சொதப்பிய எலான் மஸ்க் நிறுவனம்.. பூமியில் விழுந்து நொறுங்க போகும் 20 சாட்டிலைட்கள்.. என்ன நடந்தது?
வாஷிங்டன்: எலான் மஸ்கிற்கு சொந்தமான ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட்டில் ஏற்பட்ட தவறு காரணமாக நினைத்த இடத்தில் அந்த 20 சாட்டிலைட்கள் நிறுத்த முடியவில்லை. இதன் காரணமாக அந்த சாட்டிலைட்களும் பூமியில் விழுந்து வெடித்துச் சிதறும் அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.
கடந்த சில காலமாகவே மீண்டும் விண்வெளி சார்ந்த ஆய்வுகளில் உலக நாடுகள் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டன. நமது நாட்டை பொறுத்தவரை அரசு அமைப்பான இஸ்ரோ தான் ஆய்வுகளை மேற்கொள்ளும்.

ராக்கெட் உருவாக்குவது முதல் சாட்டிலைட் வரை அனைத்தும் இஸ்ரோ தான் செய்யும். ஆனால், அமெரிக்காவில் இப்போது விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு அதிகரித்து வருகிறது.
எலான் மஸ்க்: குறிப்பாக எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ், விமானங்களைத் தயாரிக்கும் பிரபல போயிங் உள்ளிட்ட நிறுவனங்கள் ராக்கெட்களை உருவாக்குகிறார்கள். நாசாவும் இந்த ராக்கெட்களை பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. குறிப்பாக ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ராக்கெட் மிகச் சிறப்பாக இருப்பதாகவே கூறப்படுகிறது. இந்தச் சூழலில் தான் ஸ்பேஸ்எக்ஸ் இப்போது ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.
அதாவது அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இருந்து ஃபிளாகான் 9 ராக்கெட் மூலம் கடந்த வியாழக்கிழமை 20 சாட்டிலைட்கள் விண்ணில் செலுத்தப்பட்டன. இதற்கிடையே இந்த 20 சாட்டிலைட்கள் மீண்டும் பூமியில் விழுந்து நொறுங்கும் என்று ஸ்பேஸ்எக்ஸ் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டுள்ளதே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
தவறு: இது தொடர்பாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஃபிளாகான் 9 இரண்டாம் முதலில் வழக்கமாகவே இருந்தது. ஆனால், இரண்டாவது கட்டத்தில் திரவ ஆக்ஸிஜன் கசிவு ஏற்பட்டது. சில தொழில்நுட்ப காரணங்களால் 2ம் கட்டம் வெற்றிகரமாக நடக்கவில்லை. இதனால் சாட்டிலைட்கள் உடனான தொடர்பு இழந்த நிலையில், அதை மீண்டும் கனெக்ட் செய்ய முயன்று வருகிறோம். ஸ்பேஸ்எக்ஸ் இதுவரை 5 சாட்டிலைட்களுடன் தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. அயனி உந்துதல்களைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையை உயர்த்த முயல்கிறோம்" என்று தெரிவித்து இருந்தனர்.
முடியவில்லை: சற்று நேரம் கழித்து மற்றொரு ட்வீட்டில், "தற்போது வரை 10 சாட்டிலைட்கள் தொடர்பை ஏற்படுத்திவிட்டோம். அவற்றின் அயனி உந்துதல்களைப் பயன்படுத்தி சுற்றுப்பாதையை உயர்த்த முயன்றோம். ஆனால், பூமியில் இருந்து வெறும் 135 கிமீ உயரத்தில் இருப்பதால் அங்கே இழுவை அதிகம் இருக்கிறது. இதனால் சுற்றுப்பாதையை உயர்த்த முடியவில்லை.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாகத் தேவையான உயரத்திற்குச் செல்ல முடியாது. இதனால் பூமியின் வளிமண்டலத்தில் செயற்கைக்கோள்கள் மீண்டும் நுழையும். அதேநேரம்"வட்டப்பாதையில் உள்ள மற்ற சாட்டிலைட்களுக்கு இது எந்தவொரு அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது" எனப் பதிவிட்டுள்ளனர். மீதி 10 சாட்டிலைட்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார்களா என்பது குறித்து உறுதியான தகவல்கள் இல்லை.
எலான் மஸ்க்: அதேபோல அந்த சாட்டிலைட்கள் சரியான இடத்தில் நிலைநிறுத்தத் தேவையான அனைத்து முயற்சிகளையும் ஸ்பேஸ்எக்ஸ் ஆய்வாளர்கள் தொடர்ந்து செய்து வருவதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இருப்பினும், அதை இனிமேல் வெற்றிகரமாக நிலைநிறுத்த வாய்ப்புகள் குறைவு என்றே கூறப்படுகிறது. இதனால் அந்த சாட்டிலைட்கள் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழைந்து நிலத்தில் மோதி சிதறும் ஆபத்தும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications