பிரபல நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் கைது! என்ன நடந்தது
வாஷிங்டன்: இப்போது இந்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்காவுக்குத் தப்பியோடியிருந்தார். இதற்கிடையே அவரை அமெரிக்க போலீசார் இப்போது கைது செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.
இந்தியாவில் உள்ள ஆபத்தான கேங் ஸ்டார்களில் ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய். இவர் இப்போது குஜராத்தில் உள்ள சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். என்ன தான் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தாலும், அங்கிருந்தபடியே இவர் பல கொடூர குற்றங்களில் ஈடுபட்டு வருகிறார்.

கொலை: சமீபத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் என்சிபி தலைவர் பாபா சித்திக் துப்பாக்கியால் சுடப்பட்டுக் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்குப் பாபா சித்திக் கும்பல் பொறுப்பேற்றது. அதேபோல சல்மான் கானையும் கொலை செய்வோம் தொடர்ந்து மிரட்டி வருகிறது. லாரன்ஸ் பிஷ்னோய் சிறையில் இருந்தபடியே தனது கேங்க்கை கட்டுப்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
கைது: இதற்கிடையே இந்த லாரன்ஸ் பிஷ்னோயின் சகோதரர் அன்மோல் பிஷ்னோய் என்பவரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது. அன்மோலும் பிஷ்னோய் கேங்கில் முக்கிய நபர் தான். பல முக்கிய கொலை வழக்குகளில் அன்மோல் பிஷ்னோய் இந்தியாவில் தேடப்பட்டு வருகிறார். அவரை கலிபோர்னியா போலீசார் காவலில் வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கனடா நாட்டில் கடந்தாண்டு சுட்டுக் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை தொடர்பாக அன்மோல் பிஷ்னோயிடம் கலிபோர்னியா போலீசார் விசாரிப்பார்கள் என்றும் அதன் பிறகு அமெரிக்க அதிகாரிகள் அவரை கனடா நாட்டின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என்றும் மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய அதிகாரிகளும் அவரிடம் விசாரணை நடத்த முயன்று வருவதாக மும்பை குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
பல குற்ற வழக்குகள்: அன்மோல் பிஷ்னோய் கடந்த ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி சென்றார். அவரது சகோதரர் லாரன்ஸ் பிஷ்னோய் கைது செய்யப்பட்ட பின்னர், பிஷ்னோய் கும்பலின் நடவடிக்கைகளை இவரே பார்த்துக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே சில மாதங்களுக்கு முன்பு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், 2022இல் பஞ்சாபி பாடகர் சித்து மூஸ்வாலா கொல்லப்பட்டது உட்படப் பல குற்ற வழக்குகளில் அன்மோல் இந்தியாவில் தேடப்பட்டு வரும் நபராக இருக்கிறார். மகாராஷ்டிராவில் என்சிபி தலைவர் பாபா சித்திக் கொல்லப்பட்ட சம்பவத்திலும் அன்மோலுக்கு தொடர்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
அன்மோல் பிஷ்னோய் அமெரிக்காவில் இருக்கும் தகவல் கிடைத்தவுடன் மும்பை குற்றப்பிரிவு போலீசார் அவரை நாடு கடத்தும் நடவடிக்கையைத் தொடங்கினர். மும்பை போலீசார் நடவடிக்கையைத் தொடங்கிய சில வாரங்களில் இப்போது அமெரிக்க போலீசார் அன்மோல் பிஷ்னோயை கைது செய்துள்ளனர். இந்தியாவில் அன்மோல் மீது தேசிய புலனாய்வு அமைப்பு பதிவு செய்த இரண்டு வழக்குகள் உட்பட 20 குற்ற வழக்குகள் உள்ளன. அன்மோல் பிஷ்னோய் பற்றி தகவல் அளிப்பவருக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் கூட என்ஐஏ சமீபத்தில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா சென்றது எப்படி: பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய அன்மோலுக்கு கடந்தாண்டு மும்பை நீதிமன்றம் ஜாமீனில் வெளியே வர முடியாத பிடிவாரண்டு அளித்தது. இதையடுத்து அவர் போலி பாஸ்போர்ட் மூலம் கனடா நாட்டிற்குத் தப்பிச் சென்றார். அங்கிருந்து அவர் அமெரிக்காவுக்குச் சென்றிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications