விந்தணுவை ஜப்பான் பிரபலத்திற்கு அனுப்பிய எலான் மஸ்க்! சொந்த குழந்தைகளை வைத்து மஸ்க் போடும் பிளான்
வாஷிங்டன்: பிரபலத் தொழிலதிபரான எலான் மஸ்க்கிற்கு இதுவரை 14 குழந்தைகள் உள்ளன. இதற்கிடையே அவர் ஒரு படையை உருவாக்கும் அளவுக்குப் பல்வேறு பெண்களுடன் குழந்தைகளை பெற்றெடுத்து வருகிறார். குறிப்பாக ஜப்பானைச் சேர்ந்த பெண்ணிடம் தனது விந்தணுக்களை எலான் மஸ்க் அனுப்பி இருக்கிறாராம். அவர் ஏன் இதுபோல செய்கிறார் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரராக இருப்பவர் எலான் மஸ்க். இவர் எடுக்கும் பல நடவடிக்கைகள் பெரும் சர்ச்சையில் சிக்குவது வழக்கமாகவே இருந்து வருகிறது. இதற்கிடையே எலான் மஸ்க் ரகசியமாகச் செய்து வரும் சில விஷயங்கள் குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் சில செய்திகளை வெளியிட்டுள்ளது.

எலான் மஸ்க்
அதாவது அதிகளவில் குழந்தைகளைப் பெற்று, அவர்களையே ஒரு படையைப் போல உருவாக்க எலான் மஸ்க் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறாராம். அதுவும் தனது எக்ஸ் தளம் மூலமாகவே இதற்காகப் பெண்களிடம் எலான் மஸ்க் தரப்பு அணுகி வருகிறதாம். வாடகைத் தாய் முறையில் எலான் மஸ்கிற்கு குழந்தைகளைப் பெற்றுத் தருவது குறித்து அவர்கள் பேசி வருகிறார்களாம்.
அதேநேரம் குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளச் சம்மதிக்கும் தாய்மார்களிடம் எலான் மஸ்க் தரப்பு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதிக்குமாம். அதாவது குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான தொகையை எலான் மஸ்க் தரப்பு தந்துவிடும். ஆனால், இது தொடர்பான அனைத்துத் தகவல்களையும் ரகசியமாக வைத்திருக்க வேண்டும் என்பதே ஒப்பந்தமாகும்.
குழந்தைகளைப் பெற்றெடுக்க விருப்பம்
கடந்த செப்டம்பரில் எலான் மஸ்க்கின் 13வது குழந்தையை 26 வயதான சமூக வலைத்தளப் பிரபல மிக்க ஆஷ்லே செயிண்ட் கிளேர் பெற்றெடுத்திருந்தார். அப்போது எலான் மஸ்க் உடன் நடந்த உரையாடல் விவரங்களை கிளேர் பகிர்ந்திருந்தார். அதில் எலான் மஸ்க் மீண்டும் கிளேருடன் குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், பேரழிவை ஏற்படுத்தும் அபோகாலிப்ஸுக்கு முன்பு படையைப் போலக் குழந்தைகளை வாடகைத் தாய் மூலம் பெற்றெடுக்க விரும்புவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

ஜப்பான் பிரபலம்
எலான் மஸ்க்கிற்கு 14 குழந்தைகள் இருப்பதாக அதிகாரப்பூர்வமாகச் சொல்லப்படுகிறது. சமூக வலைத்தளப் பிரபலம் செயிண்ட் கிளேர், பாடகி கிரிம்ஸ், நியூராலிங்க் நிர்வாகி ஷிவோன் ஜிலிஸ் மற்றும் முன்னாள் மனைவி ஜஸ்டின் மஸ்க் ஆகிய பெண்களுடன் 14 குழந்தைகளுக்கு எலான் மஸ்க் தந்தையாகியுள்ளார். அதேநேரம் உண்மையில் இதைவிடப் பல குழந்தைகளுக்கு எலான் மஸ்க் தந்தையாகி இருக்கலாம் என சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதற்காக அவர் தனது விந்தணுக்களை ஜப்பானை சேர்ந்த பெண் பிரபலம் ஒருவருக்கும் கூட அனுப்பியதாக வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் கூறப்பட்டுள்ளது.
பெரும்பாலும் எலான் மஸ்க் உடன் குழந்தைகளைப் பெற்றெடுத்த பெண்கள் அவருடன் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் வர மாட்டார்கள். ஆனால், எலான் மஸ்குடன் நான்கு குழந்தைகளைப் பெற்ற ஷிவோன் ஜிலிஸ் என்பவருக்கு மட்டும் "சிறப்பு அந்தஸ்து" இருக்கிறது. உலக தலைவர்களைச் சந்திக்கும்போது எலான் மஸ்க் உடன் எப்போதும் ஷிவோன் ஜிலிஸ் தான் இருப்பார்.
ரகசியம் காக்கும் டிரம்ப்
பொதுவாகவே எலான் மஸ்க் குழந்தைகள் விவகாரத்தில் ரகசியமாகக் காக்கவே விரும்புமாம். இதையே தான் செயிண்ட் கிளேரும் கூறினார். அதாவது எலான் மஸ்க் தான் தந்தை என்பதைப் பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடாமல் இருந்தால் முதலில் தனக்கு $15 மில்லியன் டாலரும், அதன் பிறகு மாதம் $100,000 டாலரும் தருவதாக எலான் மஸ்க் நெருங்கிய உதவியாளர் ஜாரெட் பிர்ச்சால் கூறியதாக செயிண்ட் கிளேர் கூறியிருந்தார்.
எலான் மஸ்க் தான் தந்தை என்பதில் ரகசியம் காக்க செயிண்ட் கிளேர் ஒப்புக்கொள்ளவில்லை. அதேநேரம் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் எலான் மஸ்க் பெயரை அவர் பயன்படுத்தவில்லை. பொதுவெளியில் எலான் மஸ்க் தான் தந்தை எனக் கூறிவிட்டதால் அவருக்கான மாத ஆதரவு தொகை 100,000 டாலரில் இருந்து முதலில் $40,000 டாலராகவும் பிறகு 20,000 டாலராகவும் குறைக்கப்பட்டதாக வால் ஸ்ட்ரீட் கூறியுள்ளது.
அம்பலமான தகவல்கள்
அதேபோல கிரிப்டோ குறித்துப் பேசி பிரபலமான டிஃப்பனி ஃபோங் என்பவருடன் குழந்தை பெற்றுக்கொள்ளவும் எலான் மஸ்க் விரும்பியுள்ளார். இது தொடர்பாக அவரையும் அணுகியுள்ளனர். இருப்பினும், இந்தச் செய்தியை டிஃப்பனி பொது வெளியில் பகிர்ந்த நிலையில், எலான் மஸ்க் அவரை பாலோ செய்வதைக் கூட நிறுத்திவிட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இதுபோல பல பெண்களிடம் குழந்தை பெறுவது குறித்து எலான் மஸ்க் தரப்பு தொடர்பு கொண்டு இருப்பதாகக் கூறப்படுகிறது. பொதுவாகப் பணம் கொடுத்தும் மிகக் கடுமையான சீக்ரெட் ஒப்பந்தங்களைப் போட்டும் எலான் மஸ்க் தரப்பு கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுமாம். இந்த விவகாரங்களை எலான் மஸ்கின் உதவியாளர் ஜாரெட் பிர்ச்சால் என்பவர் தான் நிர்வகித்து வருகிறாராம். நல்ல வேலை செய்யும் தகுதியான நபர்களுக்கு நல்ல சன்மானம் கிடைக்கும் என்று இது குறித்து அவர் தனது நெருங்கிய நண்பர்களிடம் கூறியதாகவும் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

என்ன காரணம்
எலான் மஸ்க் ஏன் இதுபோல ஏகப்பட்ட பெண்களுடன் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறார் என்பதில் உங்களுக்குக் கேள்வி வரலாம். அமெரிக்கா உட்படப் பல நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வரும் சூழலில் இதனால் மனிதக்குலமே ஆபத்தில் இருப்பதாக எலான் மஸ்க் கருதுகிறார். இதனாலேயே அவர் அதிகளவில் குழந்தை பெற விரும்புகிறார்.
மக்கள்தொகை வளர்ச்சி இல்லாமல் இருப்பதால் மனித நாகரிகமே வீழ்ந்து வருவதாக எலான் மஸ்க் அடிக்கடி கூறுவார். மேலும், மனிதக்குலத்தின் எதிர்காலத்தைப் பாதுகாக்கப் புத்திசாலி மக்கள் அதிகக் குழந்தைகளைப் பெற வேண்டும் என்பதையும் அவர் நம்புகிறார். இதன் காரணமாகவே அவர் அதிகளவில் குழந்தைகளை பெற்று வருகிறார்.
ரகசிய ஒப்பந்தங்கள்
இதுபோல பல குழந்தைகளைப் பெற்றுக்கொள்ளும்போது சட்டப் பிரச்சினை வரக்கூடாது என்பதற்காகவே அவர் முன்கூட்டியே எல்லா ஒப்பந்தங்களையும் போட்டுக் கொள்கிறார். எலான் மஸ்க்குடன் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்த பாடகி கிரிம்ஸ் இது தொடர்பாகச் சில கருத்துகளைக் கூறியிருக்கிறார். அதாவது தங்கள் குழந்தைகளுக்குப் பராமரிப்பு தொகை கோரி எலான் ஸ்கிற்கு எதிராக இவர் வழக்கு போட்டிருந்தார். இந்த வழக்கால் தான் பொருளாதார ரீதியாக மிக பெரிய நஷ்டத்தை எதிர்கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
எலான் மஸ்க் இப்போது $367.9 பில்லியன் (ஒரு பில்லியன் என்பது சுமார் 8000 கோடி) நிகர மதிப்புடன் உலகின் பெரும் பணக்காரராக இருக்கிறார். மேலும், அதிபர் டிரம்பின் அமைச்சரவையில் செயல்திறன் துறையின் தலைவராகவும், டிரம்ப் அமைச்சரவையில் ஒரு ஆலோசகராகவும் உள்ளார்.












Click it and Unblock the Notifications