HMPV வைரஸ்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? WHO முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா விளக்கம்
வாஷிங்டன்: HMPV வைரஸ் ஏற்கனவே அறியப்பட்ட சுவாச நோய்களை ஏற்படுத்துவதாகவும் சளி ஏற்படும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் கூறியுள்ளார்.
சீனாவில் hmpv என்னும் புதிய வகை வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதாக சொல்லப்படுகிறது. இந்த வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனைகளில் நோயாளிகள் அதிக அளவில் குவிந்துள்ளதாக செய்திகள் வெளியாகின. ஏற்கனவே கொரோனா வைரஸ் சீனாவில் இருந்துதான் பரவியது என்பதால் தற்போது பரவி வரும் 'ஹியுமன் மெடா நியூமோ வைரஸ்' மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

அதேவேளையில், குளிர்காலத்தில் அதிகம் பரவக்கூடிய சாதாரண வகை வைரஸ்தான், லேசான பாதிப்பையே ஏற்படுத்தும் என்று சீனா கூறியுள்ளது. உலக சுகதார அமைப்பும் இந்த வைரஸ் பற்றிய தகவல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த HMPV வைரஸ் கடந்த 2001 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
தலைவலி, காய்ச்சல், இருமல், தும்மல் ஆகியவை இந்த வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் ஆகும். மேல் சுவாசபாதையில் தொற்று பாதிப்பை ஏற்படுத்துமாம். மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்ட பிரச்சினைகளும் ஏற்படலாம். இந்த வைரஸ் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவ வாய்ப்பு அதிகம். ஒருவர் தும்மும் போது சளி திவலைகள் மூலமாக பரவக்கூடும்.
சளி திரவங்கள் இருக்கும் இடத்தில் கைகளை வைத்துவிட்டு, கையை மூக்கு, கண், வாய் பகுதிகள் பக்கம் கொண்டு சென்றால் வைரஸ் பாதிப்பு தொற்றும் அபாயம் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். இதனிடையே, உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சவுமியா இந்த வைரஸ் குறித்து அச்சப்பட தேவையில்லை என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ஏற்கனவே அறியப்பட்ட hmpvசுவாச நோய்களை ஏற்படுத்துகிறது. சளி ஏற்படும் போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனைவரும் எடுக்க வேண்டும். முகக்கவசம் அணிதல், கை கழுவுவதல், கூட்டங்களை தவிர்த்தல் போன்றவற்றை பின்பற்ற வேண்டும். அறிகுறிகள் தீவிரமாக இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்" எண்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications