இன்று வீடு திரும்புகிறேன்...நன்றாக இருக்கிறேன்... கோவிட் கண்டு அச்சம் வேண்டாம்... ட்ரம்ப் பதிவு!!
வாஷிங்டன்: வால்டர் ரீட் ராணுவ மருத்துவ மையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு வீடு திரும்புவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பதிவிட்டுள்ளார். தான் நன்றாக இருப்பதாகவும், யாரும் கொரோனாவைக் கண்டு அச்சமடைய வேண்டாம் என்றும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் உதவியாளருக்கு கொரோனா தொற்று இருப்பதையடுத்து, அவருக்கும், அவரது மனைவி மெலானியாவுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்தப் பரிசோதனையில் அவருக்கும், மெலானியாவுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில் தனக்குதானே வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்திக் கொள்வதாக அறிவித்து இருந்தார். ஆனால், திடீரென ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு மூச்சுத் திணறல் காரணமாக ஆக்சிஜன் அளிக்கப்படுகிறது என்ற செய்தி வெளியானது. இதை மறுக்கும் வகையில் நேற்று ராணுவ மருத்துவமனையின் வெளியே காரில் வந்து அங்கு கூடியிருந்த தனது ஆதரவாளர்களுக்கு கையை அசைத்து சென்றார்.

இதற்கு முன்னதாக இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அளித்து இருந்த பேட்டியில், ''ட்ரம்ப்புக்கு இரண்டு முறை ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டது. இதையடுத்து அவருக்கு ஸ்டீராய்டு ஊசி செலுத்தப்பட்டது. முன்பு கூறியதை விட அவரது உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதில் இருந்து மீண்டு வந்துள்ளார். திங்கள் கிழமை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார்'' என்று தெரிவித்து இருந்தனர்.

அதன்படி இன்று ட்வீட் செய்து இருக்கும் ட்ரம்ப், ''வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் இருந்து இன்று மாலை 6.30 மணிக்கு வீடு திரும்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன். யாரும் கோவிட் தொற்றுக்கு அச்சம் அடைய வேண்டாம். உங்களது வாழ்க்கையை கொரோனா ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள். ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் நல்ல மருந்துகளை மேம்படுத்தி உள்ளோம். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நன்றாக இருக்கிறேன்'' என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவமனைக்கு வெளியே மணிக்கணக்கில், ஏன் நாள் கணக்கில் காத்துக் கொண்டு இருந்த எனது ஆதரவாளர்களுக்கு நன்றி தெரிவிக்க காரில் வெளியே வந்தேன். இதை நான் செய்யாவிட்டாலும் நான் முரட்டுத்தனமான ஆள் என்று மீடியாக்கள் என்னை விமர்சனம் செய்வார்கள். ஆனால் தற்போது நான் செய்த செயலால் பத்திரிக்கையாளர்கள் வருத்தம் அடைந்து இருப்பதாக கேள்விப்பட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 3ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் மருத்துவமனையில் ட்ரம்ப் அனுமதிக்கப்பட்டு இருந்தது பல வகையிலும் விமர்சனங்கள் எழுப்பி இருந்தது.
ட்ரம்ப் மனைவி மெலானியாவும், தான் நன்றாக இருப்பதாகவும், வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்ள இருப்பதாகவும் இன்று டிவிட்டரில் பதிவிட்டு இருந்தார். தனக்கு உதவிய மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications