழையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
அதை தொடர்ந்து, இந்தியாவில் டெஸ்லா விற்பனை நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கைகளை எலான் மஸ்க் எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டும் இன்றி உலகம் முழுவதும் அதிவேக இணைய சேவையை வழங்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் 'ஸ்டார்லிங்’ திட்டத்துக்காகவும் இந்திய சந்தையை அவர் எதிர்பார்ப்பதாக தகவல்கள் தெரிவித்தன.
இந்த நிலையில்தான் ஏப்ரல் 21, 22 ஆகிய தேதிகளில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாக எலான் மஸ்க் இம்மாத தொடக்கத்தில் அறிவித்தார். இந்த பயணத்தின்போது அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசுவார் என்றும், தனது நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வது தொடர்பான அறிவிப்புகளை அவர் வெளியிடுவார் என்றும் கூறப்பட்டது.
இதனால் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் திடீரென தள்ளி வைக்கப்பட்டது. இந்திய பயணம் தள்ளிவைக்கப்பட்டு ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், சீனாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications