உளவாளிகள் கண்ணில் மண்ணை தூவி.. டிரம்ப் நிகழ்வில் மர்ம நபர் துப்பாக்கியை எடுத்து சென்றது எப்படி!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் மீது நடந்த கொலை முயற்சி சம்பவம் உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே அந்த நபர் உச்சபட்ச பாதுகாப்பைத் தாண்டி நிகழ்ச்சி நடக்கும் இடத்திற்கு எப்படி வந்தார்.. துப்பாக்கியை எப்படிப் பாதுகாப்பு சோதனைகளைத் தாண்டி எடுத்து வந்தார் என்பது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்தில் கலந்து கொண்டார். அப்போது திடீரென அங்குத் துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தல் ஏற்பட்டது. இதில் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிற முக்கியத் தலைவர்கள் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதில் டிரம்ப் உட்பட யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

யார் அவர்?
வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சந்திப்பு விருந்தில் அதிபர் ட்ரம்ப்பை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு முயற்சியில், பிடிபட்ட நபர் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது கலிபோர்னியாவின் டொரன்ஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதான கோல் தாமஸ் ஆலன் (Cole Tomas Allen) என்பவர் தான் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
பிடிபட்ட கோல் ஆலன் ஒரு சாதாரண நபர் அல்ல.. அவர் 2017ல் புகழ்பெற்ற கால்டெக் பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். அது மட்டுமின்றி, கடந்த 2025ல் கம்ப்யூட்டர் சயின்ஸில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். ஒரு உயர்கல்வி கற்ற இளைஞர் இத்தகைய வன்முறையில் இறங்கியது அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகளை அதிர வைத்துள்ளது.
உள்ளே நுழைந்தது எப்படி?
பொதுவாக அமெரிக்க அதிபர் நிகழ்ச்சிகளில் உச்சபட்ச பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டு இருக்கும். அதைத் தாண்டி இந்த நபர் எப்படி நுழைந்தார் என்பதே முக்கிய கேள்வியாக இருந்தது. அது குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது விருந்து நடைபெறும் ஹில்டன் ஹோட்டலில் கோல் ஆலன் ஒரு ரூமை புக் செய்துள்ளார். இதன் மூலம் அவர் முதல் கட்டப் பாதுகாப்பு வளையத்தை மிக எளிதாகக் கடந்துள்ளார். ஹோட்டல் விருந்தினராக இருந்ததால், டிக்கெட் பரிசோதனை இன்றி உள்ளே நுழைந்துள்ளார்.
JUST IN: President Trump posts video of SHOOTER on TruthSocial. pic.twitter.com/mVFkDaldpv
— Donald J Trump Posts TruthSocial (@TruthTrumpPost) April 26, 2026
பாதுகாப்பு இல்லை
இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்த ஹெலன் மேபஸ் என்பவரும் இது தொடர்பாக முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக ஹோட்டல் பாதுகாப்பில் குளறுபடிகள் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். அவர் மேலும் கூறுகையில், "நிகழ்ச்சிக்காக ஒரு தற்காலிக ரூமை ஒதுக்கி இருந்தனர். அந்த ரூமில் அவர் துப்பாக்கி ஒன்றைப் பையிலிருந்து எடுத்து அசெம்பிள் செய்து கொண்டிருந்தார். அந்தப் பகுதியில் எந்தப் பாதுகாப்பு அதிகாரியும் இல்லை. அவர் துப்பாக்கியைத் தயார் செய்துவிட்டு, நேராக நிகழ்ச்சி நடக்கும் இடத்தை நோக்கி ஓடினார்" எனத் தெரிவித்துள்ளார்.
லாபியில் இருந்த சீக்ரெட் சர்வீஸ் சோதனைச் சாவடியை நோக்கி ஆக்ரோஷமாகப் பாய்ந்துள்ளார். இருப்பினும், துரிதமாகச் செயல்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள் அவரை மடக்கிப் பிடித்தனர். அவரிடம் ஒரு ஷாட்கன், ஒரு கைத்துப்பாக்கி மற்றும் பல கத்திகள் இருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் ஆலன் தற்போது காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீது வன்முறைக்காக ஆயுதத்தைப் பயன்படுத்தியது மற்றும் மத்திய அதிகாரிகளைத் தாக்கியது உள்ளிட்ட இரண்டு கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தோல்வி
ஒரு இன்ஜினியரிங் பட்டதாரி, அதுவும் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் படித்த ஒருவர், அதிபரின் உயிருக்கே உலை வைக்கத் துணிந்தது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. மேலும், டிரம்ப்பின் நிகழ்ச்சிகளில் தொடர்ச்சியாக இதுபோல பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்படுவதும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. இத்தனை முக்கியப் பிரமுகர்கள் கூடியிருந்த இடத்தில் இவ்வளவு எளிதாக ஒருவரால் ஆயுதங்களுடன் நுழைய முடிந்தது என்பது மிகப்பெரிய பாதுகாப்புத் தோல்வி என்பதில் சந்தேகமில்லை!














Click it and Unblock the Notifications