டிரம்ப் மீது பாய்ந்த தோட்டா.. அடுத்த நொடி சீக்ரெட் சர்வீஸ் செய்த செயல்! உயிர் பிழைக்க காரணமே இதுதான்
வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீதான துப்பாக்கிச் சூடு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு அவரை அங்கிருந்த சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் எப்படிக் காப்பாற்றினார்கள் என்பது குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்காகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் டிரம்ப் காதை கிழித்துக் கொண்டு அந்த தோட்டா சென்றது. இருப்பினும், நல்வாய்ப்பாக இதில் டிரம்ப் உயிர் தப்பினார்.

துப்பாக்கிச் சூடு: இதற்கிடையே இந்தச் சம்பவம் தொடர்பாக சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், "இது டிரம்பை படுகொலை செய்யும் முயற்சி தான் என்பதில் சந்தேகம் இல்லை.. பேரணி நடந்த இடத்தில் செக்யூர் செய்யப்பட்ட பகுதிக்கு வெளியே இருந்த ஒரு உயரமான கட்டிடத்தில் இருந்து துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. அந்த நபர் மேடையை நோக்கிப் பல முறை துப்பாக்கியால் சுட்டுள்ளார்" என்று கூறுகின்றனர்.
டிரம்பிற்கு மிக நெருக்கமாகத் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து சென்றுள்ளன. அவரது வலது காதை துப்பாக்கி குண்டுகள் கிழித்துச் சென்றுள்ளன. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு ரத்தம் சொட்டச் சொட்ட எழுந்த டிரம்ப் மக்களை நோக்கி தனது கைகளை உயர்த்தி காட்டினார். இந்த போட்டோவை இணையத்தில் பலரும் ஷேர் செய்து வருகிறார்கள். துப்பாக்கிச் சூடு நடந்து 2.5 மணி நேரத்திற்குப் பிறகு இந்தச் சம்பவம் குறித்து டிரம்ப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்திருந்தார்.
டிரம்ப் சொல்வது என்ன: இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடக்கும் முன்பே ஏதோ தவறாக நடக்கப் போகிறது என்பதை உணர முடிந்ததாகத் தெரிவித்த டிரம்ப், வலது காதை தோட்டா கிழித்துச் சென்றதாகத் தெரிவித்தார். மேலும், தன்னை காப்பாற்றிய சீக்ரெட் சர்வீஸ் மற்றும் காவலர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துக் கொண்டார். டிரம்ப்பை நோக்கிப் பல முறை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட போதிலும் மின்னல் வேகத்தில் சீக்ரெட் சர்வீஸ் செயல்பட்டதே டிரம்ப் உயிர் பிழைக்கக் காரணமாக இருக்கிறது.
சீக்ரெட் சர்வீஸ்: அமெரிக்காவில் அதிபர்களுக்கு மட்டுமின்றி முன்னாள் அதிபர்களுக்கும் சில ஆண்டுகள் சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். அதன்படியே முன்னாள் அதிபர் என்ற அடிப்படையில் டிரம்பிற்கு சீக்ரெட் சர்வீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவர்கள் மின்னல் வேகத்தில் செயல்பட்டதே டிரம்ப் உயிர் பிழைக்கக் காரணமாக அமைந்துள்ளது.
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடந்த உடன் மூன்றாவது நொடி மேடையில் இருந்த சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சூழ்ந்துவிட்டனர். ட்ரம்பை நோக்கிப் பல குண்டுகள் சுடப்பட்ட நிலையில், மற்றவை எதுவும் டிரம்ப் மீது பாயாமல் இருப்பதை இவர்கள் உறுதி செய்தனர். சுமார் ஒரு நிமிடம் வரை அவர்கள் டிரம்பை சூழ்ந்து அப்படியே இருந்தனர்.
அடுத்த ஒரு நிமிடம்: இதற்கிடையே மேடைக்கு அருகே இருந்த சீக்ரெட் சர்வீஸ் ஸ்னைப்பர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரைச் சுட்டுக் கொன்றனர். இது துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்து 40 நொடிகளில் நடந்துவிட்டது. இதை உறுதி செய்த பின்னர் 50 நொடிகளுக்குப் பின்னரே டிரம்ப் அங்கிருந்து கிளம்ப அனுமதி தரப்பட்டது. சரியாகத் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு நிமிடம் கழித்து டிரம்ப் எழுந்து நிற்கிறார். முதலில் அவர் ஏதோ சொல்கிறார்.. ஆனால், அது தெளிவாகக் கேட்கவில்லை.
டிரம்பை சீக்ரெட் சர்வீஸ் அதிகாரிகள் சூழ்ந்து நிற்க, அவர்களுக்கு நடுவே எழுந்து நிற்கும் டிரம்ப், அங்குத் திரண்டிருந்த மக்களை நோக்கி கையை உயர்த்தி காட்டுகிறார். இருப்பினும், அவர் செக்யூராக இருப்பதை உறுதி செய்ய அவரை கையை கூட தூக்க விடாமல் சீக்ரெட் சர்வீஸ் ஏஜெண்டுகள் பாதுகாக்கிறார்கள். இவை எல்லாம் நடப்பதற்குள் மேடைக்கு அருகே பாதுகாப்பு வாகனம் வந்துவிட்டது. துப்பாக்கிச் சூடு நடந்ததில் இருந்து இரண்டாவது நிமிடம் டிரம்ப் அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டார்.
ஸ்னைப்பர்கள்: அதேபோல இணையத்தில் பரவும் மற்றொரு வீடியோவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்குப் பிறகு இரண்டு சீக்ரெட் சர்வீஸ் ஸ்னைப்பர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியவரைச் சுட்டுக் கொல்லும் வீடியோவும் இணையத்தில் பரவி வருகிறது. அவர்கள் சில நொடிகளில் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டவரைச் சுட்டுக் கொன்றுவிட்டனர்.












Click it and Unblock the Notifications