கொரோனா லாக்டவுன்.. உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பமடைய வாய்ப்பு.. ஐ.நா. அமைப்பு
வாஷிங்டன்: கொரோனாவால் உலகம் முழுவதும் அமலில் உள்ள ஊடங்கு உத்தரவு மேலும் ஆறு மாதங்களுக்கு நீடித்தால், கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் பற்றாக்குறை ஏற்படும். இதனால் உலகம் முழுவதும் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் நிலை ஏற்படும் என ஐநா மக்கள் நிதியம் மற்றும் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
Recommended Video
கொரோனா நோய் தொற்று உலகம் முழுவதும் பரவி வருவதன் காரணமாக உலகின் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லோருக்கும் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதால் பெண்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்துள்ளது. அத்துடன் தேவையின்றி பெண்கள் கர்ப்பம் ஆகும் சூழல் உள்ளதாகவும் ஐநா மக்கள் நிதி கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் நாடாலியா கனெம் கூறியுள்ளார்,
இது தொடர்பாக அவர் கூறுகையில், ஊரடங்கு காரணமாக கருத்தடை சாதனங்கள் மற்றும் மருந்துகள் கிடைப்பது தடைப்பட்டு இருக்கிறது. இதனால் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 4.7 கோடி பெண்கள் கருத்தடை சாதனங்களை உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. ஊரடங்கு இப்படியே ஆறு மாதங்கள் வரை நீடித்தால், உலகம் முழுவதும் சுமார் 70 லட்சம் பெண்கள் கர்ப்பம் அடையும் சூழ்நிலை ஏற்படலாம்.
பல பெண்கள் குடும்பகட்டுப்பாடு செய்து கொள்ள முடியாத நிலையில் உள்ளார்கள். அத்துடன் திட்டமிடப்படாத கர்ப்பத்தால் சிரமத்தை சந்திக்கும் நிலையும் நேரிடலாம். இந்த ஊரடங்கு காலத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் முன்பு இல்லாத வகையில் அதிவேகமாக அதிகரிக்கக்கூடும். நோய் தொற்றானது ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்து உள்ளது.
ஊரடங்கினால் பாலின அடிப்படையிலான வன்முறையானது 3.1 கோடி அளவுக்கு அதிகரிக்கக்கூடும். பெண்கள் திட்டமிடும் திறன் மற்றும் ஆரோக்கியத்தை இழக்க நேரிடும். ஒவ்வொரு 3 மாதத்திற்கும் 1.5 கோடி பாலின அடிப்படையிலான வழக்குகள் உலகம் முழுவதும் அதிகரிக்கக்கூடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது" என்றார்.