தென்னமரத்துல ஒன்னு.. ஏணியில ஒரு குத்து! இந்தியா பெயரை சொல்லி.. டிரம்ப் அடிக்கும் கொள்ளையை பாருங்க!
வாஷிங்டன்: "இந்தியாவை பாருங்க.. ரஷ்யாவுடன் வணிக தொடர்பில் இருக்கும் நாடுகளுக்கு வரி போடுவோம்", என்று டிரம்ப் மிரட்டி வருகிறார். இந்தியாவுக்கு 50% அளவுக்கு வரி போடப்பட்டிருக்கிறது. ஆனால், உண்மையில் உக்ரைன்-ரஷ்யா போர் நீடிப்பதைதான் டிரம்ப் விரும்புகிறார். இந்தியாவை மிரட்டுவதெல்லாம் சும்மா கதை என்று சர்வதேச அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஒப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் (ORF) என்கிற சிந்தனை குழு சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. உக்ரைன் போரில் ஈடுபடுவதால் அமெரிக்கா ஈட்டும் லாபம் என்ன? என்பதை இந்த அறிக்கை தெளிவுப்படுத்துகிறது.

உக்ரைன் போர்
அந்த அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, "உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா மிகப்பெரிய அளவுக்கு பொருளாதார பலனை அடைந்திருக்கிறது. குறிப்பாக இராணுவ-தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. புரியும்படி சொல்வதெனில் உக்ரைனுக்குத் தேவையான மொத்த ஆயுதங்களில் 45% அமெரிக்கா வழங்கியுள்ளது. கடந்த ஆண்டு மட்டும் உலக நாடுகள் தங்கள் பாதுகாப்புக்கான செலவை 9.4% அதிகரித்துள்ளன. சோவியத்-அமெரிக்கா பனிப்போர் காலத்திற்கு பிறகு மீண்டும் இந்த அளவுக்கு செலவினம் அதிகரித்திருப்பது இதுவே முதல்முறை. காரணம் உக்ரைன்-ரஷ்யா போர்தான்
ஆயுத இறக்குமதி
அமெரிக்கா, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் மற்றும் பிற இராணுவ தளவாடங்களை உக்ரைனிய படைகளுக்கு வழங்கி, தனது பாதுகாப்புத் தொழில் தளத்தை வலுப்படுத்தியுள்ளது. ஜோ பைடன் காலத்திலேயே இது தொடங்கிவிட்டது. டிரம்ப் காலத்தில் இந்த ஆயுத விற்பனை இன்னும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 2015-19 வரை உலகம் முழுவதும் பல்வேறு நாடுகள் ஆயுதங்களை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்திருந்தன. இந்த காலத்தில் உலக ஆயுத இறக்குமதியில் உக்ரைனின் பங்கு வெறும் 0.1% தான். இப்போது 8.8% அளவுக்கு ஆயுதங்களை உக்ரைன் இறக்குமதி செய்கிறது.
அமெரிக்காவின் ஆயுத விற்பனை
அமெரிக்காவின் ஆயுத ஏற்றுமதியில் 9.3% உக்ரைனுக்குதான் போகிறது. 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் உக்ரைன் உலகிலேயே அதிக ஆயுதங்களை இறக்குமதி செய்த நாடாகத் திகழ்ந்தது. கடந்த ஆகஸ்ட் மாதம், அமெரிக்கா ரூ. 6,888 கோடி மதிப்புள்ள 3,350 நீண்ட தூர தாக்குதல் வெடிபொருட்களை உக்ரைனுக்கு விற்க ஒப்புதல் அளித்துள்ளது. இது வெறும் சாம்பிள்தான். உக்ரைன் மட்டுமல்ல நேட்டோ உறுப்பு நாடுகளையும், கனடாவையும் ₹83,500 கோடிக்கும் அதிகமான ஆயுதங்களை வாங்க அமெரிக்க நிர்வாகம் சம்மதிக்க வைத்தது.
நேட்டோ நாடுகள்
உக்ரைன் நெருக்கடியின் காரணமாக 2020-24 இல் நேட்டோ கூட்டாளிகளின் ஆயுத இறக்குமதியில் அமெரிக்காவின் பங்கு 64% ஆக அதிகரித்துள்ளது, இது 2015-19 இல் 52% ஆக இருந்தது" என்று அறிக்கை தெரிவிக்கிறது. இந்த ஆண்டு ஹேக்கில் நடைபெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில், உறுப்பு நாடுகள் 2035 ஆம் ஆண்டுக்குள் தங்கள் ஆண்டு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்புச் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5% ஆக உயர்த்துவதாக உறுதியளித்துள்ளன. இது 2006 இல் நேட்டோ பாதுகாப்பு அமைச்சர்களால் முதலில் ஒப்புக்கொள்ளப்பட்ட 2% இலக்கிலிருந்து 150% அதிகரிப்பு ஆகும்.
மோனோபோலி நிறுவனங்கள்
உலகளாவிய ஆயுத ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 2014-19 இல் 35% லிருந்து 2020-24 இல் 43% ஆக 21% அதிகரித்துள்ளது. ஆனால் இதில் கவனிக்க வேண்டிய மற்றொரு அம்சம் என்னவென்றால், 1,00,000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களைக் கொண்ட அமெரிக்க பாதுகாப்புத் தொழில்துறை தளத்தில், லாக்ஹீட் மார்ட்டின், RTX, ஜெனரல் டைனமிக்ஸ், நார்த்ரோப் க்ரம்மன் மற்றும் போயிங் ஆகிய ஐந்து முக்கிய நிறுவனங்கள் மட்டும் அமெரிக்க அரசின் ஆயுத ஒப்பந்தங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கு மேல் ஆர்டர்களை பெற்றிருக்கிறது என்பதுதான்.
இப்போது சொல்லுங்கள் உக்ரைன் போரால் யார் அதிகம் பலனடைகிறார்கள்? ஏன் இந்தியாவுக்கு வரி விதிக்கப்பட்டிருக்கிறது? வரியால் போரை நிறுத்தி விடும் என டிரம்ப் நம்புகிறாரா? அப்படியெனில் தென்னமரத்துல ஒரு குத்து, ஏணி சின்னத்துல ஒரு குத்து என்கிற கணக்காக, வரியையும் போட்டுவிட்டு, ஆயுத விற்பனை மூலம் லாபத்தையும் ஏன் அள்ளுகிறார்?












Click it and Unblock the Notifications