சொந்த காசில் சூனியம்! டிரம்ப் பார்த்த வேண்டாத வேலையால்.. மொத்த உலகத்துக்கும் சிக்கல்!
வாஷிங்டன்: ஈரான் போர் இப்போதைக்கு முடிவடையும் நிலையில் இல்லை. இன்னும் சில மாதங்களுக்கு போர் நீடிக்கலாம் என்பதால், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்திருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவிலும் இதன் தாக்கம் எதிரொலித்திருப்பதால், மக்கள் டிரம்ப் மீது அதிருப்தியடைந்திருக்கின்றனர்.
ஈரான் துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால், கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

அமெரிக்க கச்சா எண்ணெய் (WTI): ஒரு பேரல் $106.88 ஆக உயர்ந்துள்ளது (6.95% உயர்வு).
பிரெண்ட் கச்சா எண்ணெய் (Brent): ஒரு பேரல் $118.03 ஆக உயர்ந்துள்ளது (6.08% உயர்வு). இது ஜூன் 2022-க்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த விலையாகும்.
தற்போதைய நிலை: வியாழக்கிழமை அன்று பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மேலும் உயர்ந்து $119.94-ஐ எட்டியுள்ளது.
ஆலோசனை நடத்திய டிரம்ப்
இந்த எண்ணெய் விலை உயர்வு, டிரம்ப் மீதான மதிப்பை கடுமையாக பாதித்திருக்கிறது. எனவே இதனை எப்படி சரி கட்டுவது? குறிப்பாக எண்ணெய் விலையை இனி வரும் நாட்களில் எப்படி ஏறவிடாமல் பார்த்துக்கொள்வது என்பது குறித்து டிரம்ப் அமெரிக்க எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.
மக்களுக்குதான் பாதிப்பு
இதில், ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை இன்னும் சில மாதங்களுக்கு நீட்டித்தால், அதை எதிர்கொள்ளும் வழிமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. மேலும், பெட்ரோல் விலை உயர்வால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. என்னதான் ஆலோசனை நடத்தினாலும், எண்ணெய் நிறுவனங்கள் அவ்வளவு சீக்கிரத்தில் தங்கள் லாபத்தை விட்டுக்கொடுக்காது. எனவெ எண்ணெய் விலை ஏறி, அது சாமானிய மக்கள் தலையில்தான் வந்து விடியும்.
மறுபுறம் ஈரானுடனான இந்தப் போருக்காக இதுவரை அமெரிக்க ராணுவம் $25 பில்லியன் (சுமார் ₹2 லட்சம் கோடி) செலவிட்டுள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கு சிக்கல்
இது மிகப்பெரிய செலவு. ரூ.2 லட்சம் கோடியை வைத்து, 12 ஆண்டுகள் 8 மாதங்களுக்கு மகளிர் உரிமை தொகையை வழங்க முடியும். அவ்வளவு பெரிய தொகையை அமெரிக்கா தண்டமாக செலவழித்திருக்கிறது. டிரம்ப் செலவு செய்தால், செய்துவிட்டு போகட்டும்.. ஆனால், இந்த போரால் இந்தியாவுக்கும் பாதிப்பு என்பதுதான் நம்மை இன்னும் டென்ஷன் ஆக்கியிருக்கிறது.
ஆசிய வளர்ச்சி வங்கி
ஆசிய-பசிபிக் நாடுகள் தங்கள் எண்ணெய் தேவைக்கு மத்திய கிழக்கு நாடுகளையே பெரிதும் நம்பியுள்ளன. எண்ணெய் விலை $120-ஐ நெருங்குவதால், ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) இந்தப் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதத்தை 5.1 சதவீதத்திலிருந்து 4.7 சதவீதமாகக் குறைத்துள்ளது. எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் அதிகரித்து கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஓபெக் அமைப்பு
இதற்கிடையில், ஓபெக் (OPEC) அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் (UAE) விலகியிருக்கிறது. சர்வதேச எண்ணெய் அரசியலில் ஒரு பெரிய மாற்றமாக, ஐக்கிய அரபு அமீரகம் 'ஓபெக்' அமைப்பிலிருந்து மே 1 முதல் விலகுவதாக அறிவித்துள்ளது. அமீரகத்தின் இந்த முடிவை ட்ரம்ப் வரவேற்றுள்ளார். இது பெட்ரோல் விலையைக் குறைக்க உதவும் என்று அவர் நம்புகிறார். எண்ணெய் உற்பத்தியைக் குறைத்து விலையைக் கட்டுப்படுத்தும் ஓபெக் அமைப்பின் கொள்கையில் அமீரகத்திற்கு நீண்டகாலமாக உடன்பாடு இல்லை. எனவே தற்போது விலகியிருக்கிறது.
அமீரகம் ஓபெக்கில் இருந்து விலகினாலும், ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் அவர்கள் இப்போதைக்கு ஏற்றுமதியை அதிகரிக்க முடியாது. மீண்டும் பழைய நிலைக்குத் திரும்ப இன்னும் சில மாதங்கள் ஆகும். எனவே பெட்ரோல் விலை உயர்வதை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications