"சாவை கண்டு துளியும் அஞ்சவில்லை.." எலான் மஸ்க் தடாலடி! உக்ரைன் போர் குறித்தும் பரபர கருத்து
வாஷிங்டன்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் டெஸ்லா தலைவரான எலான் மஸ்க் பல்வேறு விவகாரங்கள் குறித்து சமீபத்தில் அளித்த நேர்காணலில் மனம் திறந்து பேசியுள்ளார்.
கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய போர், ஒரு மாதத்தைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா இப்போது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது.
ரஷ்ய அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்யா மீது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதாரத் தடைகளை அறிவித்துள்ளன.

உக்ரைன் விவகாரம்
சர்வதேச பிரபலங்கள் பலரும் கூட புதினுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தொடர்ச்சியாக உக்ரைனுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருகிறார். உக்ரைனில் இணையச் சேவை முடக்கப்பட்ட போது, அவர் தனது ஸ்டார் லிங்க் சாட்டிலைட் மூலம் உதவி இருந்தார். இதற்கிடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு, தன்னுடன் நேருக்கு நேர் மோத முடியுமா என்ற எலான் மஸ்க் ட்விட்டர் வழியாக புதினுக்கு சவால் விடுத்திருந்தார்.

10 நொடிகள்
மேலும், கூடவே புதின் தனது கரடியையும் அழைத்து வரலாம் என்றும் ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட் இணையத்தில் உடனடியாக வைரல் ஆனது. இணையத்தில் பலரும் எலான் மஸ்க் வெறும் 10 விநாடிகள் இந்த சண்டையில் வென்றுவிடுவார் என்ற ரீதியிலும் ட்வீட் செய்து வந்தனர். இந்தச் சூழலில் எலான் மஸ்க் தான் நீண்ட ஆயுட்காலம் வேண்டும் என்பது குறித்து ஒருபோதும் கவலைப்பட்டதில்லை என்று தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் சமீபத்தில் அளித்த நேர்காணலில், மஸ்க் நீண்ட ஆயுட்காலம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் பேசினார்.

நீண்ட ஆயுள்
தனது ஆரோக்கியத்தை நீண்ட காலத்திற்குப் பராமரிக்க விரும்புவதாகக் கூறிய எலான் மஸ்க், அதேநேரம் சாவைக் கண்டு அஞ்சவில்லை என்றும் குறிப்பிட்டார். இறப்பையும் சாவையும் கண்டு பயம் இல்லை என்று குறிப்பிட்ட எலான் மஸ்க், சொல்லப் போனால் இறப்பு என்பது நிம்மதியையே தரும் என்று நினைப்பதாகவும் தெரிவித்தார். செவ்வாய்க் கிரகத்தில் குடியேறுவது, மூளையை கட்டுப்படுத்துவது என பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வரும் எலான் மஸ்கிற்கு ஆயுளை நீட்டிக்கும் ஆசை உள்ளதா என்ற கேள்விக்கு எலான் மஸ்க் நேரடியாகவே பதில் அளித்தார்.

பழைய யோசனைகள்
இது தொடர்பாக எலான் மஸ்க் மேலும் கூறுகையில், "நாம் நீண்ட காலம் வாழ முயல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இது சமூகத்தில் ஒருவித மூச்சுத் திணறலை ஏற்படுத்தும். ஏனென்றால் பெரும்பாலான மக்கள் தங்களைக் காலத்திற்கு ஏற்ற வகையில் அப்டேட் செய்து கொள்வதில்லை. அவர்கள் எப்படி இருக்கிறார்களோ அதேபோல இறந்து விடுகின்றனர். எனவே, அவர்கள் உயிரிழக்கவில்லை என்றால், நாம் பழைய யோசனைகளில் சிக்கிவிடுவோம். அதன் பின் சமூகம் முன்னேறாது" என்றார்.

அச்சம்
தொடர்ந்து பேசிய எலான் மஸ்க், "இங்குள்ள gerontocracy முறையின் மீது எனக்கு அச்சம் உள்ளது. அது ஆரோக்கியமற்றது என்று நம்புகிறேன். ஜெரண்டோக்ரசி என்றால் சமூகத்தில் உள்ள பெரும்பாலான மக்களை விட வயதானவர்களைக் கொண்ட அரசு குறைந்த வயது கொண்ட அரசைக் கட்டுப்படுத்துகிறது. இப்போது அமெரிக்காவிற்கு மிக, மிகப் பழமையான தலைமை உள்ளது. இதனால் தலைவர்களுக்கும் மக்களுக்கும் இடையேயான தொடர்பு சாத்தியமற்றதாக உள்ளது.

இதுதான் காரணம்
அமெரிக்காவின் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசு பொறுப்புகளை வகிக்கக் குறைந்தபட்ச வயதை நிர்ணயித்தனர். ஆனால் வரும் காலத்தில் மக்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. இதனால் தான் அதிகபட்ச வயதை அவர்கள் சேர்க்கவில்லை. நாட்டின் சராசரி மக்களின் வயதைக் காட்டிலும் அரசியல் தலைமை பொறுப்பில் இருப்போரின் வயது 10 அல்லது 20 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

உக்ரைன் விவகாரம்
அதேபோல ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் செயல்பாடுகள் சிறப்பாகவே இருந்து வருவதாகவும் வரும் காலத்தில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் பல்வேறு சாதனைகளைச் செய்யும் என்றும் குறிப்பிட்டார். உக்ரைன் போர் தொடர்பாகப் பேசிய எலான் மஸ்க், "இந்த விஷயத்தில் அமெரிக்கா இதுவரை பல்வேறு உதவிகளை உக்ரைன் நாட்டிற்குச் செய்துள்ளது. அதேநேரம் புதின் உக்ரைனைக் கைப்பற்ற அனுமதிக்க முடியாது" என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications