டிரம்ப் மீது தாக்குதல் முயற்சி.. பாதுகாப்பு மீறப்பட்டது எப்படி? FBI அதிகாரிகள் கொடுத்த விளக்கம்!
வாஷிங்டன்: பத்திரிகையாளர்களுடனான விருந்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்றிருந்தபோது, திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாதுகாப்பை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது எப்படி என்பது குறித்து FBI அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சங்க இரவு விருந்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில்தான் துப்பாக்கிச்சூடு நடந்தது.

கையில் துப்பாக்கி, கைத்துப்பாக்கி மற்றும் கத்திகளுடன் வந்த 31 வயது மதிக்கத்தக்க கலிபோர்னியாவைச் சேர்ந்த நபர், ஹோட்டல் வரவேற்பறையில் இருந்த பாதுகாப்புச் சோதனைச் சாவடியைத் தாண்டிச் செல்ல முயன்றார். அப்போது, பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அந்த நபர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்டார். இதில் ஒரு சீக்ரெட் சர்வீஸ் அதிகாரி காயமடைந்தார். அதிபர் டிரம்ப் மற்றும் அவரது அமைச்சரவை உறுப்பினர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதிபர் பங்கேற்ற நிகழ்ச்சியில் இப்படியான சம்பவம் எப்படி நடந்தது? என பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர். இதனையடுத்து, தற்போது விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், அந்த நபர் சில நாட்களுக்கு முன்பே அதே ஹோட்டலில் ஒரு அறையை முன்பதிவு செய்து தங்கியுள்ளார். இது வெளிப்புறப் பாதுகாப்பு வளையங்களை அவர் மிக எளிதாகத் தவிர்க்க உதவியது என விளக்கமளித்துள்ளனர்.
தாக்குதல் நடத்திய நபர், அன்றிரவு ஹோட்டலின் செக்யூரிட்டியை மீறியிருப்பதாக பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால், தாக்குதல் நடத்திய நபர், நிகழ்ச்சி நடந்த ஓட்டலில் ரூமை புக் செய்தபோதே எல்லா செக்யூரிட்டியையும் மீறிவிட்டார் என்று அதிகாரிகள் விளக்கியுள்ளனர். பாதுகாப்பைத் தாண்ட அவருக்குத் தேவையானது ரூம் சாவி மட்டுமே. அவர் ஏற்கெனவே ரூம் புக் செய்திருந்ததால், அவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழவில்லை.
டிரம்ப் நிகழ்ச்சி அன்று, செக்யூரிட்டி பலமாகத்தான் இருந்தது. எல்லா இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. வெளியிலிருந்து உள்ளே வருபவர்கள் அனைவரும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். ஆனால், ஏற்கெனவே உள்ளே இருந்தவர்களை பாதுகாப்பு படையினர் சோதனை செய்யாமல் தவிர்த்துவிட்டனர். இந்த புள்ளியிலிருந்துதான் பாதுகாப்பு மீறல் தொடங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications