ஈரானின் அணு உலைகளை முதலில் தாக்குங்க.. இஸ்ரேலுக்கு பகீர் அட்வைஸ் தந்த டிரம்ப்.. பெரும் பதற்றம்
வாஷிங்டன்: ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் முதலில் ஈரானின் அணுஉலைகளை தான் முதலில் குறிவைத்து தாக்க வேண்டும் என்று அமெரிக்க முன்னாள் அதிபரும், தற்போதைய அதிபர் வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் பகீர் அட்வைஸ் கொடுத்துள்ளார். இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
இஸ்ரேல் - காசா இடையேயான போர் என்பது திசை மாறி உள்ளது. இந்த போர் இஸ்ரேல் - லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பினர் இடையேயான மோதலாக மாறியது. அதன்பிறகு தற்போது இஸ்ரேல் - ஈரான் மோதலாக உருவாகி உள்ளது. ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது.

ஹமாஸ் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினர் ஈரான் ஆதரவு அமைப்பினர். இஸ்ரேல் அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி தலைவர்களை கொன்று குவித்து வருவதால் ஈரான் கடும் கோபமடைந்து தாக்குதலை தொடங்கி உள்ளது. இஸ்ரேலை சும்மா விடமாட்டோம் என்று ஈரான் எச்சரிக்கை செய்து ‛அட்டாக்’கை ஆரம்பித்துள்ளது.
அதேபோல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவும் கூட, ‛‛எங்களை தாக்குபவர்களை நாங்களும் திரும்ப தாக்குவோம். இதில் எந்த பாரபட்சமும் பார்க்க மாட்டோம்’’ என கூறியுள்ளார். அதேபோல் ஈரானுக்கு நிச்சயம் பதிலடி கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தான் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலுக்கு அட்வைஸ் ஒன்றை சொல்லி பதற்றத்தை அதிகரித்துள்ளார். அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் டொனால்ட் டிரம்ப் பிரசாரம் மேற்கொண்டபோது, ‛‛ஈரானின் அணு ஆயுத தளங்கள் மீது இஸ்ரேல் டார்க்கெட் வைக்க வேண்டுமா? என்பது பற்றி கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு டொனால்ட் டிரம்ப்,‛‛இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது. அவரிடம் (ஜோபைடன்) இந்த தாக்குதல் பற்றி கேட்கப்பட்டது. ஈரான் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஈரானை தாக்குவீர்களா? என்று கேள்வி கேட்டனர். அதற்கு அவர் அணு உலைகளை தொடாமல் தாக்குதல் செல்வதாக தெரிவித்தார். ஈரான் மீதான அணுஆயுத தாக்குதலை ஆதரிப்பீர்களா? என்ற கேள்விக்கு அவர் (ஜோபைடன்) இல்லை என்று பதிலளித்தார்.
இந்த விஷயத்தில் அவர் தவறு செய்து விட்டதாக நினைக்கிறேன். ஆனால் உண்மையில் அணு ஆயுதங்கள் என்பது நமக்கு இருக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். அப்படி இருக்கையில் அவர்கள் தாக்கினால் என்ன நடக்கும்? இதனால் இந்த கேள்வி கேட்கும்போது அணுஉலைகளை முதலில் தாக்குங்கள். மற்றவற்றை பிறகு பார்த்து கொள்ளலாம் என சொல்ல வேண்டும். இஸ்ரேல் அணு உலையை தாக்க விரும்பினால் தாக்குவார்கள். இருப்பினும் அவர்களின் திட்டங்களை என்ன? என்பதை நாம் கண்டுபிடிப்போம்’’ என்றார்.
டொனால்ட் டிரம்பின் இந்த பேச்சு தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் உடனடியாக தங்கள் நாட்டு வீரர்களை இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும்படி கூறினார். அதன்பிறகு அவர் ஈரானுக்கு பதிலடி கொடுக்கப்படும். அணுஉலை மீது தாக்குதல் நடத்தப்படாது என கூறியிருந்தார். இதன் தொடர்ச்சியாக தான் டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணு உலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்க வேண்டும் என்று கூறி பரபரப்பை பற்றவைத்துள்ளார்.












Click it and Unblock the Notifications