"இனி என்றும் 16 தான்.." இளமையின் ரகசியத்தை ஒரு வழியாக கண்டுபிடித்த ஆய்வாளர்கள்! இது நல்லா இருக்கே
வாஷிங்டன்: அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர்கள் சிலர் வயதாவதைத் தடுத்து மீண்டும் நமக்கு இளமையைத் தரும் மருந்துகளைக் கண்டுபிடித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். "என்றும் இளமை" என்ற கனவை இது நிச்சயம் நிறைவேற்றும்.
முகத்தில் சிறு சுருக்கம், தலையில் ஒரு வெள்ளை முடியைப் பார்த்தாலே கூட இங்குப் பலரும் கவலை தொற்றிக் கொள்ளும் சீக்கிரம் நமக்கு. வயதாகிறதோ என்று நினைத்தே ரொம்பவே கவலை கொள்பவர்கள் அதிகமாகவே இருக்கிறார்கள்.

எப்போதும் இளமையாக இருக்க வேண்டும் என்பதே இவர்களின் எண்ணம். இதுவரை அதற்கு வாய்ப்புகள் இல்லை என்ற போதிலும், விரைவில் இந்த நிலைமை மாறப் போகிறதாம். எப்போதும் இளமை என்ற கனவு விரைவில் சாத்தியமாகப் போகிறது என்ற குட் நியூஸை ஹார்வேர்ட் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வயதாகவே வேண்டாம்: இதற்கிடையே அமெரிக்காவின் ஹார்வர்டில் உள்ள ஆய்வாளர்கள் வயதாவதைத் தடுக்கும் ஒரு புது வித மருந்துகள் காக்டெய்லைக் கண்டுபிடித்துள்ளனர். "கெமிக்கல் மூலம் வயதாவதை மாற்றியமைக்கும் முறை" என்ற தலைப்பில் இந்த ஆய்வு குறித்த விரிவான ஆய்வுகள் ஏஜிங் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குழு இதில் மொத்தம் 6 கெமிக்கல் காக்டெய்ல்களைக் கண்டுபிடித்துள்ளது. இது மனித தோல் செல்கள் வயதாவதை நன்கு மாற்றியமைத்தாக கூறப்படுகிறது.
ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர் டேவிட் சின்க்ளேர் இந்த செயல்முறையைத் தனது ட்விட்டரில் விளக்கியுள்ளார். அதில் அவர், "மரபணு சிகிச்சை மூலம் வயதை மாற்றியமைப்பது சாத்தியம் என்பதை நாங்கள் முன்பே விளக்கியுள்ளோம். இப்போது வயதாவதைத் தடுக்க ரசாயன காக்டெய்லை உருவாக்கியுள்ளோம். இது குறைந்த செலவிலேயே நமது உடலை எப்போதும் இளமையாக வைத்திருக்கும் வாய்ப்பை வழங்குகிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
சிகிச்சை: இதில் ஒவ்வொரு கெமிக்கல் காக்டெய்லிலும் 5 மற்றும் 7 கெமிக்கல்கள் இருக்கிறது. இதில் இருக்கும் பல கெமிக்கல்கள் உடல் மற்றும் மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படும் கெமிக்கலாகும். வயதாகும் செயல்முறை தடுத்து அதை மாற்றியமைக்கும் செயல்முறையைக் கண்டுபிடிக்க 3 ஆண்டுகளுக்கு மேலானதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். மனித உயிரணுக்களைப் புத்துயிர் அளிக்கும் மூலக்கூறுகளை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
டேவிட் சின்க்ளேர் மேலும் கூறுகையில், "முதற்கட்டமாக நாங்கள் எலிகளில் இது குறித்த விரிவான சோதனையை நடத்தினோம். அதில் பார்வை நரம்பு, மூளை திசு, சிறுநீரகம் மற்றும் தசைகள் ஆகியவற்றில் இது சிறந்த பலனைத் தருகிறது. வயதான எலிகளின் பார்வை மேம்பட்டுள்ளது. மேலும், அதன் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. இதை நாங்கள் குரங்குகளிலும் சோதனை செய்தோம். அதன் பார்வை அதிகரித்துள்ளது. இப்படி இதில் அனைத்துமே பாசிட்டிவாகவே இருக்கிறது.
அடுத்தகட்ட சோதனை: இதன் காரணமாக அடுத்தகட்டமாக மனிதர்களின் மீது சோதனையை நடத்தத் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மனிதர்கள் வயதாவதைத் தடுப்பது தொடர்பாக நடத்தப்படும் மிகப் பெரிய சோதனை இதுவாகும். அடுத்த ஆண்டு பிற்பகுதியில் இதைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம். எல்லாம் சரியாக நடந்தால் சில ஆண்டுகளில் வயதாவதைத் தடுக்கும் மருந்துகள் நம்மிடம் இருக்கும்" என்று அவர் தெரிவித்தார்.
அதேநேரம் மற்ற ஆய்வாளர்கள் முதற்கட்ட ஆய்வில் தான் இது வெற்றிகரமாக இருந்துள்ளது என்றும் மனிதர்கள் மீது சோதனையை ஆரம்பிக்க இன்னும் விரிவான ஆய்வுகள் தேவை எனத் தெரிவித்துள்ளனர். மனிதர்கள் மீது சோதனை வெற்றிகரமாக முடிந்தாலும் அது முழுமையாகப் பயன்பாட்டிற்கு வர பல ஆண்டுகள் வரை ஆகலாம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications