ரஷ்யாவை முடக்கிபோடும் அமெரிக்கா.. இந்தியா, சீனாவையும் விடாத டிரம்ப்.. ஒரே கல்லில் 3 மாங்காய்.. ஷாக்
வாஷிங்டன்: ரஷ்யாவும், அமெரிக்காவும் வல்லரசு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் ரஷ்யாவை முடக்க அமெரிக்காவில் புதிய மசோதா கொண்டு வரப்பட உள்ளது. அது ‛ரஷ்யா தடை மசோதா 2025' என்று அழைக்கப்படுகிறது. இதன்மூலம் ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த மசோதா அமெரிக்காவில் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ரஷ்யா மட்டுமின்றி இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளும் பெரும் பாதிப்பை எதிர்கொள்ளும். இதன்மூலம் ஒரே கல்லில் 3 மாங்காய் அடிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த மசோதாவின் சாராம்சம் என்ன? இந்தியா எப்படி பாதிக்கும்? என்பது பற்றி பார்க்கலாம்.
அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் வல்லரசுகளாக உள்ளன. இந்த நாடுகளின் தலைவர்கள் அவ்வப்போது நட்பு பாராட்டி கொண்டாலும் கூட அவர்களுக்கு இடையே போட்டி தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது. சமயம் கிடைக்கும் போதெல்லாம் 3 நாடுகளும் மாறி மாறி காலை வாரி விடுவதை வழக்கமாக வைத்துள்ளன.

இப்போது அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் உள்ளார். இவர் நேரடியாக சீனாவுடன் மோதலை கடைப்பிடித்து வருகிறார். சீனாவுக்கு அதிகப்படியான வரிகளை விதித்து அதிரடி காட்டினார். அதேவேளையில் சீனாவும் அசரவில்லை. அமெரிக்காவுக்கு வரியை தீட்டியது. மறுபுறம் ரஷ்யா - அமெரிக்கா இடையேயான உறவு மிகவும் மோசமாக இருந்தது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தான் இதற்கு காரணம்.
ஆனால் டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபரான பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் உக்ரைன் போர் நிறுத்தம் தொடர்பாக அவ்வப்போது தொலைபேசியில் பேசி வருகிறார். மேலும் ரஷ்ய - அமெரிக்க பிரதிநிதிகள் நேரடியாகவும் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இதன்மூலம் இருநாடுகள் இடையேயான உறவு சற்று நெருக்கமாகி உள்ளது. ஆனால் இன்னும் நல்ல நிலைக்கு செல்லவில்லை.
குறிப்பாக உக்ரைன் மீதான போரை நிறுத்த டொனால்ட் டிரம்ப் கூறியும் ரஷ்யா நிறுத்தவில்லை. இதனால் ரஷ்ய அதிபர் புதின் மீது டொனால்ட் டிரம்ப் கோபத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி ரஷ்யா மீது ஏற்கனவே இருக்கும் பொருளாதார தடைகள் இன்னும் அதிகமாக்கப்படும் என்று அவ்வப்பாது டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார்.
இதற்கிடையே தான் அமெரிக்கா, ரஷ்யாவுக்கு எதிராக புதிய மசோதாவை கொண்டு வர உள்ளது. அந்த மசோதாவின் பெயர் ‛ரஷ்யா தடை மசோதா 2025'. இதன் நோக்கம் என்பது ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கம் செய்வதாகும். அதாவது ரஷ்யா மீது கூடுதலாக பொருளாதார தடைகளை விதிப்பதும், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்பட பிற பொருட்களை வாங்கும் நாடுகளுக்கு கூடுதல் வரிகளை விதிப்பதையும் இந்த மசோதா நோக்கமாக கொண்டுள்ளது.
அதேவேளையில் உக்ரைனுக்கு ஆதரவாக இருக்கும் நாடுகள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும் கூட அந்த நாடுகளுக்கு இந்த மசோதாவின்படி கூடுதல் வரி விதிப்பில் விலக்கு அளிக்கப்பட உள்ளது. அதன்படி பார்த்தால் ஐரோப்பிய நாடுகள் இந்த மசோதாவால் பாதிக்கப்படாது. மாறாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் பெரும் பிரச்சனையை எதிர்கொள்ளும்.
இதுபற்றி அமெரிக்காவின் செனட்டர் லிண்ட்சே கிரஹாம் உறுதி செய்துள்ளார். இந்த மசோதா பற்றி அவர் கூறுகையில், ‛‛ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்கம் செய்ய ‛ரஷ்யா தடை மசோதா 2025' கொண்டு வரப்பட உள்ளது. இந்த மசோதாவில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 500 சதவீத வரிகளை விதிக்கும் அம்சம் உள்ளது. ரஷ்யாவிடம் இருந்து தற்போது சீனா மற்றும் இந்தியா தான் கச்சா எண்ணெயை அதிகமாக வாங்குகின்றன. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 70 சதவீதத்தை இந்த 2 நாடுகளும் தான் வாங்குகின்றன. இந்த பணத்தை ரஷ்யா உக்ரைன் மீது போர் புரிய பயன்படுத்தி வருகிறது.
இதனால் இந்த மசோதாவால் ரஷ்யா மட்டுமின்றி சீனா, இந்தியாவும் பாதிக்கப்படும். இந்த மசோதாவுக்கு கட்சி பாகுபாடு இன்றி ஆதரவு உள்ளது. இதனால் இந்த மசோதா விரைவில் நிறைவேற்றப்படும்'' என்றார். இந்தியாவை எடுத்து கொண்டால் ரஷ்யாவிடம் இருந்து அதிகப்படியான கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. ரஷ்யாவின் கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 38 சதவீதம் இந்தியாவுக்கு வருகிறது. கச்சா எண்ணெய் மட்டுமின்றி நிலக்கரியையும் அதிகமாக வாங்கி பயன்படுத்தி வருகிறது. இதனால் அமெரிக்காவில் இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய், நிலக்கரி உள்ளிட்டவற்றை வாங்கும் சீனா, இந்தியா அதிகம் பாதிக்கப்படும் என்கின்றனர் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications