சட்டவிரோத குடியேற்ற விவகாரம்.. அமெரிக்க நீதிபதியையே கைது செய்த டிரம்ப் அரசு! உச்சக்கட்ட பதற்றம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே குடியேற்ற விவகாரங்களில் கடுமை காட்டி வருகிறார். உள்ளூர் அதிகாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகிறார். இதற்கிடையே சட்டவிரோதமாகக் குடியேறிய ஒருவரைக் கைது செய்ய விடாமல் தடுத்ததாகச் சொல்லி அமெரிக்க நீதிபதி ஒருவரையே எஃப்.பி.ஐ கைது செய்துள்ளது. இது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
அமெரிக்க அதிபரான டிரம்ப் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை நாடு கடத்தக் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அவர் அதிபராகப் பதவியேற்றது முதல் பலர் நாடுகடத்தப்பட்டுள்ளனர். அதேநேரம் டிரம்ப்பின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்காவிலேயே கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

அதிபர் டிரம்ப்
குறிப்பாக உள்ளூர் அதிகாரிகளே டிரம்ப் மீது அதிருப்தியில் உள்ளனர். இருப்பினும், அதையெல்லாம் கண்டுகொள்ளாத டிரம்ப் பெடரல் அதிகாரிகளை வைத்து நடவடிக்கைகளைத் தீவிரம் காட்டி வருகிறார். இதற்கிடையே அங்கு யாருமே எதிர்பார்க்காத சம்பவம் இப்போது நடந்துள்ளது.
அமெரிக்க நீதிபதி கைது
அதாவது குடியேற்றக் கைது நடவடிக்கையைத் தடுத்ததாகச் சொல்லி மில்வாக்கி நீதிபதி மீது அமெரிக்க பெடரல் அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அதாவது சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்த நபரைக் கைது செய்ய முயன்றபோது நீதிபதி அதைத் தடுக்க முயன்றதாகச் சொல்லி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் மில்வாக்கி நீதிபதி ஹன்னா டுகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிபதி ஹன்னா டுகன் கைது செய்யப்பட்டிருப்பதை எஃப்.பி.ஐ இயக்குநர் காஷ் படேல் தனது ட்விட்டரில் அறிவித்தார். மேலும், நீதிபதி ஹன்னா டுகன் எப்படிச் சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழைந்த நபரைக் கைது செய்யவிடாமல் தடுத்தார் என்பது குறித்த தகவல்களையும் பகிர்ந்துள்ளார். வெள்ளிக்கிழமை வேறு ஒரு தொடர்பில்லாத வழக்கில் சட்டவிரோதமாகப் புலம்பெயர்ந்த நபர் ஆஜராக வந்துள்ளார். அவரை கைது செய்ய பெடரல் அதிகாரிகள் அங்குச் சென்ற நிலையில், அவர்களை நீதிபதி ஹன்னா டுகன் வேண்டுமென்றே தவறாக வழிநடத்தினார் என்பதே புகாராகும்.

என்ன நடந்தது
அதாவது அந்தச் சட்டவிரோதக் குடியேறி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வரும் நேரம் பார்த்து, பெடரல் அதிகாரிகளை அங்கிருந்து வேறு இடத்திற்குச் செல்ல நீதிபதி ஹன்னா சொல்லியிருக்கிறார். அந்த இடைவெளியில் சட்டவிரோதக் குடியேறியையும் அவரது வழக்கறிஞரையும் வேறு ஒரு வழியில் வெளியேற உதவியிருக்கிறார்.
இது தொடர்பாக காஷ் படேல் மேலும் கூறுகையில், "நல்வாய்ப்பாக எங்கள் ஏஜெண்டுகள் ஓடிச் சென்ற அந்த சட்டவிரோதக் குடியேறியைக் கைது செய்துவிட்டனர். இப்போது அந்த நபர் காவலில் இருக்கிறார். அதேநேரம் நீதிபதியின் இந்த நடவடிக்கை பொதுமக்களுக்கு ஆபத்தை உருவாக்கியது. இதையடுத்து விஸ்கான்சினின் மில்வாக்கி நீதிபதி ஹன்னா டூகனை எஃப்.பி.ஐ கைது செய்தது" என்று பதிவிட்டிருந்தார்.
கிளம்பிய விவாதம்
ஒருவரைக் கைது செய்யவிடாமல் தடுப்பது மற்றும் தப்பிக்க உதவுவது உள்ளிட்ட குற்றங்கள் டூகன் மீது சாட்டப்பட்டுள்ளது. இந்தக் குற்றங்களுக்காக அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை அவரை சிறையில் அடைக்க முடியும். இந்தச் சம்பவம் அமெரிக்கா முழுவதும் பேசுபொருளானது. டிரம்ப் தரப்பு ஏற்கனவே நீதிமன்ற உத்தரவுகளை மதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கும் நிலையில், இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் எப்படி நீதிபதி ஒருவரை பெடரல் அதிகாரிகள் கைது செய்ய முடியும் எனப் பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications