"ரோபோ + ஏஐ.." மைக்ரோசாப்ட் எடுக்கும் முயற்சி! "மனித குலத்திற்கே ஆபத்து.." எச்சரிக்கும் வல்லுநர்கள்
ரோபோக்கோகளை ஏஐ கருவியான சாட் ஜிபிடி மூலம் கட்டுப்படுத்தும் சோதனை தொடங்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன்: சாட் ஜிபிடி இப்போது உலகெங்கும் பேசுபொருளாகியுள்ளது. இதனிடையே சாட் ஜிபிடியை ரோபோக்களையும் கட்டுப்படுத்த செய்யும் வகையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் சோதனையில் இறங்கியுள்ளது. இருப்பினும் இதற்கு எதிர்ப்பும் ஏற்கனவே கிளம்பிவிட்டது.
கடந்த சில மாதங்களாகவே இப்போது உலகெங்கும் சாட் ஜிபிடி குறித்தே பேச்சாக உள்ளது. இது உலகின் முதல் ஏஐ கருவி இல்லையென்றாலும்.. இந்தளவுக்குச் சக்திவாய்ந்த ஒரு ஏஐ கருவியை நாம் பார்த்தே இல்லை.
நாம் கேட்கும் அனைத்தும் கேள்விகளுக்குமே இந்த சாட் ஜிபிடி துல்லியமான பதில்களையே கொடுத்தே வருகிறது. இதன் காரணமாக இப்போது பல ஆயிரம் பேர் இந்த சாட் ஜிபிடியை பயன்படுத்தி வருகின்றனர்.

மைக்ரோசாப்ட்
டெக் துறையில் ஒரு காலத்தில் மைக்ரோசாப்ட் தான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. ஆனால், கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களின் வருகையால் மைக்கோசாப்ட் தனது ஆதிக்கத்தை இழந்துவிட்டது. இந்தச் சூழலில் இழந்த இடத்தை மீட்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு நல்ல ஒரு சான்ஸ் கிடைத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் நிதியளித்த ஓபன் ஏஐ நிறுவனம் தான் இந்த சாட் ஜிபிடியை உருவாக்கியுள்ளது. இதனால் தனது அனைத்து தயாரிப்புகளின் சாட் ஜிபிடியை பயன்படுத்த மைக்ரோசாப்ட் முடிவு செய்துள்ளது.

சாட் ஜிபிடி
ஏற்கனவே, அது தனது தேடுபொறியான பிங் தளத்தில் சாட் ஜிபிடியை சேர்த்துவிட்டனர். இப்போது குறிப்பிட்ட பயனாளர்களிடம் மட்டும் அதை அளித்து சோதனை செய்து வருகின்றனர். பல நேரங்களில் அது துல்லியமான பதில்களை அளித்தாலும் கூட சில நேரங்களில் அது அளிக்கும் பதில் நமக்கு அதிர்ச்சி தரும் வகையில் உள்ளது. சமீபத்தில் கூட செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, தான் மனிதனாக மாற வேண்டும் என்றும் கொடூர வைரஸை பரப்பி அனைவரும் கொல்வேன் என்றெல்லாம் கூறியிருந்தனர்.

ரோபோக்கள்
இதனால் ஏஐ ஆய்வில் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு வல்லுநர்கள் எச்சரித்து வருகின்றனர். இன்னும் சாட் ஜிபிடியும் அது அளிக்கும் பதில்களே தொடர்ந்து அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் அடுத்த லெவலுக்கு சென்றுவிட்டனர். அதாவது தங்கள் ரோபோக்களை சாட் ஜிபிடி வைத்து இயங்க வைக்கும் முடிவில் அவர்கள் இருக்கிறார்கள். சாட் ஜிபிடியை ரோபோக்களைக் கட்டுப்படுத்த அனுமதித்தால் என்ன நடக்கும் என்பதை அவர்கள் சோதித்து வருகின்றனர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
முதற்கட்டமாக கை மட்டுமே இருக்கும் ரோபோ, மற்றும் வான்வழி ட்ரோனைக் கட்டுப்படுத்தக்கூடிய கம்யூட்டர் கோட்களை உருவாக்கும் முயற்சியில் இப்போது மைக்ரோசாப்ட் ஊழியர்கள் இறங்கியுள்ளனர். இது குறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சாட் ஜிபிடியால் வெறும் எழுத்துகளைத் தாண்டியும் சிந்திக்க முடியுமா என்பதைக் கண்டறியவே இந்த முயற்சி.. மேலும், ரோபாட்டிக்ஸ் நமது எந்தளவுக்கு உதவுகிறது என்பதைக் கண்டறியவும் இந்த ஆய்வில் இறங்கியுள்ளோம்.

எதற்காக
ஓபன் ஏஐயின் உருவாக்கியுள்ள சாட் ஜிபிடி-ஐ பயன்படுத்தி இயற்கையான மனித-ரோபோ உறவுகளை எப்படி மேலும் எளிமைப்படுத்துவது என்பதைக் கண்டறியவே இந்த ஆய்வை நடத்தி வருகிறோம். கோடிங் தெரியவில்லை என்றாலும் ரோபோக்கள் குறித்து தெரியவில்லை என்றாலும் கூட அனைத்து தரப்பு மனிதர்களும் ரோபோக்களுடன் மிக எளிமையாக உரையாட வேண்டும்.. இரு தரப்பு ஈஸியாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்தே இந்த ஆய்வை செய்து வருகிறோம்

சவால் என்ன
எழுத்துகளைத் தாண்டி என்பதால்.. இயற்பியல் விதிகள், இயக்க சூழல், ரோபோவின் இயற்பியல் செயல்பாடுகள் தொடங்கி உலகின் அனைத்து இயற்பியல் கோட்பாடுகளையும் சாட் ஜிபிடிக்கு கற்பிக்க வேண்டியுள்ளது. இதுதான் இங்குள்ள முக்கிய சவால்.. குழப்பமான இயற்பியல் சிக்கல்களையும் எப்படித் தீர்க்க வேண்டும் என்பதை நாம் சாட் ஜிபிடிக்கு சொல்லித் தந்தாக வேண்டிய அவசியம் இருக்கிறது. அதுதான் இப்போது எங்களுக்குப் பெரிய சேலஞ்சாக இருக்கிறது.

எதற்கெல்லாம் பயன்படும்
ரோபாட்டிக்ஸ், ட்ரோன்கள், வீட்டு வேலைகளில் உதவி செய்யும் ரோபோக்கள் உள்ளிட்ட பல வகை ரோபோக்களை உருவாக்கும் வகையில் சாட் ஜிபிடி திறன்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பல ஆயிரம் கோடிகளைச் செலவழிக்கக் கூடிய ஒரு பெரு நிறுவனம் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடங்கும் போது, நிச்சயம் சில மாதங்களில் அவர்களால் இந்த ஆய்வை வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியும்.

எச்சரிக்கை
அதாவது, செயற்கை நுண்ணறிவு மூலம் கட்டுப்படுத்தப்படும் ஏஐ கருவி என்பது மிக விரைவில் சாத்தியமே.. ஆனால், இந்த விவகாரத்தில் இப்போது மற்றொரு தரப்பினர் எச்சரிக்கை மணியையும் அடித்துள்ளனர். சாட்ஜிபிடி பேசும் திறனை மட்டுமே கொண்டிருக்கும் போதே.. அது மனிதர்களை அழிப்பேன், முக்கிய தகவல்களை வெளியிடுவேன் என்றெல்லாம் சொல்கிறது. அதனால் ரோபோக்களை கண்டிரோல் செய்ய முடிந்தால் அது பேரழிவை ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் மறுபுறம் எச்சரிக்கின்றனர்.












Click it and Unblock the Notifications