கடவுள் இருக்காரு.. "இதை" வைத்து நிரூபிக்க முடியும்.. கணித பார்முலாவுடன் மேடை ஏறிய ஹார்வர்ட் ஆய்வாளர்
வாஷிங்டன்: பொதுவாகக் கடவுளின் இருப்பு குறித்து இரு வேறு விவாதங்கள் இருந்து கொண்டே இருக்கும். கடவுள் இருப்பதைக் காட்ட முடியுமா என்பதே பகுத்தறிவுவாதிகள் எழுப்பும் அடிப்படை கேள்வியாக இருக்கிறது. இதற்குத் தெளிவான விடையை ஆன்மீகவாதிகளால் இத்தனை காலம் சொல்ல முடியாமல் இருந்தது. இதற்கிடையே ஹார்வர்ட் ஆய்வாளர் தன்னிடம் கடவுளின் இருப்பை நிரூபிக்கும் பார்முலா இருப்பதாகச் சொல்லிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
கடவுள் இருக்கிறாரா.. இல்லையா என்பது குறித்து நமது உலகில் பல காலமாகவே விவாதம் நடந்தே வருகிறது. கடவுளை நம்பும் பெரும்பகுதி மக்கள் கடவுள் இருப்பதாகவே சொல்லி வருகிறார்கள். அதேநேரம் பகுத்தறிவுவாதிகள் கடவுள் இருக்கிறார் என்றால் அதை நிரூபிக்க முடியுமா என்றே கேள்வி எழுப்புவார்கள். இப்படி கடவுளைச் சுற்றி பல நூறு ஆண்டுகளாகவே விவாதம் உள்ளது.

ஹார்வார்ட் ஆய்வாளர்
ஆனால், ஹார்வர்ட் மற்றும் ஸ்மித்சோனியன் வானியற்பியல் மையத்தைச் சேர்ந்த ஆய்வாளர் டாக்டர் வில்லி சூன் என்பவர் தன்னால் கடவுளின் இருப்பை உறுதி செய்ய முடியும் என அறிவித்துள்ளார். இதற்காக ஒரு கணித சூத்திரம் அதாவது கணித பார்முலா ஒன்றைக் கண்டுபிடித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்
டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற டாக்டர் வில்லி சூன், தனது பார்முலா கடவுள் இருப்பதற்கான சான்றை வழங்கும் என குறிப்பிட்டார். இந்த பார்முலாவின் மையக்கரு ஒன்று தான். அதாவது பிரபஞ்சத்தின் இயற்பியல் விதிகள்தான் மனித இருப்புக்கு முக்கிய காரணம். இவை அனைத்தும் தற்செயலாக நடந்திருக்க முடியாது என்பதே இதன் நோக்கமாகும்.
பால் டைராக்
இந்த பார்முலாவை 20ம் நூற்றாண்டில் வாழ்ந்த கேம்பிரிட்ஜ் கணிதவியலாளர் பால் டைராக் என்பவர் முன்மொழிந்து இருந்தார். இது குறித்து அவர் விவரிக்கையில், "உலகம் இயங்க இயற்பியல் விதிகளே அடிப்படை. இதுவே இயற்கையின் அடிப்படை அம்சங்களில் ஒன்றாக உள்ளது. இதைப் புரிந்துகொள்ள மிக உயர்ந்த தரமான கணிதம் தேவைப்படுகிறது. இது எப்படிக் கட்டமைக்கப்படுகிறது? இயற்கையாகக் கட்டமைக்கப்பட்ட இது எப்படி உருவாகி இருக்க முடியும் என நினைக்கிறீர்கள்.
அதை நாம் ஏற்றுக்கொள்ளத் தான் வேண்டும். அதாவது கடவுள் தான் இந்த இயற்கை விதிகளைக் கட்டமைத்த கணிதவியலாளர், பிரபஞ்சத்தை உருவாக்குவதில் அவர் மிகவும் மேம்பட்ட கணிதத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்" என்று பால் டைராக் குறிப்பிட்டு இருந்தார்.
பார்முலா
இதை வைத்து தான் டாக்டர் சூன் இப்போது பார்முலாவை கண்டுபிடித்துள்ளாராம். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "நம் வாழ்க்கை இப்படி அமைய யார் காரணமாக இருந்து இருப்பார். கடவுள் தான் நமக்கு இந்த ஒளியைக் கொடுத்துள்ளார். ஒளியைப் பின்பற்றவும். நமது திறமைகளை வெளிக்காட்டவும் அவர் உதவியிருக்கிறார்" என்கிறார்.
அதாவது இந்த உலகில் இயற்பியல் விதிகளால் இத்தனை ஆயிரம் மாற்றங்கள் நடக்கிறது.. இந்த இயற்பியல் விதிகள் இவ்வளவு துல்லியமாக இருக்க இதன் அடிப்படை கணிதம் மிகத் துல்லியமாக இருக்க வேண்டும். அந்தளவுக்குத் துல்லியமான கணிதத்தை உருவாக்கியவர் கடவுள் தான் என்பதே இவர்கள் வாதமாகும். அதேநேரம் கடவுளையும் சயின்ஸையும் இணைத்த முதல் ஆய்வாளர் இவர் இல்லை.
அன்றே பதிலளித்த ஸ்டீபன் ஹாக்கிங்
அதேநேரம் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் இந்த பார்முலாவுக்கு தனது கடைசி புத்தகத்தில் ஒரு விளக்கத்தை அளித்திருந்தார்.. 2018இல் இறந்த ஸ்டீபன் ஹாக்கிங், 1963ஆம் ஆண்டு 21 வயதாக இருந்தபோது, ஒரு வகையான மோட்டார் நியூரான் நோயான அமியோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் (ALS) நோயால் பாதிக்கப்பட்டார். அவர் இரண்டு ஆண்டுகள் மட்டுமே உயிர்வாழ முடியும் என்று அப்போது மருத்துவர்கள் கூறியிருந்தனர். ஆனால், அவர் கூடுதலாக 55 ஆண்டுகள் வாழ்ந்தார்
'Brief Answers to the Big Questions' என்ற தனது இறுதி புத்தகத்தில், "நீங்கள் விரும்பினால் பூமியின் விதிகள் அனைத்திற்கும் கடவுள் தான் காரணம் என சொல்லலாம்... ஆனால், இது கடவுள் இருப்பதற்கான சான்றா என்பதை விட கடவுளின் வரையறை என்றே கருத முடியும்" என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications